Wednesday, May 27, 2009

42-ஜயத்ரதனின் தவம்

காம்யக வனத்தில் தங்கியிருந்த பாண்டவர்கள் ஒருநாள் வேட்டைக்கு சென்றனர்.திரௌபதி சில பணியாளர்களுடன் தனித்து இருந்தாள்.அப்போது சிந்து நாட்டு மன்னன் ஜயத்ரதன் சால்வ தேசத்தை நோக்கி அக்காட்டு வழி சென்றான்.அவனுடன் கோடிகாச்யன் முதலிய அரசர்களும் சென்றனர்.

ஆசிரமத்தின் வெளியே நின்றுக்கொண்டிருந்த திரௌபதியை ஜயத்ரதன் கண்டான்.கண்டதும் காதல் கொண்டான்.அதை அவளிடம் வெளிப்படுத்தினான்.

திரௌபதி ..அது கொடிய செயல் என்றும்..தனது வரலாற்றையும் கூறினாள்.'தருமர் வடக்கேயும்,பீமன் தெற்கேயும்,அர்ச்சுனன் மேற்கேயும்,நகுல,சகாதேவர்கள் கிழக்கேயும் வேட்டைக்குச் சென்றுள்ளனர்.அவர்கள் வருவதற்குள் இந்த இடத்தை விட்டு சென்றுவிடு.இல்லையேல் அவர்களால் உனக்கு ஆபத்து ஏற்படும்.' என்றாள்.

அந்த முரடன் எதையும் கேட்பதாய் இல்லை..காமவயப்பட்ட அவன் அவளை தூக்கிச் செல்ல முயன்றான்.அவளது மேலாடையைப்பற்றி இழுத்து தேர் மீது ஏற்ற நினைத்தான்.

அவன் செயலை, உடன் இருந்தோர் தடுத்தும் கேட்கவில்லை.

வேட்டைக்குச் சென்ற ஐவரும் ஓரிடத்தில் கூடினர்.அப்போது..'ஆச்ரமத்தில் ஏதோ ஆபத்து நேர்ந்ததற்கான அபசகுனம் தோன்றுகிறது' என்றார் தருமர்.

விரைவில் ஐவரும் ஆச்ரமத்திற்கு விரைந்தனர்.ஜயத்ரதன் திரௌபதியை அபகரித்து சென்றுவிட்டதை அறிந்தனர்.தேர் சென்ற சுவடை வைத்து..சென்று..ஜயத்ரதனுடன் போரிட்டனர்.அவனுடன் வந்த அரசர்கள் தோற்று ஓடினர்.ஓட முயன்ற ஜயத்ரதனை பீமன் கடுமையாக தாக்கினான்.அவனை கயிற்றில் கட்டித் தேரில் ஏற்றி தருமரிடம் அழைத்து வந்தான் பீமன்.

'தம்பி..இவனை விட்டு விடு.இவன் நமக்கு மைத்துனன்..துரியோதனின் தங்கையான துச்சலையின் கணவன்' என்றார்.

நாணித்தலைக் குனிந்து திரும்பிய ஜயத்ரதன்..கங்கைக் கரைக்குச் சென்று கடும் தவம் இருந்தான்.

சிவன் காட்சியளித்து..'என்ன வரம் வேண்டும்?' என்றார்.

பாண்டவர்களைக் கொல்லத்தக்க வலிமையை எனக்கு அருள வேண்டும்..என வேண்டினான்.

'கண்ணனின் துணையிருப்பதால்..உன்னால் பாண்டவர்களை வெல்ல முடியாது.ஆனாலும் அவர்களை ஒரு நாள் எதிர்த்து நிற்குமாற்றலை உனக்கு அளிக்கிறேன்.ஆனால்..அதனால் அவர்களை அழித்தொழிக்கமுடியும் என எண்ணாதே..' என்று கூறி மறைந்தார்.

அதுவே போதும் என்ற ஜயத்ரதன்..நகரம் போய்ச் சேர்ந்தான்.இந்த ஜயத்ரதன் தான் 13ம் நாள் போரில் மாவீரன் அபிமன்யுவைக் கொன்றவன்.

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Post a Comment