Tuesday, August 4, 2009

54-கிருஷ்ணன் யார் பக்கம்

அபிமன்யுவிற்கும் உத்தரைக்கும் திருமணம் நடந்த மறுநாள் பாண்டவர்களுடன்..திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த மன்னர்கள் வந்திருந்தனர்.தவிர..பலராமர்,கிருஷ்ணர்,துருபதன் ஆகியோரும் இருந்தனர்.எதிர்கால திட்டம் பற்றி கண்ணன் பேசினார்..

'துரியோதனன் வஞ்சனையால் நாட்டை கவர்ந்ததுடன்..பாண்டவர்களுக்கு நிபந்தனை விதித்தான்.அவற்றை பாண்டவர்கள் நிறைவேற்றிவிட்டனர்.இனி துரியோதனன் கருத்து அறிய ஒரு தூதுவனை அனுப்பி..நாட்டில் பாதியை ப் பாண்டவர்க்குத் தர கூற வேண்டும்' என்றார்..

ஆனால்..கண்ணனின் இக்கருத்தை பலராமர் ஏற்கவில்லை.'சூதாட்டத்தில் தோற்ற நாட்டை திரும்பவும் தருமாறு வற்புறுத்துவது நியாயமில்லை.தூதுவன் நயமாக பேசிப்பார்க்கலாம்.கொடுத்தால் பெறலாம்.ஆனால் அதற்காக போர் கூடாது' என்றார்.

'இந்த முக்ய பிரச்னையில் பலராமரின் கருத்து ஏற்றத்தக்கதல்ல.பலநாட்டு மன்னர்களின் உதவி பெற வேண்டும்.முதலில் கேட்போர்க்கே உதவுதல் மன்னரின் இயல்பாகும்.ஆகவே உடன் செயல்பட வேண்டும்.துரியோதனனிடம் செல்லும் தூதுவன் திறை வாய்ந்தவனாய் இருக்க வேண்டும்' என்றார் துருபதன்.

துருபதனின் கருத்து ஏற்கப்பட்டது.

**** *** *** ****

பிற மன்னர்களின் உதவியைப் பெறுவதில்..துரியோதனன் முனைப்புக் காட்டினான்.கண்ணனைப் பார்க்க துவாரகைக்குச் சென்றான்.அதே நேரம் அர்ச்சுனனும் சென்றான்.அப்போது கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார்.கண்ணனின் தலைப்பக்கம் துரியோதனனும்,கால் பக்கம் அர்ச்சுனனும் அமர்ந்திருந்தனர்.கண்விழித்துப் பார்த்த பரமன் கண்களில் முதலில் அர்ச்சுனனே தென்பட்டான்.அர்ச்சுனன் பரமனின் உதவியைக் கேட்டான்.துரியோதனனும் அதே சமயம் கேட்டான்.'நானே முதலில் வந்தேன்' என்றான் துரியோதனன்.'ஆனால் நான் பார்த்தனைத்தான் முதலில் பார்த்தேன் என்றார் கண்னன்.ஆயினும் என் உதவி இருவருக்கும் உண்டு.என் உதவியை இரண்டாகப் பிரிக்கிறேன்.ஆயுதம் இல்லா நான் ஒரு பங்கு..ஆயுதம் ஏந்தி கடும் போர் புரியும் அக்குரோணிப்படைகள் ஒரு பங்கு.அர்ச்சுனன் இளையவனாக இருப்பதால்..அவன் விரும்பியது போக எஞ்சியது உனக்கு'என்றார் கண்ணன்.

அர்ச்சுனன் கண்ணன் மட்டுமே போதும் என்றான்.தனக்குக் கிடைத்த படைப் பெருக்கம் குறித்துப் பெரிதும் மகிழ்ந்தான்..துரியோதனன்.

பின்..பலராமரிடம் செண்ரு உதவிக் கோரினான் துரியோதனன்.பலராமரோ'கண்ணனுக்கு எதிராக என்னால் செயல் பட முடியாது.அதே சமயம் நான் பாண்டவர் பக்கம் போக மாட்டேன்.நடுநிலைமை வகிப்பேன்.போர் நடக்கையில் தீர்த்தயாத்திரை செல்வேன்'என்று கூறிவிட்டார்.

No comments:

Post a Comment