Monday, April 5, 2010

95-கண்ணன் தருமருக்கு உரைத்தல் (2)

(தருமருக்கு..கண்ணன் மேலும் நாரதர் சொன்னதைச் சொல்கிறார்)

திலீபன் என்னும் மன்னன் புகழை உலகம் போற்றுகிறது.அவன் யாகத்தின் போது பொன்னாலான யானைகளைத் தானமாக அளித்தான்.இந்திரன் முதலான தேவர்கள் அவனை வழிபட்டனர்.அவன் முன்னால் ஆயிரம்..ஆயிரம்..தேவர்களும்..கந்தர்வர்களும் நடனம் ஆடினர்.அவன் அவையில் வசு என்னும் கந்தர்வன் வீணை வாசித்தான்..அந்த வீணையிலிருந்து எழும் இனிய ஒலி கேட்டு உயிரினங்கள் மகிழ்ச்சி அடைந்தன.அவனது நாட்டில் தங்கக் கவசம் பூண்ட யானைகள் மதம் பிடித்து எங்கும் திரிந்தன.அந்தத் திலீபனும் இறந்து விட்டான் எனில்..உன் மகன் இறந்ததற்கு ஏன் அழுகிறாய்.

மூன்று உலகங்களையும் வெற்றி கொண்ட மாந்தாதா என்னும் மன்னனும் மாண்டு போனான்.குழந்தையாக தேவ வடிவத்தில் தன் தந்தையின் மடியில் படுத்திருந்த போது..இந்திரன் 'இந்தக் குழந்தைக்கு நான் பால் தருவேன்' என தன் கை விரலை அதன் வாயில் வைத்தி பால் பெருகச் செய்தான்.அந்தப் பாலின் சக்தியால் மாந்தாதா பன்னிரெண்டு நாட்களிலேயே வளர்ந்து வாலிபன் ஆனான்.ஆற்றல் மிக்க அவன் பூமி முழுதும் வென்று தனதாக்கிக் கொண்டான்.அவன் அங்காரகன் என்னும் அரசனை எதிர்த்துப் போர் செய்கையில் எழுந்த நாண் ஒலியால் தேவலோகம் இடிந்து விழுமோ எனத் தேவர்கள் நடுங்கினர். அவன் நூற்றுக்கும் மேலான அசுவ மேத யாகங்களையும்..ராஜசூய யாகங்களையும் செய்தான்.அவன் ஆயுளும் ஒரு நாள் முடிந்தது

நகுஷன் மகன் யயாதி புகழ் வாய்ந்தவன்..பூமி முழுதும் யாகசாலையாக மாற்றியவன் அவன்.அவன் தங்க மலைகளைத் தானம் செய்த பெருமை மிக்கவன்.அவன் காட்டை அடைந்து தவம் இயற்றி மாண்டு போனான்.

நாபகன் என்னும் மன்னனின் மகன் அம்பரீஷன்.அவன் இயற்றிய யாகத்தில் பத்து லட்சம் அரசர் பணி புரிந்தனர்.அவனைப் போன்ற சிறந்த மன்னன் மூவுலகிலும் இல்லை என மக்கள் புகழ்ந்தனர்.அவனுக்கு பணி புரிந்தோர் அனைவரும் புண்ணிய உலகம் அடைந்தனர்.கடைசியில் அந்த மன்னனும் மாண்டான்.

சித்திரதன் என்னும் மன்னனின் மகன் சசபிந்து..நூறு நூறு யானைகளையும்.ஒவ்வொரு யானைக்கும் நூறு நூறு தேர்களையும்..ஒவ்வொரு தேருக்கும் நூறு நூறு குதிரைகளையும்..ஒவ்வொரு குதிரைக்கும் நூறு நூறு பசுக்களையும்..ஒவ்வொரு பசுவிற்கும் நூறு நூறு வெள்ளாடுகளையும் ஒவ்வொரு வெள்ளாட்டுக்கும் நூறு நூறு செம்மறியாடுகளையும் கொண்ட அளவற்ற செல்வத்தை யாகத்தின் போது தானமாக அளித்தான்..அத்தகைய தான திலகனான சசபிந்துவும் மாண்டான்.

அதூர்த்தரஜஸ் என்னும் மன்னனின் மகன் கயன்.அவன் ஆட்சியில் நாடெங்கும் அமைதி நிலவியது.அவன் பல யாகங்களைச் செய்தான்..யாகத்தின் போது நூறாயிரம் பசுக்களையும்..பதினாறாயிரம் குதிரைகளையும் தானமாக அளித்தான்.அசுவமேதம் என்னும் பெரும் யாகத்தின் முடிவில் ஐம்பது முழ அகலமும் நூறு முழ நீளமும் கொண்ட பொன் விளையும் பூமியைத் தானமாகக் கொடுத்தான் பொன்னும், பொருளும்,போகமும் பெற்றிருந்த அந்தக் கயனும் மாண்டு விட்டான்

ரத்தி தேவன் என்னும் மன்னன்சங்கிருதியின் மகன் ஆவான்..புகழ் வாய்ந்த அவன் வேள்விச் சாலையில் இருந்த குடங்கள், தோண்டிகள், அண்டாக்கள், அனைத்தும் பொன்னாலானவை.அவன் செய்
த, தர்மங்களுக்கு அளவே இல்லை.'எங்களை நல்ல செயலுக்கு பயன் படுத்திக் கொள்ளுங்கள்' என்றுக் கேட்டுக் கொண்டு நாட்டிலும்,காட்டிலும் இருந்த பசுக்கள் அம்மன்னனை வந்தடைந்தன.அத்தகைய பெருமை மிக்க மன்னனும் மடிந்தான்.

இட்சுவாகு குல அரசன் சகரன்..அவனுக்கு அறுபதினாயிரம் மைந்தர்கள்.அந்தச் சகர புத்திரர்களால் தோண்டப்பட்டதால் கடல் சாகரம் எனப் பெயர் பெற்றது.சகரன் ஆயிர அசுவமேத யாகங்களைச் செய்து தேவர்களை மகிழ்வித்தான்.பூமி முழுதும் ஒரே குடைக் கீழ் ஆண்ட அந்தச் சகரனும் மாண்டான்

வேனனின் மகன் பிருது என்னும் அரசன், மகரிஷிகள் ஒன்று கூடி..'நாட்டைப் பெருகச் செய்வான் இவன்' எனக் கருதி பிருது எனப் பெயரிட்டு முடிசூட்டினர்.அவன் உலகத்தை ஆபத்திலிருந்து காத்ததால் க்ஷத்திரியன் என்றும் அழைக்கப் பட்டான்.அவன் கடல் மீது செல்கையில் கடல் நீர் கல்லைப்போல் உறுதியாக இருந்து வழி அமைத்துத் தரும்.அவன் செய்த அசுவமேத யாகத்தின் போது மூன்று ஆள் உயரமுள்ள இருபத்தொரு தங்க மாலைகளை வேதியர்க்கு தானம் செய்தான்.அத்தகைய வள்ளலும் இறந்தான்

'சிருஞ்சயனே..இவ்வாறு பதினாறு மாமன்னர்களும் மாண்டார்கள் என்றால்..உனது சிறு பாலகன் இறந்ததற்கு வருந்தலாமா?' என நாரதர் ஆறுதல் கூறினார்.

இந்த வரலாற்றைக் கூறிய நாரதரும் இங்கு வீற்றிருக்கிறார்.ஆதலால்..தருமரே..உலக இயல்பு இதுதான் எனத் தெளிந்து மனக்கவலை விலக்கி மண்ணாள் செல்வத்தை ஏற்றுச் சிறப்பாக ஆட்சி புரிவாயாக!' எனக் கண்ணன் கூறி முடித்தார்.

கண்ணனைத் தொடர்ந்து வியாசர் பல அறங்களை எடுத்துரைத்தார்.தருமரை அசுவமேத யாகம் புரிய வற்புறுத்தினர்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

அப்பா!! ஒரு பதிவில் எத்தனைக் கதைகள். வாழ்க்கையின் நிலையாமையும், மரணத்தின் தன்மையும் எத்தனை அழகாய் விளக்கம் பெறுகின்றது. மிக்க நன்றி அய்யா.
நம்ம கடைப்பக்கம் வந்து எத்தனை நாள் ஆயிற்று அய்யா.

Post a Comment