Monday, August 24, 2009

57-கண்ணன் தூது

சஞ்சயன் தூதாக வந்து சென்றபின்..தருமர்..எதற்கும் துரியோதனனுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து பார்ப்போம் என்றார்.அதற்கு கிருஷ்ணன் தயாரானார்.

ஆனால் பீமன் கொதித்து எழுந்தான்..'சமாதானம் வேண்டாம்..போர்தான் வேண்டும்' என்றான்.அர்ச்சுனன்,நகுலன்,சஹாதேவனும் சமாதான முயற்சியை விரும்பவில்லை.திரௌபதியும்..அழுதவாறே துரியோதனன் சபையில் தான் பட்ட வேதனையை நினைவூட்டினாள்.

கிருஷ்ணர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார்.இதை அறிந்த திருதிராட்டினன்..மகிழ்வது போல நடித்தான்..விதுரரை அழைத்து 'தேர்,யானை,குதிரை ஆகியவற்றையும் ரத்தினக் குவியல்களையும் பகவானுக்கு பரிசுப் பொருள்களாக வழங்க வேண்டும்.என் நூறு புத்திரர்களும் கண்ணனை எதிர்கொண்டு அழைக்க வேண்டும்.வரவேற்பு பிரமாதமாக இருக்க வேண்டும்' என்றெல்லாம் கூறினான்.

அவன் கருத்தை அறிந்த விதுரர்..'இத்தகைய ஆடம்பரங்களை கண்ணன் விரும்ப மாட்டார்' என்றான்.

அஸ்தினாபுரத்தை அடைந்த கண்ணனும்..இவ் வரவேற்புகளை பொருட்படுத்தாது..திருதிராட்டினன் மாளிகைக்கு சென்றார்.விதுரரின் வீட்டிற்குச் சென்றார்.அங்கிருந்த குந்தி அவரை வரவேற்றாள்.

துரியோதனன் கண்ணனை தன் மாளிகைக்கு விருந்தினராக வந்து மகிழ்விக்குமாறு வேண்டினான்.ஆனால் கண்ணன் சம்மதிக்கவில்லை.காரியம் நிறைவேறுவதற்குள்..தூதுவர் பகைவர் வீட்டில் உண்பது வழக்கமில்லை என்றார்.

கௌரவர்,பாண்டவர் இருவருக்கும் நடுநாயகமாக விளங்கும் தாங்கள் ஏன் எங்களை பகைவராய் எண்ணுகிறீர்கள்? என துரியோதனன் கேட்டான்.

அதற்கு கண்ணன்'பாண்டவர்கள் தர்மத்தை போற்றி நடக்கிறார்கள்.நீ..அந்த தர்மவான்களை அழிக்க எண்ணுகிறாய்.நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்' என்றார்.

துரியோதனனின் விருந்தை கண்ணன் மறுத்தாலும்..அவனது அவைக்கு தூதுவராய் சென்றார்..

திருதிராட்டினனை நோக்கி..துரியோதனனுக்கு அறிவுரைக் கூறி..அவன் அழிவைத் தடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.ஆனால்..திருதிராட்டிரன்..தன் இயலாமையைக் கூறினான்.

பின் கண்ணன் துரியோதனனைப் பார்த்து பேச ஆரம்பித்தார்.

"உனது தந்தையும்,மற்றும் அனைத்து சான்றோரும்..நீ பாண்டவர்களுடன் சேருவதையே விரும்புகின்றனர்.அதைக் கேளாத நீ பெரும் துன்பமடைவாய்.பீமனையும்,அர்ச்சுனனையும் வென்றாலே..உனக்கு உண்மையான வெற்றி கிட்டும்.ஆனால்..அவர்களை வெல்ல உன் பக்கம் யாரும் இல்லை.குலத்தை அழித்த பழி உனக்கு வேண்டாம்.பாண்டவர்களுக்கு பாதி நாட்டைக் கொடுத்துவிட்டு..அவர்களுடன் இணைந்து வாழ்வாயாக' என்றார்.

(கிருஷ்ணன் தூது..அடுத்த பதிவிலும் தொடரும்)

1 comment:

Aravu said...

நான் எப்போதும் தர்மத்தின் சார்பில் இருப்பவன்.தர்மத்திற்கு எதிரி..எனக்கும் எதிரி.அந்தவகையில்..நீயும் எனக்கு பகைவன்.ஆகவே உன் விருந்தை நான் ஏற்கமாட்டேன்

Post a Comment