Thursday, March 10, 2011

145-செல்வமாகக் கருத வேண்டியவை எவை?





ஞானம்,சத்தியம்,ஆசை,தியாகம் அகியவற்றின் தன்மையை விளக்குமாறு கேட்டுக் கொண்ட தருமருக்கு பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.

'தருமா..இது சம்பந்தமாக ஒரு தந்தைக்கும் மகனுக்கும் நடைபெற்ற உரையாடலைத் தருகிறேன்.

வேதம் ஓதுவதையே தமது வாழ்க்கையின் முக்கியமாகக் கருதினார் ஒரு அந்தணர்.அவருக்கு மேதாவி என்றொரு மகன் இருந்தான்.பெயருக்கு ஏற்ப அவன் மேதாவியாக விளங்கினான்.முக்தியைப் பற்றிய அறிவும் அவனிடம் இருந்தது.அவன் தந்தையிடம்,'தந்தையே! மனிதனின் ஆயுள் மிகக் குறைவாக இருக்கிறதே..இந்தக் குறைந்த ஆயுளில் நிறைந்த புண்ணியத்தைப் பெறுவது எப்படி?'என வினவினான்.

தந்தை பதில் உரைத்தார்..'மகனே..முதலில் பிரமசர்யத்தில் இருந்த் கொண்டு வேதம் ஓதுதல் வேண்டும்.பிறகு இல்லறத்தில் ஈடுபட்டுச் சிரார்த்தம் முதலான நற்காரியங்களுக்காக மைந்தர்களைப் பெற வேண்டும்.பின் மூன்று அக்கினிகளை உண்டாக்கி, முறைப்படி யாகம் செய்ய வேண்டும்.இறுதியில் காட்டுக்குச் சென்று தவம் இயற்றி முக்திப் பேற்றை அடைய வேண்டும்.'

தந்தையின் இந்தப் பதிலில் திருப்தியடையவில்லை மகன்.அவனது நல்லறக் கருத்துகள் வேறு விதமாய் இருந்தன.'உலகத்தின் இயல்பை நீ நன்கு அறிந்துக் கொள்ளவில்லை போலும்.உலகத்தின் எல்லாப் பக்கங்களிலும் கிழத்தன்மை சூழ்ந்திருக்கிறது.இந்த நிலையில் எமன் விழிப்பாக உயிர் இனங்களைக் கவனித்து வருகிறான்.இதை எண்ணிப் பார்க்க பயமாய் இருக்கிறது.எமன் உலகத்தை ஒவ்வொரு வினாடியும் அழித்துக் கொண்டிருக்கிறான்.இரவும்,பகலும் ஒருவரின் ஆயுளை சிறிது சிறிதாகக் குறைத்துக் கொண்டிருக்கின்றன.இந்நிலையில் மரணவலையில் சிக்கியிருக்கும் துன்பத்தை இன்பமாக மாற்ருவது எப்படி என சிந்திக்கிறேன்.எவன் ஒரு நாளில் எந்த நல்ல செயலையும் செய்யவில்லையோ அந்த நாள் பயனற்ற நாள் என அவன் தெளிதல் வேண்டும்.நமது லட்சியங்கள் நிறைவேறுவதற்கு முன்னரே எமன் நம்மை தொடருகிறான்.

ஒவ்வொருநாளும்,நம் வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிரது.ஆழமற்ற நீர்நிலையில் வாழும் மீன் இன்பத்தை அடையாதது போல மக்கள் இன்பத்தைப் பெற முடிவதில்லை.நிம்மதியாகப் புல்லை மேய்ந்து கொண்டிருக்கும் ஆட்டைச் செந்நாய் கவர்ந்து செல்வது போல மனிதனை எமன் கவர்ந்து செல்கிறான்.ஆதலால் செய்ய வேண்டிய நல் அறங்களை இப்போதே செய்து விட வேண்டும்.ஏன் எனில் 'இந்த நல்ல காரியம் முடியவில்லையே, பாவம்.. என எமன் காத்துக் கொண்டிருக்க மாட்டான்.எப்போது நம் வாழ்நாள் முடியும் என யாராலும் சொல்ல முடியாது.ஆகவே எப்போதும் நல்ல செயல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

புண்ணியச் செயல்களால் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் உண்டாகும்.எப்போதும் தன் குடும்பம்..தன் குடும்பம் என அலைந்து திரிபவன் தகாத செயல்களிலும் ஈடுபடுவான்.குடும்ப நலன் கருதிக் காலப் போக்கில் பாவத்தை செய்யவும் தயங்க மாட்டான்.அத்தகைய அறக் கேடனை, உறங்கும் விலங்கைப் புலி கவர்ந்து செல்வது போல எமன் கவர்ந்து செல்வான்.வீடு,மனை,தோட்டம்,செல்வம் என அவற்றைச் சேர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் மன்னன் அவற்றை அனுபவிப்பதற்கு முன்னமே எமனால் கவரப் படுகிறான்.அறிஞன்-அறிவிலி.வீரன்-கோழை,மன்னன்-சாதாரண மனிதன் என எவ்வித பாகுபாடுமின்றி எல்லோரையும் அவர்கள் செயல் முடிவதற்குள், அவர்கள் ஆயுளை முடித்து விடுகிறான் எமன்.

பிற உயிர்க்கு துன்பம் செய்யாதவனை எந்த உயிரும் துன்புறுத்துவதில்லை.பசி,மூப்பு,பிணி ஆகிய இவை எமனின் படை வீரர்கள் என்பதை உணர வேண்டும்.இப் படை வீரர்களைத் தடுக்கும் சிறந்த கருவி சத்தியம் என்னும் வாய்மையாகும்.வாய்மை அல்லாதவற்ரை விலக்க வேண்டும்.முக்தி என்பது வாய்மையிலேயே நிலைத்துள்ளது.ஐம்புலன்களையும் அடக்கி வாய்மையை போற்றும் ஒருவனாலேயே எமனை எதிர்த்து நிற்க முடியும்.

வாய்மையைப் போற்றுபவன் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுவான்.விரதம்,தவம்,தியானம் இவற்றால் மனம்,சொல்,செயல் ஆகியவை தூய்மை அடையும்.தவத்திற்கு இணையானது வாய்மை.கண்ணுக்கு இணையானது கல்வி.தனித்து இருத்தல்,இன்பதுன்பங்களைச் சமமாக பாவித்தல்,ஒழுக்கம்,பணிவுடைமை,கொல்லாமை ஆகியவற்றையே ஒவ்வொருவரும் செல்வமாகக் கருத வேண்டும்.பிற செல்வங்கள் செல்வமே அல்ல.

ஞானம் தான் கண்!

சத்தியம் தான் மேலான தவம்!

ஆசைதான் மிகப் பெரிய துன்பம்!

தியாகம் தான் அழிவில்லாத இன்பம்!



மேலும், தாய்,தந்தை,தாரம்,மக்கள்,உறவினர்,நண்பர் யாராலும் ஒரு பயனும் இல்லை.தருமம் ஒன்றே துணையாகும்.ஆகவே மனக் குகையில் அடைபட்டிருக்கும் ஆன்மாவைக் கண்டு ஆராதனை செய்ய வேண்டும்.' என்று தந்தைக்கு உபதேசம் செய்தான் மேதாவி என்னும் மகன்.

பீஷ்மர் தருமரை நோக்கி,'மைந்தனின் பேச்சைக் கேட்ட தந்தை வாய்மையைப் போற்றி மேன்மை அடைந்தான்.நீயும் வாய்மையைப் போற்றி உயர்வாயாக' என்றார்.

1 comment:

RAVINDRAN said...

ஐம்புலன்களையும் அடக்கி வாய்மையை போற்றும்

ஒருவனால் மனம்,சொல்,செயல் ஆகியவை தூய்மை

அடையும். என்பதை விளக்கியமைக்கு நன்றி

Post a Comment