Wednesday, December 29, 2010

133-அறியாமை பற்றி அறிதல்

தருமர் பீஷ்மரை நோக்கி..'பிதாமகரே! அறியாமை பற்றி அறிய விரும்புகிறேன்' என பணிவிடன் கேட்க பீஷ்மர் சொல்லத் தொடங்கினார்.



"மனிதன் அறியாமையால் பாவம் செய்கிறான்.அதனால் தனக்குத் தகுதியானதை அறிந்து கொள்ளாது சாதுக்களிடம் குறை காண்கிறான்.உலக நிந்தனைக்கு ஆளாகிறான்.தீய கதியாகிய நரகத்திற்கு அறியாமையே காரணம் ஆகிறது.அதனால் ஆபத்தில் சிக்கித் துன்பம் அடைகிறான்.

ஆசை,பகை,காமம்,சினம்,கர்வம்,விருப்பு,வெறுப்பு,பிறர் ஆக்கம் கண்டு பொறாமை கொள்ளுதல் ஆகிய இவை யாவும் அறியாமையால் தோன்றுபவையே! ஆகவே அறியாமையை அகற்றுவாயாக!" என்றார்

உடன் தருமர்..'மேலோனே! தருமம் பலவகையாகக் காணப்படுகிறதே, எது சிறந்த தருமம் எனக் கூற முடியுமா?'என வினவ

'பேரறிவு படைத்த தருமா..மகரிஷிகள் பல வகையான தருமங்களை உபதேசித்து இருக்கிறார்கள்.அவற்றில் மிகச் சிறந்தது புலனடக்கம் ஆகும்.இதுவே முக்திக்குக் காரணமாகும்.புலன் அடக்கம்...,தானம்,யாகம் ஆகியவற்றை விட மேலானது.புலனடக்கம் உடையவனின் முகம் பொலிவுடன் ஒளி வீசும்.புலன் அடக்கம் தரும சிந்தனையை வளர்க்கும்.உயிர்களிடத்து அருளுடைமையைத் தூண்டும்.

புலனடக்கத்திற்கான அடையாளங்களைத் தெரிந்து கொள்.பொறுமை,துணிச்சல்,கொல்லாமை,நன்மை..தீமைகளைச் சமமாக பாவித்தல்,வாய்மை,நேர்மை,நாணம்,சினம் இன்மை,இன்சொல்,யாவரிடத்தும் அன்புடன் பேசுதல்..இவையெல்லாம் புலனடக்கத்தால் ஏற்படும்.புலனடக்கம் உள்ளவனை யாரும் பழிக்க மாட்டார்கள்.அவன் ஆசை அற்றவன்.அற்ப சுகங்களை விரும்பாதவன்.உற்றார், உறவினர் என்ற பந்தங்களினின்றும் அவன் விடுபட்டவன்.பிறருடைய புகழ்ச்சியோ, இகழ்ச்சியோ அவனைப் பாதிப்பதில்லை.சாதுக்களால் பின்பற்றப்பட்ட வழியே அவன் செல்லும் பாதை ஆகும்.புலன் அடக்கம் உள்ளவன் தவம் புரியக் காடு செல்ல வேண்டியதில்லை.அது இல்லாதவன் காடு சென்றும் பயனில்லை.ஆதலால் அவனுக்கு எது வாழும் இடமோ அதுவே காடு..அதுவே ஆஸ்ரமம்' என்றார் பீஷ்மர்.



134-தவத்தின் மேன்மை



இந்த உலகமே தவத்தால் இயங்குகிறது.தவத்தை மேற்கொள்ளாதவனுக்கு ஒரு காரியமும் நடைபெறாது.தவத்தால்தான் பிரமதேவன் இவ்வுலகைப் படைத்தான்.மாமுனிகள் ஞானத்தைப் பெற்றதும் தவத்தால்தான்.மன அடக்கம் உள்ள சித்தர்கள் தவத்தினால் மூவுலகையும் அறிகிறார்கள்.பெறுதற்கு அரியதும் தவத்தால் கூடும்.பாவங்களிலிருந்து விடுபட உதவுவதும் தவம் தான்.

தவம் பல வகை.எனினும் உபவாசத்தை விட உயர்ந்த தவம் இல்லை.கொல்லாமை,வாய்மை,தானம்,புலனடக்கம் ஆகிய இவற்றைவிட மேலானது உண்ணாவிரதம்.

தாய்க்குச் செய்யும் பணிவிடையைக் காட்டிலும் மேலான தவம் இல்லை.முற்றும் துறந்த துறவிகூடத் தாயைப் பாதுகாக்க வேண்டும் என்பது விதி என்றார் பீஷ்மர்.

No comments:

Post a Comment