Tuesday, December 21, 2010

128-எப்படி இருக்க வேண்டும்..

அரசரோ, பிறரோ பொருளைப் பெறுவது எப்படி? காப்பது எப்படி?பயன்படுத்துவது எப்படி? எனத் தருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

தருமா..சௌவீர நாட்டு மன்னன் சத்ருஞ்சனுக்குப் பரத்வாசர் சொன்னதை உனக்குப் பதிலாகச் சொல்கிறேன்



மன்னன் எப்போதும் தண்டனை தரத் தயாராய் இருக்க வேண்டும்.அப்போதுதான் மக்கள் பயத்துடன் தவறு செய்யாமல் இருப்பர்.தண்டனையே ஒரு அரசின் ஆணிவேர் எனத் தகும்.பெரிய மரம் ஆணிவேர் அறுந்தால் கீழே விழும்.அதன் கிளைகள் முறியும்.அது போலவே தண்டனையில்லை எனில் ஆட்சி எனும் மரம் ஆணிவேர் அற்ற மரம் போல சாயும்.அரசின் கிளை போன்ற மக்களும் பாதுகாப்பின்றித் துன்புறுவர்.அறிவு மிக்க அரசன் பகைவனை வேருடன் களைய முற்பட வேண்டும்.பின் அப்பகைவனுக்கு உதவியாக வருபவர்களையும் தொலைக்க வேண்டும்.சொல்லில் பணிவும்,மனதில் பகை போக்கும் எண்ணமும் நிலைத்திருக்க வேண்டும்.

பகைவனுடன் சேர்ந்து ஆற்ற வேண்டிய பணியில் அவனிடம் சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.அதே நேரம் முழுமையாக அவனை நம்பக் கூடாது.பாம்புடன் பழகுவது போல பகைவனிடம் பயந்தே பழக வேண்டும்.எண்ணம் ஈடேறும் வரை பகைவனைத் தோளில் சுமக்க வேண்டும்.வாய்ப்புக் கிடைக்கும் போது கீழே தள்ளித் தாக்கி வெற்றி காண வேண்டும்.

செல்வத்தை விரும்பும் மனிதன் பணிவுடன் இருக்க வேண்டும்.இன்சொல் கூற வேண்டும்.பிறருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.வாழ்கின்ற காலம் குறைவாக இருந்தாலும் மின்னல் போல ஒளி விட வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல ஒளியின்றி நெடுங்காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.மேலும் நன்றி கெட்டவரிடம் கொடுக்கல் வாங்கல் கூடாது.நன்றி கெட்டவர்கள் காரியம் ஆகும் வரை நல்லபடியே இருப்பர்.ஆனதும் நம்மை அவமதிப்பர்.

மன்னன் , குயில், தான் பாதுகாக்க வேண்டியதை வேறொன்றைக் கொண்டு (காகத்தின் மூலம்) பாதுகாப்பது போல், உழவு,வாணிகம் முதலியவற்றில் பிறர் உதவி கோர வேண்டும்.கோரை முதலியவற்றை வேருடன் உண்ணும் பன்றியைப் போல மன்னன் பகையை வேருடன் களைய வேண்டும்.

சோம்பேறிகளும்,தைரியம் அற்றவர்களும், போலிக் கௌரவம் பார்ப்பவ்ர்களும், பிறர் என்ன சொல்வார்களோ எனப் பயப்படுபவர்களும், விட்டு விட்டு முயல்பவர்களும் பொருள்களையடைய மாட்டார்கள்.

ஆமை போல தன் அவயங்களை மறைத்துக் கொள்ள வேண்டும்.கொக்கு போல ஒரே நினைப்பாய் இருக்க வேண்டும்.சிங்கத்தைப் போல பயமின்றித் தன் வலிமையைக் காட்ட வேண்டும்.போகப் பொருள்களை மிதமாக அனுபவிக்க வேண்டும்.சமயத்திற்கேற்ப குருடன் போலவும்,செவிடன் போலவும் நடிக்க வேண்டும்.இடம், காலம் அறிந்து தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.பகைவரின் வலிமை அறிந்து செயல்பட வேண்டும்.

பயம் வரும் வரை பயந்தவன் போல இருக்க வேண்டும்.பயம் வந்து விட்டாலோ பயம் இல்லாதவன் போல செயல் பட வேண்டும்.

கிடைத்த வாய்ப்பை நழுவ விடுவதும் இன்னொரு வாய்ப்பை எதிர்பார்ப்பதும் அறிவிடையார் செயல் அன்று.

பகைவருடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டு நிம்மதியாகத் தூங்குபவன் நிலை, மரத்தின் நுனியில் படுத்துத் தூங்கியவன் விழுந்த பின் விழித்துக் கொள்வதைப் போல ஆகும்.தன் நாட்டிலும் அயல் நாட்டிலும் யாரும் அறியாதவாறு ஒற்றர்களை நியமிக்க வேண்டும்.தண்ணீர்ச் சாலைகளில்,தோட்டங்களில்,விளையாடும் இடங்களில் அவர்கள் சென்று ஒற்று அறிதல் வேண்டும்.திருடர்களுக்குச் சரியான தண்டனை அளிக்க வேண்டும்.நன்மை,தீமைகளை அறியாதவரையும், தீய வழியில் செல்பவரையும் மன்னன் தண்டிக்க வேண்டும்.இதமாக பேசினாலும் பகைவரை நம்பக் கூடாது.செல்வத்தை விரும்பும் மன்னன் மக்களைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஒருவனைத் தண்டிக்கும் போதும் அவனுடன் அன்புடன் பேச வேண்டும்.வாளால் பகைவனின் தலையை துண்டாக்கிய போது அவனுக்காக அழவும் வேண்டும்.செல்வத்தை விரும்பும் மன்னன் இன் மொழிகளாலும்,வெகுமதிகளாலும்,பொறுமையாலும் அனைவரையும் தன் வயப் படுத்திக் கொள்ள வேண்டும்.

கடனின் மீதி,நோயின் மீதி,பகையின் மீதி ஆகிய இவை உடனுக்குடன் வளரும் தன்மையுடையவை.வளரும் கடனும்,பகைவன் உயிருடன் இருப்பதும்,நோயின் மீதியும் பயத்தை உண்டாக்கும்.செய்ய வேண்டியவற்றைச் செம்மையாகச் செய்து முடிக்க வேண்டும்.முற்றிலும் எடுக்க படாத முள்ளும் உள்ளேயே இருந்து கொண்டு நீண்ட காலம் தொல்லை தரும்.

ஒவ்வொருவரும் கழுகைப் போல் தொலை நோக்குடனும்,கொக்கைப் போல லட்சியத்தின் மீது குறியுடனும்,நாயைப் போல குரைத்துக் கொண்டும்,சிங்கத்தைப் போல் வீரத்தை வெளிப்படுத்திக் கொண்டும் திகழ வேண்டும்.

அரசன் காலத்திற்கேற்ப மென்மையாக இருக்க வேண்டும்.கடுமையாகவும் இருக்க வேண்டும்.மென்மையால் எதையும் சாதிக்கலாம்.கடுமையாக இருப்பவனை மென்மையாக இருந்து வளைந்து கொடுத்து வெற்றி பெறலாம்.ஆகவே மென்மைத்தன்மை கடுமையைக் காட்டிலும் கூர்மையானது.அறிவாளியுடன் பகை கொண்டவன் 'நெடுந் தொலைவில் இருக்கிறேன்' என இருந்து விடக் கூடாது.ஏனெனில் அறிஞனின் கைகள் மிகவும் நீளமானவை.அவன் ஏதாவது துன்பம் செய்து கொண்டே இருப்பான்.சக்திக்கு மீறிய செயலில் இறங்கக் கூடாது.நன்றாக வேர் ஊன்றிய மரத்தை சாய்த்தல் கடினம்.அதுபோலவே வலிமை வாய்ந்த மன்னனை வீழ்த்துவதும் கடினம்.இது முன்னரே சௌவீர நாட்டு மன்னனான சத்ருஞ்சனுக்கு பரத்வாசரால் சொல்லப்பட்டது" என பீஷ்மர் கூறினார்.

2 comments:

Post a Comment