Sunday, November 13, 2011

189-சுவர்க்க ஆரோஹன பருவம் (சுவர்க்கத்தில் ஏற்றம் பெறுவது)




சுவர்க்கத்திற்குச் சென்ற தருமர் கோலாகலமாய் இருந்த ஓர் இடத்தை அடைந்தார்.அங்கு துரியோதனன் ஒரு இருக்கையில் அமர்ந்திருந்ததைக் கண்டார்.பேராசைக்காரன் இருக்கும் இடத்திற்கா வந்துவிட்டேன்...எனத்தன் தலைவிதியை நொந்து கொண்டார்."திரௌபதியை அவைக்கு இழுத்துவரச் செய்து அவமானப்படுத்தியவன் அல்லவா? இவன்.இவனை நான் காண விரும்பவில்லை.என் சகோதரர்கள் இருக்கும் இடத்திற்கே செல்ல விரும்புகிறேன்' என்றார்.

அது கேட்ட நாரதர், 'தருமா! பகையை மண்ணுலகோடு மறந்துவிட வேண்டும்.சுவர்க்கத்திற்கு வந்த பின் மண்ணுலக வாழ்வை ஏன் நினைக்கிறாய்?துரியோதனன் க்ஷத்திரியர்தம் இயல்புக்கு ஏற்ப வீரப்போர் புரிந்து இங்கு வந்து சேர்ந்துள்ளான்.இவனது மேன்மையை இங்குள்ளோர் பாராட்டுகிறார்கள் பார்' என்றார்.

நாரதரின் இந்த விளக்கத்தை ஏற்க தருமர் மறுத்துவிட்டார்.'என் சகோதரர்கள் சுவர்க்கத்தில் எந்த இடத்தில் இருக்கிறார்கள்?கொடை வள்ளல் கர்ணன் எங்கே? அவனையும் காண விரும்புகிறேன்.விராடனையும்,துருபதனையும், வீரப்போர் புரிந்து சுவர்க்கத்திற்கு வந்து இருக்கிறார்களே அவர்களையும் காண விரும்புகிறேன்.வீர அபிமன்யூ வைக் காண வேண்டும்' என்றார்.

முதலில் தனது சகோதரர்களைக் காண விழைந்த தருமருக்குத் தேவதூதன் ஒருவன் வழிகாட்டிச் சென்றான்.செல்லும் வழியெங்கும் துர்நாற்றம் வீசியது.எங்கும் தசையும், ரத்தமும் கலந்த சேறாகக் காணப்பட்டது.அழுகிய பிணங்கள் மீது நடந்துச் செல்ல வேண்டியிருந்தது.பிணங்களை உண்பதற்காகக் கழுகுகளும், காகங்களும் வட்டமிட்டுக் கொண்டிருந்தன.அந்தக் கோரமான காட்சியைக் கண்டு தருமர் திடுக்கிட்டார்.தகதக என காய்ச்சப்பட்ட எண்ணெய்க் குடங்களைப் பாவிகளின் தலையில் போட்டு உடைக்கக் கண்டு உள்ளம் பதறினார்.இந்தக் கொடூர வழியில் இன்னும் எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்.என் சகோதரர்கள் எங்குள்ளனர்? என தூதனை வினவினார்.இந்தத் துயரக் காட்சியின் கொடுமையை நான் மேலும் காண விரும்பவில்லை.திரும்பிச் சென்றுவிடலாம்' என்றார்.

அந்த நேரத்தில், 'தருமரே! இன்னும் கொஞ்ச நேரமாவது நீங்கள் இங்கு இருங்கள்.உங்களால் எங்கள் துன்ப வேதனை குறைந்திருக்கிறது.திரும்பிப் போகாதீர்கள்' என பல குரல்கள் கெஞ்சிக் கேட்டன.வியப்புற்ற தருமர்..அக்குரல்கள் பீஷ்மர்,துரோணர்,கர்ணன், பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன்,திரௌபதி ஆகியோருடைய குரல்கள் அவை என அறிந்தார்.உடன் மூர்ச்சித்தார்.சிறிது நேரம் கழித்து எழுந்து, சினம் கொண்டு தேவதூதனிடம், "நீ போய் இந்திரனிடம் கூறிவிடு.வாழ்நாளெல்லாம் தீமையே செய்துக் கொண்டிருந்த துரியோதனன் தேவ சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.ஒரு குற்றமும் செய்யாத என் சகோதரர்களும், திரௌபதியும் நரகத்தில் வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்,நல்லது செய்பவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டும் என்பதுதான் நீதி எனில் அந்த நரக வேதனையை அனுபவிக்க நான் தயார்' என்றார்.

தேவதூதன்..தருமர் சொன்னதை இந்திரனிடம் கூற, இந்திரன் ,மற்றும் அனைத்துத் தேவர்களும் தருமர் முன் தோன்றினர்.அந்த நேரத்தில் நரகக் காட்சி மறைந்தது.தருமர் கண்ட நரகக் காட்சி வெறும் மாயை என்பதை தருமரின் தெய்வீகத் தந்தையான எமதர்மர் விளக்கினார்.நரகத்தில் சிறிது நேரம் தருமர் தங்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட்டது?

அவர் தரும நெறியிலிருந்து வழுவாத வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும், ஒரு உண்மையில் பாதியை மறைத்துக் கூறியது அவரது நெறிக்கு மாறுபட்டது.'அசுவத்தாமன் இறந்தான்' எனத் துரோணர் நம்புமாறு செய்தது தருமர் மனசாட்சிக்கு மாறாக நடந்து கொண்ட செயலாகும்.தம் நெஞ்சு அறிந்த பொய் காரணமாக நரகத் துன்பத்தைசிறிது நேரம் அவர் உணருமாறு ஆயிற்று.

தாமே தருமரை சோதித்ததை எமதர்மர் நினைவுப் படுத்தினார்.முன்பு துவைத வனத்தில் அரணிக் கட்டையைத் தேடிய போது முதல் முறையாகவும்,நாய் வடிவத்துடன் வந்து இரண்டாம் முறையாகவும் சோதித்ததைக் கூறினார்.தற்போது இந்திரனால் தோற்றுவிக்கப்பட்ட நரகக் காட்சியிலும் தருமர் வெற்றி பெற்றார்.உண்மையில் தம் சகோதரர்களும்,திரௌபதியும் சுவர்க்கத்தில்தான் இருக்கின்றனர் என்பதனை உணர்ந்த தருமர் வான கங்கையில் நீராடினார்.மண்ணக மாந்தர்க்கு அணியாக விளங்கிய தருமர் விண்ணகம் அடைந்தார்.தேவர்கள் சூழ்ந்து நின்று அவருக்கு வரவேற்பு அளித்தனர்.அவரது மனதில் இருந்த பகை உணர்ச்சி அடியோடு விலகியது.திருதராட்டிர குமாரர்களும் பாண்டவர்களும் இருக்கும் சுவர்க்கத்தை சென்றடைந்தார்.
சுவர்க்கத்தை அடைந்து சில காலம் தங்கி இன்பம் அனுபவித்த பின் சிலர் பரம்பொருளுடன் ஐக்கியமாயினர்.சிலர் தாங்கள் செய்து புண்ணிய காரியங்களுக்கு ஏற்பப் பல்வேறு தேவர்களாயினர்.

(அடுத்த பதிவுடன் மகாபாரதம் முற்று பெறுகிறது)

2 comments:

கோவி.கண்ணன் said...

நூலாக்கலாம், நல்லத் தொகுப்பு

ப.கந்தசாமி said...

பாராட்டுக்கள்.

Post a Comment