Monday, February 14, 2011

144-நாணலும்..கடலும்..கதை





பலம் வாய்ந்த பகைவனிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாணலும் கடலும் பற்றிய கதையைப் பீஷ்மர் கூறுகிறார்.

தருமரே! ஒரு சமயம் அசுரர்களின் இருப்பிடமும் நதிகளின் புகலிடமுமான கடலுக்கு ஒரு ஐயம் வந்தது.அது ஆறுகளை நோக்கி 'நதிகளே..உங்கள் வேகமான பிரவாகத்தின் போது பலம் மிக்க வேர்களை வேரோடும், கிளையோடும் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் நாணலை மட்டும் ஏன் நீங்கள் கொண்டு வருவதில்லை?அது அற்பத்தனமான புல்தானே என்ற அலட்சியத்தால்,அந்த நாணலை விட்டு விடுவீர்களா?உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்றது.அதற்கு கங்கை ஆறு பதில் அளித்தது.

'இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சமும் பணிவின்றி நிமிர்ந்து நிற்கன்றன.வேகமாக வரும் எங்களைச் சிறிதும் மதிப்பதில்லை.பணிவுடன் வணங்குவதில்லை.அதனால் பலனை அனுபவிக்கின்றன.தம் இடத்தை விட்டுப் பெயர்ந்து தலைகுப்பற எங்கள் பிரவாகத்தில் வீழ்ந்து, அடித்து வரப்பட்டு தங்களை அடைகின்றன.ஆனால் நாணலின் கதையே வேறு..பெரியாரைப் பணிதல் என்பது அதன் தனிக் குணம்.எங்களைக் கண்டு பணிந்து வணங்குகின்றது.அதனால் எங்கள் சினத்திற்கு ஆளாவதில்லை.நாங்கள் வரும் போது வளைந்து கொடுத்துப் பின் நிமிர்ந்து நிற்கின்றது.அது சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எங்களுக்கு அடங்கி எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.அதனால் அதன் இடத்திலேயே இருக்கின்றது.இங்கு வருவதில்லை.எந்தச் செடியாயினும் கொடியாயினும் மரமாயினும் எங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.ஆதலால் பணிந்து போவது மட்டும் நிலைத்து வாழ்கிறது.பணிவுடைமையை அறியாது விறைத்து நிற்பவை நிலைத்து நிற்காது எங்களால் அடித்து வரப்பட்டு இங்கே நிலை குலைந்து வீழ்கின்றன.'

'கங்கையின் இந்தக் கூற்றிலிருந்து தருமரே! ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அரசர்க்கு இக்கதை நல்ல பாடம்.பகைவனின் பேராற்றலின் முன் நிற்க முடியாது என்று தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிதல் வேண்டும்.பின் நாணலைப் போல நிலைத்து வாழலாம்.பகைவரின் ஆற்றலை உணர்த்தும் பணிவின்றி சேண் உயர் தேக்கு போல் நிமிர்ந்து நின்றால் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு யாவர்க்கும் வேண்டும்' என்றார் பீஷ்மர்.

2 comments:

RAVINDRAN said...

அருமையன இக்கதை நல்ல பாடம்.பகைவன் முன் தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிந்து பின் நாணலைப் போல தலை நிமிர்ந்து வாழலாம்.அல்லாதோர் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு.

இராஜராஜேஸ்வரி said...

பணிவுடைமை என்றும் பெருமை தரும். வணக்கம்.

Post a Comment