Wednesday, May 18, 2011

151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)





சுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.

யாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.

பின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.

அத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான்! காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.

காச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.

ஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.

பரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.

கௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.

விசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.

அருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.

பசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.

சுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.

ரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.

உடன் சுனஸ்ஸகன், "உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.

'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.

1 comment:

Unknown said...

அறியாதவர்களுக்கு இலக்கியம் புகுத்தும் உங்கள் பணி வாழ்க

Post a Comment