Wednesday, August 26, 2009

58-கண்ணன் தூது (2)

துரியோதனன் பழைய பல்லவியையே திரும்ப பாடினான்.கூர்மையான ஊசி அளவு நிலம் கூட தரமுடியாது என்பதில் உறுதியாய் இருந்தான்.'விதுரர்,பீஷ்மர்,துரோணர் ஆகியோர் எனக்கே அறிவுரை கூறுகின்றனரே..நான் பாண்டவர்க்கு அப்படி என்ன தீது செய்தேன்?'என்றான்.

'துரியோதனா..நீ செய்த தீமை ஒன்றா..இரண்டா.அவர்களை வற்புறுத்தி சூதாடவைத்தாய்..அவையில்..திரௌபதியின் ஆடையை களைய முற்பட்டாய்.வாரணாவதத்தில் தாயுடன் சேர்த்து அவர்களை எரிக்க முயன்றாய்.பீமனைக் கட்டிப் போட்டதும்,விஷம் கொடுத்ததும் ஆகிய கொடுமைகள் செய்தாய்.இப்படி பாவங்களையே செய்த நீ..என்ன தீது செய்தேன் என்கிறாய்..நல்லவன் போல நடிக்கிறாய்.சான்றோர்..உரையையும் நீ மதிக்கவில்லை.சமாதானத்தை விரும்பாத நீ போர்க்களத்தில் அழிவது உறுதி' என்றார் மாதவன்.

இதுகேட்ட..துரியோதனன் கடும் சினம் கொண்டான்.கண்ணனை கைதியாகப் பிடித்துச் சிறையில் வைக்க முயன்றான்.அதைக் கண்டு நகைத்த கண்ணன் தன் விஸ்வரூபத்தை அனைவரும் காணச் செய்தார்.அவரிடமிருந்து எல்லா தேவர்களும் மின்னல் போல் காட்சி அளித்தனர்.எங்கெங்கு நோக்கினும் கண்ணன் தான்.ஒரு கோடி சூரியன் உதயமாயிற்றோ என அனைவரும் திகைத்தனர்.சங்கு,சக்கரம்,கதை,வில்,கலப்பை என எல்லாக் கருவிகளும் அவர் கரங்களில் ஒளி வீசின.

கண்ணனை பீஷ்மர்,விதுரர்,துரோணர்,திருதிராட்டிரன்,அசுவத்தாமா,விகர்ணன் ஆகியோர் கரம் குவித்து வணங்கி வழி அனுப்பினர்.கண்ணன் குந்தியைக் காணச் சென்றார்.அவையில் நடந்தவற்றை அத்தையிடம் கூறினார்.பிறகு கர்ணனைச் சந்தித்து அவனது பிறப்பின் ரகசியத்தைக் கூறினார்.தனது பிறப்பின் ரகசியத்தை..யுத்தத்திற்கு முன் வெளியிட வேண்டாம் என்றான் கண்ணன்.துரியோதனனுடன் ஆன நட்பை யாரும் பிரிக்க முடியாது என்றும் உரைத்தான்.

பின்..தாய் குந்தி தேவி கர்ணனை சந்தித்து..கர்ணன் பிறந்த சூழலை உரைத்தாள்.பின் தாயிடம் கர்ணன்'அர்ச்சுனனைத் தவிர,,மற்ற நால்வருடன் போரிட மாட்டேன்'என உறுதி அளித்தான்.பின்'தாயே!அர்ச்சுனனுடன் ஆன போரில்..யாரேனும் ஒருவர் மடிவோம்..அப்படி நான் மடிந்தால்..என் தலையை தங்கள் மடியில் வைத்து..மகனே எனக் கதறி அழுது..நான் உன் புதல்வன் என்பதை உலகிற்கு உணர்த்து..நான் வெற்றி பெற்றாலும்..என் மூத்த மகன் வென்றான் என உண்மையைத் தெரிவி..ஆனால் எக்காரணம் கொண்டும் போருக்கு முன் என் பிறப்பின் ரகசியத்தை யாருக்கும் அறிவிக்க வேண்டாம் 'என்றான்.

பின்..கண்ணன்..தருமரை சந்தித்து..நடந்த விஷயங்களைக் கூறி..யுத்தத்தை தவிர வேறு வழி இல்லை என்றார்.எல்லாம் விதிப்படி நடக்கும் என்ற தருமர்..தனக்கு துணைக்கு வந்த ஏழு அக்ரோணி படைக்கு..முறையே..துருபதன்,திருஷ்டத்துய்மன்,விராடன்,சிகண்டி,சாத்யகி,சேகிதானன்,திருஷ்டகேது..ஆகியவரை சேனாதிபதியாக நியமித்தார்.அத்தனைப் பேருக்கும் பிரதம தளபதியாக அவர்களில் ஒருவனான திருஷ்டத்துய்யனை நியமித்தார்.

துரியோதனன் சார்பில்..பதினோரு அக்ரோணிப் படைக்கு..கிருபர்,துரோணர்,ஜயத்ரதன்,சல்லியன்,சுதட்சிணன்,கிருதவர்மா,அசுவத்தாமா,கர்ணன்,பூரிசிரவா,சகுனி,பாகுலிகன் ஆகியோர் சேனாதிபதிகளாக நியமிக்கப் பட்டனர்.பிரதம தளபதியாக பீஷ்மர் நியமிக்கப்பட்டார்.

இரு திறத்துப் படைகளும்..அணி வகுத்துக் குருக்ஷேத்ரப் போர்க்களத்தை நோக்கிச் சென்றன.

பலராமர்..முன்னரே..சொன்னபடி..குருக்ஷேத்ரப் போர்க்கால அழிவைப் பார்க்க விரும்பாமல்..தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டார்.

(உத்தியோக பருவம் முற்றும்)....

No comments:

Post a Comment