Saturday, August 15, 2009

56-சஞ்சயன் தூது

பின்..திருதிராட்டிரன் கௌரவர்கள் கருத்தை பாண்டவர்களுக்குத் தெரிவிக்க சஞ்சயனை தூதுவனாக பாண்டவர்களிடம் அனுப்பினான்.'இந்திரப்பிரஸ்தத்தை மட்டுமல்ல..ஒரு கையளவு நிலம் கூட பாண்டவர்க்கு தரமுடியாது.போர் வருமேயாயின்..பாண்டவர் தோல்வியைத் தழுவுவர்.' என்றான் சஞ்சயன் பாண்டவர்களிடம்.

போரில் தருமருக்கு விருப்பமில்லை..ஆனாலும்..நாட்டைத் திருப்பித் தராவிடின்..போர் தவிர வேறு வழியில்லை என அறிந்துக்கொண்ட சஞ்சயன் அதை திருதிராட்டிரனிடம் வந்து தெரிவித்தான்.

திருதிராட்டிரன்..விதுரரை அழைத்து அவர் கருத்தைக் கேட்டான்.விதுரர் நீதிகளைக் கூறினார்.பாண்டவர்களை வீரம் மட்டும் காக்கவில்லை..அவர்கள் போற்றும் தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார்.மேலும்..துரியோதனனிடம்..அது இல்லை என்றும்..அவன் மகத்தான துன்பம் அடையப் போகிறான் என்றும் உரைத்தார்.

திருதிராட்டிரன்..விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும்..புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார்.

அடுத்த நாள் சபையில் இது தெரிவிக்கப் பட்டது.

பீஷ்மர்..'இன்னமும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுங்கள்.இல்லையேல் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம்' என்றார்.

வழக்கம் போல பீஷ்மரை கர்ணன் பழித்தான்.'இவர் நம்முடன் இருந்தாலும்..இவர் மனம் பாண்டவர் வசமே உள்ளது. யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவர்கள் அனைவரையும் அழிப்பேன்' என்றான்.

கர்ணனைக் கண்டித்தார் பீஷ்மர்.'உன் வீரம் அனைவருக்கும் தெரியும்..வெட்டித்தனமாய் பேசாதே' என்றார்.

'எப்போதும்..எனக்கு எதிராய் பேசுவது இவரின் இயல்பு.அர்ச்சுனன் பற்றி இவர் பெரிதாக நினைக்கிறார்.இவர் அர்ச்சுனனிடம் தோல்வி அடையும் வரை நான் போரில் இறங்க மாட்டேன்.பின் அர்ச்சுனனை நான் போரில் கொல்வேன்'என்று கூறிவிட்டு..சபையிலிருந்து வெளியேறினான் கர்ணன்.

துரியோதனனிடம்..பிடிவாதத்தை விடுமாறு திருதிராட்டிரன் கூறியும்..அவன் கேட்கவில்லை.

'தந்தையே! நான் அனைத்து விஷயமும் அறிந்தவன்.இந்த பாண்டவர்கள் சூதாடித்தோற்ற போதே ஏன் போருக்கு கிளர்ந்து எழவில்லை.அவர்களுக்கு மான உணர்ச்சி கிடையாது.சபதம் என்ற பெயரில் வீரவாதம் புரிந்தனர்.தருமர் ஒரு முறை சூதில் தொலைத்தவர்..மீண்டும் இரண்டாம் முறை ஏன் சூதாட வேண்டும்.கிருஷ்ணனின் துணை இப்போது இருப்பதால்..இப்போது போரிடத் தயார் என்கிறார்கள்.போர் தொடங்கட்டும் பார்ப்போம்.என்னிடம் 11 அக்ரோணி படை உள்ளது..அவர்களிடம் 7 மட்டுமே உண்டு.அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை.அதனால்தான் 5 ஊர்கள் போதும் என கெஞ்சிக் கேட்கிறார்கள்.தந்தையே..5 ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன்' என்று கூறிக் கர்ணனைப் போல் அவனும் அவையை விட்டு வெளியேறினான்.

No comments:

Post a Comment