Friday, April 23, 2010

98-நெஞ்சை உருக்கும் சந்திப்பு

குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில் அம்புப் படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரைக் கண்டனர்.கண்ணனும்,பாண்டவர்களும்,கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர்.அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார்.

'அறிவின் சிகரமே..அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா?உமது அறிவு தெளிவாக உள்ளதா?உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர்..நீர் அனைத்தும் அறிந்தவர்.சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும் அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும் உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை.தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே வெல்ல வல்லீர்.எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன்.பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை.இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன.இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும்.மனித குல மாணிக்கமே..தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் விலக்க வேண்டும்"

கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார்.மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார்..'உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே..உம்மை நான் சரணடைந்தேன்..உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன்..உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது.உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன.திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன.சூரியன் உமது கண் ஆவான்.காயாம்பூ மேனி உடையவரே..மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன்..தாமரைக்கண்ணனே..பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்' எனத் துதிச் செய்தார்.

கண்ணபிரான் .,'எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன்.இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள்.இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை.சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும்.நீர் அழிவற்ற உலகத்தை அடையப் போகிறீர்..பீஷ்மரே..நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும்.அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர்.தருமரின் சோகம் போக..அவர் சந்தேகம் அகல..சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக..தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்' என்று கூறினார்.

3 comments:

நாமக்கல் சிபி said...

நல்ல இடுகை!

Ragavachari B said...

மகாபாரத போர் முடிந்த பின் நடந்த நிகழ்வுகளை நான் இப்போது தான் படிக்கிறேன். மிக மிக அருமையான நல்ல பதிவுகள். இது போன்ற பதிவுகளை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தொடர் பதிவுகளுக்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Ragavachari B said...

மகாபாரத போர் முடிந்த பின் நடந்த நிகழ்வுகளை நான் இப்போது தான் படிக்கிறேன். மிக மிக அருமையான நல்ல பதிவுகள். இது போன்ற பதிவுகளை படிப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த தொடர் பதிவுகளுக்க்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

Post a Comment