Tuesday, July 28, 2009

52- கௌரவர்கள் ஓடினர்.

பின் அர்ச்சுனன் ஊர்வசியை நினைத்துத் தனது பேடி உருவம் நீங்கினான்.தேரில் இருந்த சிங்கக் கொடியை இறக்கிக் குரங்கின் சின்னக் கொடியை ஏற்றினான்.

வருவது..அர்ச்சுனன் என்பதை அனைவரும் அறிந்தனர்.'யாரானால் என்ன..போர் தொடரட்டும்' என்றான் துரியோதனன்.

'நானே அர்ச்சுனனைக் கொல்வேன்' என்றான் கர்ணன்.

அர்ச்சுனன் இரண்டு அம்புகளை ஒரே சமயத்தில் செலுத்தினான்.அவற்றுள் ஒன்று..துரோணரின் பாதத்தில் விழுந்து குரு வணக்கம் செலுத்தியது.மற்றொன்று அவர் காதோரம் சென்று..போரிட அனுமதியும், ஆசியும் வேண்டியது.முதல் கடமையாக பசுக்களை மீட்க..சரமாரியாக அம்பெய்தினான்.பேரொலி கேட்ட பசுக்கள் பகைவரின் பிடியிலிருந்து தப்பி ஓடித் தங்கள் பண்ணையை அடைந்தன.கிளர்ந்து எழுந்த கௌரவ வீரர்களைக் கடந்து..கர்ணனைத் தாக்கினான், அர்ச்சுனன்.எதிர் நிற்க முடியாது..போர்க்களத்தை விட்டு கர்ணன் ஓடினான்.பின்னர் துரோணர்..அஸ்வத்தாமன் ,கிருபாச்சாரியார்..ஆகியோர் எதிர்க்கமுடியாது தலைக் குனிந்தனர்.

பின்னர்..பீஷ்மருடன் அர்ச்சுனன் போரிட்டான்.பிதாமரும் சோர்ந்து திரும்பினார்.பின்..துரியோதனனும் சிறிது நேரமே போர் புரிந்தான்.பின் தோற்று ஓடினான்.

துரியோதனா..நில்..நீ ஒரு வீரனா?உனக்கு மானம் இல்லையா? என அவன் மான உணர்ச்சியைத் தூண்டினான் பார்த்திபன்.பின் மோகனாஸ்திரத்தால்..அர்ச்சுனன் அனைவரையும் மயங்கச் செய்தான்.பின் அர்ச்சுனன் பீஷ்மரைத் தவிர மற்றவர்கள் அணிந்திருந்த பட்டுத் துணிகளை கவர்ந்து வருமாறு உத்திரனிடம் கூறினான்.அவனும் அவ்வாறே செய்தான்.

மோகானாஸ்திரத்தால் மயங்கி விழுந்தவர்கள்..மயக்கம் தெளிந்து எழுந்தவர்கள்..தோல்வியால் மனம் உடைந்தனர்.வெட்கத்தோடு அஸ்தினாபுரம் திரும்பினர்.

வெற்றி வீரர்களாக விஜயனும்..உத்தரனும் விராட நகரம் வந்தார்கள்.வரும் வழியில்..முன்பிருந்தபடியே ஆயுதங்களை ஒளித்துவைத்தனர்.அர்ச்சுனன் மீண்டும் பிருகன்னளையாகி தேர் ஓட்டிச்சென்றான்.

தென்திசையில்..திரிகர்த்த மன்னன் சுசர்மாவைத் தோற்கடித்து..வெற்றிவாகை சூடிய மன்னனை வரவேற்க விராட நகரம் தயாராகயிருந்தது.அப்போதுதான் தன் மகன் உத்தரன் காணப்படாததைக் கண்டு..விராட மன்னன் வினவ..அவன் வடதிசையில் கௌரவர்களை எதிர்க்கச் சென்றுள்ளான் என்ற செய்தி கேட்டு மன்னன் திகைத்தான்.'அங்கு மாவீரர்களான பீஷ்மர்,துரோணர்,கர்ணன் ஆகியோரை எப்படி என் மகன் வெல்வான்?' எனக் கவலையுற்றான்.

அப்போதுதான் மகனின் வெற்றிச் செய்தி மன்னனுக்கு எட்டியது.மிகச் சிறந்த வரவேற்புக்கு ஏற்பாடு செய்தான்.

No comments:

Post a Comment