Sunday, November 15, 2009

76-பதினெட்டாம் நாள் போர் (தொடர்ச்சி)

துரியோதனனின் கூற்றைக் கேட்ட பீமன் கூறுகிறான்..

'துரியோதனா நீயா தர்மத்தைப் பற்ரிப் பேசுகிறாய்?அன்று ஒருநாள் எனக்கு விஷம் கொடுத்தாயே அது தர்மமா?

கொடிகளால் கட்டி நதியில் வீசினாயே..அது தர்மமா?

அரக்கு மாளிகையில் எங்களைத் தங்கவைத்து தீயிட்டாயே..அது தர்மமா?

பாஞ்சாலியை மன்றத்தில் பலர் முன்னிலையில் துகில் உரிந்து மான பங்கம் செய்தாயே..அது தர்மமா?

எங்கள் குலக்கொழுந்தான அபிமன்யூவை நிராயுதபாணியாக்கி..மூலைக்கு ஒருவராக நின்று கொன்றீர்களே..அது தர்மமா?

பாவத்தின் மொத்த வடிவமான நீயா தர்மத்தைப் பற்றியும்..வீரத்தைப் பற்றியும் பேசுகிறாய்? என்றவாறு பீமன் அவனை எட்டிக் காலால் உதைத்துக் காலை அவன் தலையின் மீது வைத்து அழுத்தினான்,.

ஆனால் தருமர் பீமனின் இச் செயலை விரும்பவில்லை..'வீழ்ந்து கிடப்பவன் தலையில் காலை வைத்து அழுத்துதல் தர்மம் அன்று'என பீமனைக் கண்டித்தார்.பலராமனும் பீமனைக் கண்டித்தார்.

ஆனால்..துரியோதனன் தன் தவறுகளுக்கு வருந்தவில்லை.உலகெலாம் ஒரு குடைக்கீழ் ஆண்ட வீரமும், சத்திரிய தர்மத்தின்படி போர்க்களத்தில் போரிட்ட பெருமிதமும் தோன்ற உயிர் துறப்பேன் என்றான்.

பின்னர்..கண்ணன்..அர்ச்சுனனை தேரில் உள்ளக் கருவிகளை எடுத்துக் கொண்டு தேரில் இருந்து இறங்கச் சொன்னார்.அவர்கள் இறங்கியதுமே..தேர் பற்றியெரிந்தது. உடன் கண்ணன் 'பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோர் செலுத்திய அம்புகளால் முன்னமே தேர் எரிந்திருக்கும்.நான் அதில் இருந்ததால் அழிவு ஏற்படவில்லை.நான் இறங்கியதும்..அம்பு தாக்கிய வெப்பத்தால் தேர் எரிந்து விட்டது' என்றார்.பாண்டவர்கள் கண்ணனை வணங்கி நன்றி கூறினர்.

திருதிராட்டினனுக்கும்..காந்தாரிக்கும் கண்ணன் ஆறுதல் கூறினார்.'உங்கள் துயரத்திற்கு துரியோதனனே காரணம்.அவன் சன்றோர்களின் அறிவுரையை ஏற்கவில்லை.'தான்' என்னும் ஆணவத்தால் அழிந்தான்.அவனால் பாண்டவர்கள் பட்ட கஷ்டத்தை சொல்லி மாளாது.காந்தாரி ஒருமுறை உன் மகன் துரியோதனனிடம் நீ என்ன கூறினாய் "மகனே..தர்மம் எங்கு உண்டோ அங்கு வெற்றி உண்டு '
என்றாயே...அஃது அப்படியே நிறைவேறியது.எல்லாம் விதி.எனவே பாண்டவர்களிடம் கோபம் கொள்ள வேண்டாம்.' என்ற கண்ணபிரானின் அறிவுரையைக் கேட்ட காந்தாரி சற்று ஆறுதல் அடைந்தாள்.கண்ணன் பின் பாண்டவர்கள் இருக்குமிடம் சென்றார்.

1 comment:

பித்தனின் வாக்கு said...

மிக்க நன்று. நல்ல கட்டுரை. பேருடன் முடித்துவிடாதிர்கள். ராஜசூய வேள்வியும் அதில் சிசுபால வதமும் வரட்டும். நன்றி அய்யா.

Post a Comment