Thursday, December 23, 2010

129-சரணம் அடைந்தவரைக் காப்பாற்றுவது - புறாவின் கதை

தருமர் பீஷ்மரிடம் 'காப்பவனுக்கு எது தருமம்?' என வினவ பீஷ்மர் சொல்கிறார்...

'தருமா..சரணம்-அடைக்கலம் என வந்தவரைப் பாதுகாப்பது உத்தமமான தருமம் ஆகும்..

சிபி முதலான அமைச்சர்கள் அபயம் என வந்தவரைக் காத்ததன் மூலம் உத்தம கதியை அடைந்தார்கள்.பறவைகளுக்குப் பகைவனான வேடன் ஒருவன் புறாவிடம் சரணடைந்தான்.அதனால் நன்கு உபசரிக்கப் பட்டான்.அது தனது மாமிசத்தையே அவனுக்கு அளித்து மேன்மை அடைந்தது' என்ற பீஷ்மர், முன்னர் பரசுராமரால் முகுந்த மன்னனுக்கு ஒரு கதை சொல்லப் பட்டது.பாவங்கள் அனைத்தையும் போக்க வல்ல அந்தக் கதையை இப்போது உனக்குக் கூறுகிறேன்..கேள்..எனக் கதையை கூறத் துவங்கினார்.

முன்னொரு காலத்தில் வேடன் ஒருவன் கொடிய மனதுடன் காட்டில் அலைந்து திரிந்தான்.பறவைகளைப் பிடிக்க இங்கும் அங்கும் வலைகளை விரித்தான்.வேட்டையாடுவதும், பெண் இன்பமும் தான் அவன் தொழில்.நாட்கள் பல சென்ற பிறகும் தனது அதர்மத்தை அவன் உணரவில்லை.

ஒருநாள் பெரும் சுழல் காற்றில் சிக்கிக் கொண்டான்.காட்டில் இருந்த மரங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் பேரொலியுடன் வீழ்ந்தன.எங்கும் பெரு மழை.வெள்ளக் காடு.கடுங்குளிரில் வேடன் நடுங்கினான்.வீடு செல்ல வழி தெரியவில்லை.பறவைகள் பெரு மழையால் வெளிவர இயலாது மரப் பொந்துகளில் பதுங்கிக் கிடந்தன.காட்டு விலங்குகளான சிங்கங்களும்,புலிகளும் மழையால் துன்புற்றுத் தரையில் வீழ்ந்தன.செல்லவும் முடியாமல், நிற்கவும் இயலாது தவித்துக் கொண்டிருந்த வேடனின் கண்ணில் பட்டது ஒரு பெண் புறா.பாவியான அந்த வேடன் அப்புறாவை எடுத்துத் தனது கூண்டில் போட்டுக் கொண்டு..ஒரு பெரிய மரத்தை அடைந்தான்.பறவைகளின் சரணாலயம் போல அம்மரம் தோற்றம் அளித்தது.

சிறிது நேரத்தில் மழை நின்றது.நீலவானம், நட்சத்திரங்களுடன் பளீச்சென தோற்றமளித்தது.குளிரால் நடுங்கிய வேடன் நேரத்தை யூகித்து அறிந்தான்.வீடு செல்வதற்குரிய நேரம் அல்ல அது.எனவே எஞ்சிய இரவுப் பொழுதை அம்மரத்தடியிலேயே கழிக்க எண்ணினான்.அம் மரத்திற்கு வணக்கம் செலுத்தி விட்டு , இலைகளை பாயாகப் பரப்பினான்.ஒரு கல்லையே தலையணையாகக் கொண்டு படுத்தான்.தூக்கம் வந்தது.

அம்மரத்தின் கிளையில் ஆண்புறா ஒன்று தன் இணையுடன் வாழ்ந்து வந்தது.காலையில் இரை தேடச் சென்ற அப்பெண் புறா இன்னும் திரும்பவில்லை.ஆண் புறா வருத்தத்துடன் 'பெருமழையில் என் பெண் புறாவிற்கு என்ன ஆயிற்றோ எனத் துன்புற்றது.என் மனைவி இல்லா வீடு சுடுகாடு போல தோன்றுகிறது,மகன்,மகள்,பேரன்,பேத்தி ..இப்படி வீட்டில் யார் இருந்து என்ன பயன்? மனைவியில்லையெனில் வாழ்க்கை ஏது?' எனப் புலம்பி அழுதது ஆண் புறா.

இந்த அழுகை ஒலி வேடனின் கூட்டில் அடைபட்டிருக்கும் பெண் புறாவின் காதில் விழுந்தது.'என் கணவர் என் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார்.நான் உண்மையில் பாக்கியசாலிதான்.எந்தப் பெண் கணவனால் அன்புடன் நேசிக்கப் படுகிறாளோ, அவள் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய் விடுகிறாள்.பெண்களுக்கு, எவன் அக்னி சாட்சியாய் மணக்கிறானோ அவன் தான் தெய்வம்.எந்தப் பெண் கணவனால் பாராட்டப் படவில்லையோ அவள் வாழ்க்கை காட்டுத் தீயால் பற்றப்பட்ட பூங்கொத்து சாம்பல் ஆவது போல சாம்பல் ஆகும்' என்று தன் கணவனின் அன்பை எண்ணி மகிழ்ந்தது.அதே நேரத்தில் கூண்டில் அடைப்பட்டுக் கிடப்பதால் துன்புற்றது.அப்படி வேடனால் பிடிக்கப் பட்டு துன்புறும் போதும் அந்தப் பெண் புறா தன் ஆண் புறாவை நோக்கிக் கூறத் தொடங்கியது.

'உமது நலனுக்காக சிலவற்றைக் கூறுகிறேன்.அடைக்கலம் என யார் வந்தாலும் அவர்களை நன்கு உபசரிக்க வேண்டும்.வேடன் ஒருவன் உமது இடம் வந்து குளிராலும், பசியாலும் துன்புற்றுப் படுத்திருக்கிறான்.அவனுக்கு வேண்டிய உதவிகளை நீர் தர வேண்டும்.புறாக்களுக்கு உரிய தருமம் நீர் அறியாததல்ல.இல்லறத்தான் ஒருவன் தன் சக்திக்கு மீறி தர்மம் செய்வான் என்றால், மறுமையில் அளவில்லாத இன்பத்தை அவன் அடைவான்.நீர் உமது உடம்பின் மீது உள்ள பற்றை விட்டு விட்டு, அறத்தின் மீது பற்றுக் கொண்டு இந்த வேடன் மகிழ்ச்சி அடையும்படி செய்யுங்கள்.என்னை நினைத்து வருந்த வேண்டாம்' என்று கூறிய பெண்புறா தலையை உயர்த்தித் தன் கணவனின் செய்கையைக் கூர்ந்து கவனித்தது.

நுணுக்கமாக உபதேசம் செய்த பெண் புறாவின் சொற்களைக் கேட்ட ஆண் புறா மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தது.அந்த வேடனை வணங்கி..'உமது வரவு நல்வரவாகட்டும்.நீர் இப்போது என் விருந்தினர்.விருந்தினரை உபசரிப்பது கடமை.வீட்டிற்கு வந்தவன் பகைவனாய் இருந்தாலும் கூட அவனைக் காப்பதே கடமையாகும்.பெரிய மரமானது, தன்னை வெட்டி வீழ்த்துப்வனுக்கும் நிழல் தரத் தவறுவதில்லை.ஆகவே உமக்கு என்ன வேண்டும் என்று சொல்லவும்.அதை நிறைவேற்றுகிறேன்..' என்றது.வேடனும்..'என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை..அதனைப் போக்கவும்' என்றான்.

உடனே புறா, உலர்ந்த சுள்ளிகளையும், சரகுகளையும் கொண்டு வந்து குவித்து, தேடி அலைந்து நெருப்பையும் கொணர்ந்து தீ மூட்டியது.வேடன் குளிர் நீங்கியதும்..அவனுக்கு பசிக்க ஆரம்பித்தது.'எனக்கு பசிக்கிறது' என்றான் வேடன்.

புறா வேடனை நோக்கி, 'உன் பசியைப் போக்கத் தக்க செல்வம் என்னிடம் இல்லை.துறவிகளைப் போல நாங்களும் எதையும் சேர்த்து வைப்பதில்லை' என்று கூறி 'உன் பசியை சிறிது நேரம் பொறுத்துக் கொள் என்றுக் கூறி சுள்ளிகளைக் கொண்டு பெருந் தீீயை உண்டாக்கியது.பின் வேடனை நோக்கி..'என்னையே உணவாகக் கொண்டு உன் பசியைப் போக்கிக் கொள்' என்று கூறித் தீயில் வீழ்ந்து உயிர் துறந்தது.அது கண்டு வேடன் திடுக்கிட்டான்.'என்ன கொடுமை செய்து விட்டேன்' என்று புலம்பி அழுதான்.

வேடன் புறாவின் முடிவு கண்டு மனம் பதறினான்...'கொடியவனாகிய நான் என்ன காரியம் செய்து விட்டேன்..இனி நான் வாழ்ந்து என்ன பயன்..தன்னைத்தானே மாய்த்துக் கொண்ட இப் புறா மகாத்மா ஆகிவிட்டது.நான் பாவியாகி விட்டேன்.இனி உற்றார், உறவினரை விட்டு உயிர் விடத் தயாராகி விட்டேன்.இதற்கு இந்தப் புறாவே எனக்கு வழிகாட்டி.எல்லாப் போகங்களையும் இன்று முதல் துறந்து விடுகிறேன்.கோடை காலத்துக் குளம் போல என் உடல் வற்றி,துரும்பாகட்டும்.பசி,தாகம்,வெயில்,மழை,பனி இவற்றைப் பொருட்படுத்தாது உபவாசம் இருப்பேன்.மறுமை நோக்கித் தருமம் செய்வேன்.தவம் செய்வேன்' என உறுதி பூண்டான்.கையிலிருந்த வில்லையும், அம்பையும் ,பறவைகள் அடைத்து வைத்திருக்கும் கூண்டையும் தூக்கி எறிந்தான்.கூண்டில் இருந்த பெண் புறாவையும் வெளியே செலுத்தினான்.தானும் புறப்பட்டான்.

வேடன் சென்றதும் அந்தப் பெண் புறா தன் கணவனை நினைத்துத் துயரத்தில் வாடியது.'உம்மிடம் நான் கொண்ட அன்புக்கு குறைவு ஏது? பிள்ளைகள் பலரைப் பெற்ற போதும் கணவனை இழந்த மகளிர் துன்புறுவர்.கணவனை இழந்தோர்க்கு யாரைக் காட்டி ஆறுதல் அளிக்க முடியும். இதுவரை இணை பிரியாது வாழ்ந்தோம்.ஆறுகளிலும்,மலைகளிலும்,மரக் கிளைகளிலும் இன்பமாக பாடித் திரிந்தோம்.இனி அந்த நாட்கள் வருமா?கணவனுக்கு இணையான தெய்வமும் இல்லை..அன்பரே!நீர் இன்றி நான் வாழப்போவதில்லை.கற்பிற் சிறந்த எந்தப் பெண் தன் கணவனை இழந்த பின் உயிர் வாழ்வாள்?" எனக் கூறிக் கொண்டே ஆண் புறா வீழ்ந்த தீயில் தானும் வீழ்ந்து உயிர் நீத்தது.

என்ன வியப்பு!!!

அழகான ஆடை அணிகலங்களை அணிந்ததும், மேலோரால் புகழப்படுவதும் ,விமானத்திலேறிச் சுவர்க்கம் செல்வதுமான தனது கணவனை அப் பெண் புறா அடைந்து சுவர்க்க இன்பத்துடன் வாழ்ந்து வந்தது.

சுவர்க்க பூமியில் மகிழ்வுடன் செல்லும் இரு புறாக்களையும் கண்ட வேடன் மனமாற்றம் அடைந்தான்.தானும் தவத்தை மேற்கொண்டு அந்தப் பறவைகளைப் போல சுவர்க்கம் செல்ல வேண்டும் என் உறுதி கொண்டு, தன் தொழிலை விட்டான்.விரதங்களை மேற் கொண்டான்.

ஒருநாள் செல்லும் வழியில் அழகான குளத்தைக் கண்டான்.அக்குளத்தில் நீர் நிறைந்திருந்தது.பறவைகளின் ஒலி எங்கும் ஒலித்துக் காதுக்கு இனிமையாக இருந்தது.வேடனுக்கு தாகம் இருந்த போதும் குளத்தை நாடவில்லை.கொடிய விலங்குகள் வாழும் காட்டை நோக்கி நடந்தான்.அப்போது பெருங்காற்று வீசியது.மரங்கள் ஒன்றோடொன்று உராய்ந்தன.தீப்பொறி கிளம்பிக் காடே தீப்பற்றி எரிந்தது.விலங்குகள் அஞ்சி ஓடின.ஆயினும் அந்த ஆபத்தினின்றும் தப்பிச் செல்ல வேண்டும் என வேடன் கருத வில்லை.தீயில் எரிந்து பாவத்தைத் தொலைத்துச் சுவர்க்கம் அடைந்தான்.

தருமா...நற்செயலால் ஆண் புறாவும்,பெண் புறாவும் சுவர்க்கம் அடைந்தன.தவற்றினைத் திருத்திக் கொண்டு நல்லொழுக்கத்துடன் வாழ்ந்த வேடனும் சுவர்க்கம் அடைந்தான்.ஆகவே நல்லொழுக்கம் மேற்கொள்க" என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment