Wednesday, April 1, 2009

34.அர்ச்சுனன் தவம்

தருமர் சமாதானம் செய்து கொண்டிருந்த போது ..வியாசர் அங்கு தோன்றினார்.

பாரதத்தில் சிக்கல் தோன்றும் போதெல்லாம் வியாசர் தோன்றி அதனை விலக்கியுள்ளார்.

அதுபோல இப்பவும் வந்து சில ஆலோசனைகளைக் கூறினார்.

'இந்தப் பதிமூன்று ஆண்டுக்காலத்தில் துரியோதனன் தன் பலத்தைப் பெருக்கிக்கொள்வான்.ஏற்கனவே ..பீஷ்மர்,துரோணர்,கர்ணன் முதலியோர் அவன் பக்கம் இருக்கிறார்கள். இந்நிலையில் வெறும் தவக்கோலம் பூண்டு காட்டில் இருப்பதால் பயன் இல்லை.நீங்களும் உங்களைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும்.நான் 'பிரதிஸ்மிருதி' என்னும் மந்திரத்தை சொல்லித் தருகிறேன்.அர்ச்சுனன் இமயம் சென்று..இம் மந்திரத்தை உச்சரித்துச் சிவபெருமானையும்,தேவேந்திரனையும், திக்குப் பாலகர்களையும் வேண்டித் தவம் செய்வானாக.சிவபெருமான் பாசுபதக்கணையை நல்குவார்.அவ்வாறே பிறரும் சக்தி வாய்ந்த கருவிகள் பலவற்றை அளிப்பார்கள்'என்று கூறி மறைந்தார்.

உடன் அர்ச்சுனன்...இமயமலையில் இருக்கும் இந்திரகிலம் பகுதியை அடைந்து தவம் மேற்கொண்டான்.அவனைச் சுற்றி புற்று வளர்ந்தது....ஆனாலும் அவன் அசையாது தவத்தில் இருந்தான்.

அவனது தவத்தின் கடுமை அறிந்த சிவன் உமாமகேஸ்வரியிடம் 'அர்ச்சுனன் தவத்தை அறிந்துக்கொண்ட துரியோதனன் அதை குலைக்க மூகாசுரனை ஏவுவான்.அந்த அசுரனை..என் ஒருத்தனால் மட்டுமே கொல்ல இயலும்.
அந்த அசுரன் காட்டுபன்றி வடிவம் தாங்கி..அர்ச்சுனனை கொல்ல வருவான்...நான் வேடனாகப்போய் அவனைக் காப்பாற்றுவேன்'என்றார்.

அதே போல மூகாசுரன் காட்டு பன்றியாய் வந்தான்.

அர்சுனன் மீது அக்காட்டுப் பன்றி மோதியது.அர்ச்சுனன் தவக்கோலம் நீங்கி தற்காப்புக்காக ஒரு அம்பு கொண்டு அவ்விலங்கை தாக்கினான்.அப்போது ஒரு வேடன் தன் அம்பை அந்த பன்றியின் மேல் செலுத்த பன்றி வீழ்ந்தது.யாருடைய அம்பால் அப்படி நேர்ந்தது என்று சர்ச்சை எழ..இருவரும் விற்போரில் ஈடுபட்டனர்.அர்ச்சுனன் தோற்றான்.உடன் மண்ணால் ஒரு சிவலிங்கத்தை அமைத்து பூமாலை ஒன்றை அணிவித்து பூஜித்தான்.ஆனால் அம்மாலை வேடன் கழுத்தில் இருப்பதை அறிந்த அர்ச்சுனன் வேடனாக வந்தது சிவனே என்று அறிந்து வணங்கினான்.சிவனும் அவனுக்கு பாசுபதக் கணையை வழங்கினார்.அந்த அற்புதக் காட்சியைக் கண்ட தேவர்கள் பல்வேறு கருவிகளை அர்ச்சுனனுக்கு அளித்தனர்,

தன் மைந்தனின் பெருமை அறிந்த தேவேந்திரன் அவனைத் தேவர் உலகத்திற்கு அழைத்தான்.இந்திரன் கட்டளையால் அவனது சாரதி மாதலி அர்ச்சுனனை தேரில் நட்சத்திர மண்டலங்களைக் கடந்து ..அமராவதி நகருக்கு அழைத்துச் சென்றான்.

இந்திரன் ..தன் மகனை அரியணையில் அமர்த்தி சிறப்பு செய்தான்.தெய்வீகக்கருவிகளைப் பயன்படுத்தும் முறை பற்றி அறிய ஐந்து ஆண்டுகள் தங்கியிருக்கவேண்டும் என கட்டளையிட்டான்.

இந்திரன் ..நுண்கலைகளான நடனம்,இசை ஆகியவற்றிலும் அர்ச்சுனன் ஆற்றல் பெற அவனைசித்திரசேனனிடம் அனுப்பி வைத்தான்.

அனைத்துக் கலைகளிலும் பயிற்சி பெற்று நிகரற்று விளங்கினான் தனஞ்செயன்.

No comments:

Post a Comment