Tuesday, May 10, 2011

150- தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (2)



பின்னர் அமைச்சர்கள் மன்னனை அடைந்து நடந்ததைக் கூறினர்.அதைக் கேட்ட விருஷாதர்ப்பி சினம் கொண்டான்.கடுமையான யாகத்தைச் செய்தான்.யாக குண்டத் தீயிலிருந்து பெண் பேய் ஒன்று தோன்றியது.அதற்கு 'யாதுதானி' எனப் பெயர் வைத்தான்.சப்த ரிஷிகளையும், அருந்ததியையும்,வேலைக்காரர்களையும் நீ அழித்து விடு.அவர்கள் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்.கவனம் இருக்கட்டும் என ஆணையிட்டான்.ஆணைப்படி அந்தப் பேய் அவர்கள் இருக்குமிடம் நாடிச் சென்றது.

அப்போது அந்த ரிஷிகள் காட்டில் காய் கனிகளை உண்டு சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.ஒருநாள் அவர்கள் கை, கால்,முகம், வயிறு ஆகிய இவை பருத்த சரீரம் உடைய 'சுனஸ்ஸகன்' என்ற பெயருடைய துறவியைக் கண்டனர்.அப்போது அருந்ததி ரிஷிகளைப் பார்த்து. 'நீங்கள் இந்தத் துறவியைப் போல தேஜஸ் உடையவர்களாக இல்லையே..ஏன்' என்றாள்.

'இவனுக்கு நம்மைப் போல சாஸ்திரப் பயிற்சி இல்லை. இவனுக்குப் பசி தீர்ப்பது ஒன்றே குறிக்கோள்.இவன் கஷ்டப்பட்டு எதுவும் செய்வதில்லை.ஆகமப் பயிற்சியிலும் ஈடுபடுவதில்லை.அதனால் மூர்க்கன்.சோம்பேறி.இருக்கும் இடத்தைவிட்டு எங்கும் நகர்வது இல்லை.அதனால் உடல் பருத்து இருக்கிறான்' என பதில் உரைத்தனர்.

ஆனால் சுனஸ்ஸகனோ பதில் ஒன்றும் சொல்லாது, அந்த ரிஷிகளைத் தாழ்ந்து வணங்கிப் பணிவிடைகள் செய்தான்.ஒருநாள் ரிஷிகள் காட்டில் மரங்கள் அடர்ந்து நிழல் செய்யும் பெரிய குளத்தைக் கண்டனர்.அந்தக் குளம் யாவராலும் மாசுபடாத நீரைத் தன்னகத்தே கொண்டுவிளங்கியது.அதில் தாமரை மலர்கள் அழகாக மலர்ந்திருந்தன.சேறில்லாது பளிங்கு போல விளங்கும் தூய நீரைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் அக்குளத்தை, விருஷாதர்ப்பி மன்னன் ஏவிய யாதுதானி என்னும் கொடிய பேய் காவல் காத்து வந்தது.ரிஷிகள் தாமரைக் கிழங்குக்காக சுனஸ்ஸகனோடு அக்குளத்தை அடைந்தனர்.பேயைக் கண்டு வியந்தனர்.'நீ யார்? யாருக்காக இங்குக் காத்துக் கொண்டிருக்கிறாய்?என்ன செய்ய நினைக்கிறாய்? என்று வினவினர்.

நான் யாராயிருந்தால் உங்களுக்கென்ன..பொருளற்ற வினாக்களை வினவ வேண்டாம்.இக்குளத்தைக் காவல் காக்கிறேன்..இந்த விடை உங்களுக்குப் போதும் என நினைக்கிறேன் என்றது பேய்.

ரிஷிகள் ஒன்றாக..'நாங்கள் பசியோடு இருக்கிறோம்.அதனால் நாங்கள் தாமரைக் கிழங்குகளைப் பறித்து உண்ண அனுமதி தர வேண்டும் என்றனர்.

ஒரு நிபந்தனைக்கு உட்பட்டால், தாமரைக் கிழங்குகளை எடுத்துக் கொள்ள அனுமதி தருகிறேன் ..உங்கள் பெயரை ஒவ்வொருவராக எனக்குச் சொல்ல வேண்டும் என்பதே அந்த நிபந்தனை என்றாள் யாதுதானி.

ரிஷிகள் ஒவ்வொருவராக பெயரைக் கூறினர்..

முதலில் அத்ரி மகரிஷி 'நான் ஒவ்வொரு இரவிலும் மூன்று முறை அத்யயனம் செய்கிறேன்.அதனால் அராத்ரி என்னும் என் பெயர் அத்ரி ஆயிற்று' என்றார்.

மகரிஷியே உம் பெயரை என் நினைவில் கொள்ள முடியவில்லை..ஆதலால் நீர் போய் குளத்தில் இறங்குக என்றாள் யாதுதானி.

அடுத்து வசிஷ்டர்..'நான் யாவரினும் சிறந்து இருப்பதாலும், சப்தரிஷி மண்டலத்தில் வசிப்பதாலும் எனக்கு வஷிஷ்டர் என்ற பெயர்' என்றார்.இந்தப் பெயரையும் நினைவில் கொள்ள முடியவில்லை.நீரும் போய் குளத்தில் இறங்குக' என்றாள் யாதுதானி.

இது போலவே..பரத்வாஜர்,காச்யபர்,கௌதமர்,ஜமதக்னி,விசுவாமித்திரர்,பசுசகன்..என அனைவரும் தங்கள் பற்றிக் கூற..எதையும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியவில்லை என குளத்தில்

இறங்கச் சொன்னாள் யாதுதானி.

அருந்ததியும், 'நான் என் கணவரின் கருத்துப்படி நடப்பவள்.மேலும் எல்லாப் பொருளையும் தாங்குவதும்,காப்பதுமாகிய இப் பூமியில் நான் என் கணவரை எப்போதும் சார்ந்திருப்பதால், எனக்கு அருந்ததி என்னும் பெயர் அமைந்தது' என்றால்.அப்பெயரையும் நினைவில் வைத்துக் கொள்ள இயலாத யாதுதானி அவளையும் குளத்தில் இறங்கச் சொன்னது.,

கடைசியாக சுனஸ்ஸகன் யாதுதானியிடம் வந்தான்.

(தொடரும்)
 

1 comment:

Post a Comment