Friday, December 4, 2009

79-இரும்புப் பதுமைத் தூண்

வியாசரும்..திருதிராட்டிரனுக்கு ஆறுதல் கூறினார்.ஆயினும் அவன் சினம் அடங்கவில்லை.கண்ணன் தருமரை அறிமுகப் படுத்த சாதாரணமாக தழுவிக் கொண்ட திருதிராட்டிரன்..பீமனைத் தழுவும்போது அறிவிழந்தான்.அவன் மனநிலையை அறிந்திருந்த கண்ணன் பீமனைப் போன்ற இரும்பாலான ஒரு பதுமையைக் காட்டினார்.திருதிராட்டிரன் அந்த இரும்பு பதுமையை இறுகத் தழுவி பொடியாக்கினான்.'இன்னுமா உன் வெறுப்பு தீரவில்லை? இந்த கெட்ட எண்ணமே உன் குலநாசம் அடையக் காரணம்' எனக் கண்ணன் கூற நாணித் தலைக் குனிந்தவன், மனம் தெளிந்து பீமன்,அர்ச்சுனன்,நகுலன்,சகாதேவன் ஆகியோரை தழுவிக் கொண்டான்

பாண்டவர்கள் காந்தாரியைக் காணச் சென்றனர்.காந்தாரியின் சினம் கண்ட வியாசர் 'நீ கோபப்படுவதால் பயன் இல்லை.நீ போருக்கு முன் துரியோதனனிடம் கூறியது என்ன..தருமம் உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம் என்றாய்..பாண்டவர்கள் பக்கம் தருமம் இருந்ததால் அவர்கள் வெற்றி பெற்றனர்.அவர்களை வாழ்த்துவாயாக..'என்றார்.

'பாண்டவர்களும் என் மக்கள் தான்..ஆயினும் பீமன் மீது எனக்குக் கோபம் உண்டு.நெறிகெடத் துரியோதனனை தொடையில் அடித்து வீழ்த்தினான்.துச்சாதனனின் ரத்தத்தைக் குடித்தான்.இந்த கொடுமைகளை எப்படி மன்னிப்பேன்?' என்ற காந்தாரிக்கு பீமன் பதிலளித்தான்.

'தாயே! துரியோதனன் எங்களுக்கு இழைத்த கொடுமைகளை நீங்கள் அறிவீர்கள்.உச்சக் கட்டமாக..பாஞ்சாலியைத் தன் தொடைமீது வந்து அமரும்படிக் கூறினான்.துச்சாதனன் அவளின் ஆடையைக் களைய முற்பட்டான்..ஆனாலும் நான் மேற்கொண்ட சபதப்படி அவன் ரத்தத்தைக் குடிக்கவில்லை.பல்லுக்கும்,உதட்டுக்கும் கீழே செல்லவில்லை ரத்தம்.அதனை உமிழ்ந்து விட்டேன்.விகர்ணனைப் பொறுத்தவரை நான் எவ்வளவோ..கேட்டுக் கொண்டும் அதனை செவி சாய்க்காமல் போரிட்டு மாண்டான்' என்றான்.

பின் காந்தாரியின் அருகில் வந்து தருமர் வணங்கினார்.கட்டியிருக்கும் துணி வழியே தருமரின் கால் விரல்களின் நகங்களைக் கண்டாள்.அவை சினத் தீயால் கருத்து விகாரம் அடைந்தன.அது கண்டு அர்ச்சுனன் அச்சம் கொண்டான்.பின் ஒருவாறு காந்தாரி சாந்தம் அடைந்தாள்.

பாண்டவர்கள் பின் பெற்ற தாயான குந்தியைக் காணச் சென்றனர்.

வியாசரின் அருளால் காந்தாரி இருந்த இடத்திலிருந்து போர்க்களத்தைக் கண்டாள்.துரியோதனன் தரைமீது மாண்டுக் கிடப்பதுக் கண்டு..கதறி அழுதாள்.கண்ணனைப் பார்த்து..'உன்னால்தான் எல்லாம்..சகோதரர்களிடையே பூசலை அவ்வப்போது தடுத்து நிறுத்தியிருந்தால் பேரழிவு ஏற்பட்டிருக்காது..என் குலம் நாசம் அடைந்தாற் போல உன் குலமும் நாசம் அடைவதாக' என சபித்தாள்.அவளுக்கு நல்லுணர்வு ஏற்படுமாறு கண்ணன் ஆறுதல் அளித்தார்.

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்யும் நேரம் வர..குந்தி..கர்ணன் தன் மூத்த மகன் என்ற ரகசியத்தை வெளிப்படுத்தினாள்.

பின்..முறைப்படி ஈமச் சடங்குகள் நடை பெற்றன.

ஸ்திரீ பருவம் முற்றிற்று..அடுத்து சாந்தி பருவம்..தருமரின் மனக்குழப்பமும்,தெளிவும்,பீஷ்மரின் உபதேசமும்..அடுத்து வரும் பதிவுகளில்..

No comments:

Post a Comment