Sunday, November 29, 2009

78-வாழ்க்கை ஒரு காடு

அஸ்தினாபுரமே துயரக் கடலில் ஆழ்ந்திருந்தது.போரில் இறந்தவர்கள் வீடுகள் எல்லாம் துயரத்தில் மூழ்கி இருந்தது.மைந்தரை இழந்த திருதிராட்டிரன்,காந்தாரி இருவரும் வேரற்ற மரமாய் வீழ்ந்து வேதனையில் துடித்தனர்.விதுரர் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.இவை உலக மக்களுக்கு உரைத்த பொன்மொழிகளாக எண்ணலாம்.

விதுரர் - 'யாருக்குத்தான் மரணமில்லை.மரணத்திற்கு வயது வரம்பு கிடையாது.மரணம் எந்த வயதில் வேண்டுமானாலும் நிகழலாம்.போர்க்களத்தில்..போரில் ஈடுபடுவோர் பிழைப்பதும் உண்டு..வீட்டில் பலத்த பாதுகாப்போடு இருப்பவர் இறப்பதும் உண்டு.பழைய உடையை நீக்கிவிட்டு புதிய உடையை உடுத்துவது போல உயிர்கள் இந்த உடலை விட்டு வினைப்படி வேறு உடலை எடுத்துக் கொள்கிறது. வினைப்பயன் யாரையும் விடாது பற்றும் தன்மை உடையது.நாம் விதைக்கும் விதை முளைப்பது போல நாம் செய்த வினைப்பயன் நம்மை வந்து அடையும்.

மேலும் அவர் கூறுகிறார்..ஒருவன் ஒரு கொடிய காட்டை அடைந்தான்.அங்கு சிங்கம்,புலி முதலிய கொடிய விலங்குகள் அவனைத் துரத்தின.அவன் தப்பித்து ஓடினான்.ஓட..ஓட..ஒரு புலி அவனை துரத்தியது.விரைந்து அவன் ஒரு மரத்தின் மீது ஏறும் போது தவறிப் பாழுங் கிணற்றில் வீழ்ந்தான்.பாதிக் கிணற்றில் கொடிகளைப் பற்றிக் கொண்டு தலை கீழாகத் தொங்கினான்.கிணற்றுக்கடியில் இருந்த கரும்பாம்பு சீறியது.கிணற்றுக்கருகில் இரண்டு முகமும் ஆறு கொம்புகளும் பன்னிரெண்டு கால்களும் உடைய யானை ஒன்று பயங்கரமாகச் சுற்றித் திரிந்தது.ஆதரவாகப் பிடித்துக் கொண்டிருந்த கொடிகளை கருப்பும், வெள்ளையுமான இரண்டு எலிகள் கடித்துக் கொண்டிருக்கின்றன.அப்போது மரத்திலிருந்த தேன்கூட்டிலிருந்து தேன் சொட்டு சொட்டாகத்..துளித் துளியாகச் சிந்தியது.அவனோ தன்னைச் சூழ்ந்திருக்கும்..புலி,பாழுங்கிணறு,யானை,பாம்பு,எலிகள் ஆகிய ஆபத்துகளை மறந்து சிந்தும் தேன் துளியைச் சுவைத்திருந்தான்.அந்த ஆபத்திலும் உயிர் வாழ்க்கையை விரும்பினான்..
என்ற விதுரர் இந்த உருவகத்தை மேலும் விளக்கினார்..

மனிதன் சென்றடைந்த காடுதான் சம்சார வாழ்க்கை.நோய்கள் தாம் கொடிய விலங்குகள்.துரத்தி வந்த புலிதான் யமன்.ஏற முயன்ற மரம் தான் முக்தி.நரகம் தான் பாழுங்கிணறு.பற்றி பிடித்த கொடிகள் தாம் ஆசையும், பற்றும்.யானையின் இரு முகங்கள் அயணங்கள் (தக்ஷிணாயனம்,உத்தராயணம்).ஆறு கொம்புகள் ஆறு பருவங்கள்.பன்னிரெண்டு கால்கள் பன்னிரெண்டு மாதங்கள்.வருடமே யானை.காலபாசம் தான் கரு நாகம்.கொடிகளைக் கடிக்கும் கருப்பு,வெள்ளை எலிகள் இரவு பகல்கள்.அவை மனிதனின் வாழ்நாளை குறைத்துக் கொண்டே இருக்கின்றன.அவன் பெறுகின்ற தேன் துளி போன்ற இன்பமே இந்த உலக வாழ்வு.எனவே ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என்பதை உணர வேண்டும்.இறுதியில் மரணம் என்பது யாவராலும் தவிர்க்க முடியாததாகும்!
என நாளும் நாளும் மனிதன் சாகின்றான் என்பதை விதுரர் தெளிவாக விளக்கினார்.

2 comments:

பித்தனின் வாக்கு said...

மிக நன்றாக கூறியிருக்கின்றீர்கள். மிகவும் அருமை. நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பித்தனின் வாக்கு

Post a Comment