Thursday, November 3, 2011

187 - காலம் நெருங்குகிறது




அனாதைகளாகிவிட்ட பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுனன் அஸ்தினாபுரம் சென்றான்.அவர்கள் துவாரகையை விட்டுச் சென்றதும்..துவாரகை கடலில் மூழ்கியது.அர்ச்சுனனும் உடன் சென்ற மகளிரும் செல்லச் செல்ல அவர்கள் நீங்கிய நகரங்களும் கிராமங்களும் கடலால் கொள்ளப்பட்டன.

அர்ச்சுனன் அத்தனை பெண்களையும், குழந்தைகளையும் அழைத்துச் செல்வதைக் கண்ட திருடர்களுக்கு பேராசை உண்டாயிற்று.அவர்கள் ஆயிரக் கணக்கில் அவர்களை வழிமறித்து தாக்கினர்.திருடர்களின் துணிச்சலைக் கண்டு அர்ச்சுனன் நகைத்தான்.'உயிரின் மீது உங்களுக்கு ஆசை இருக்குமாயின் ஓடி விடுங்கள்.இல்லையேல் எனது அம்பினால் கொன்றுவிடுவேன்;' என எச்சரிக்கை செய்தான்.ஆனால் திருடர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை.பெண்களை மறித்துச் சூறையாடினர்.சினம் கொண்ட அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லை எடுத்து நாண் ஏற்றி அம்பு தொடுக்க விறைந்தான்.ஆனால்...காண்டீபம் செயலிழந்துவிட்டிருந்தது.கற்ற மந்திரங்களும் நினைவுக்கு வரவில்லை.கற்ற கல்வியும் கேள்வியும் கடலில் கரைத்த காயம் போலாகின.'வில்லுக்கு விஜயன்' என்ற பெயர் போய்விட்டதோ என கலங்கினான்.காண்டீபம் செயலிழந்ததும்..அம்பறாத் துணியில் அம்புகளும் இல்லையாகின.யாவும் விதியின் பயன் என உணர்ந்தான்.இந்நிலையில் ஏராளமான பெண்களை திருடர்கள் கவர்ந்து சென்றனர்.பெரு முயற்சி செய்து எஞ்சியவர்களைக் காத்தான்.அவர்களை பொருத்தமான இடத்திலிருக்கச் செய்தான்.ருக்மணி அக்கினிப் பிரவேசம் செய்தாள்.சத்தியபாமையும் வேறு சிலரும் வனம் சென்று தவ வாழ்க்கை மெற்கொண்டனர்.

கண்ணீரும் கம்பலையுமாய் அர்ச்சுனன் வியாசரைக் காணச் சென்றான்.கண்ணனைப் பிரிந்தது..ஐந்து லட்சம் பேர் ஒருவரை ஒருவர் உலக்கையால் அடித்துக் கொண்டு மடிந்தது எல்லாவற்ரையும் கூறி அழுது புலம்பினான்.

வியாசர் அர்ச்சுனனுக்கு ஆறுதல் சொன்னார்..பின்.."அர்ச்சுனா..இறந்து போனவர்களைப் பற்றி கவலைப்படாதே.தெய்வ அம்சம் கொண்ட அவர்கள் கடமை முடிந்தது.அதனால் அவர்கள் ஆயுளும் முடிந்தது.இப்படி நடக்க வேண்டும் என்ற சாபம் அவர்களுக்கு இருந்தது.எல்லோரையும் ரட்சிக்கும் கண்ணன் நினைத்திருந்தால் இந்த அழிவைத் தடுத்து நிறுத்தி இருக்க முடியும்.ஆனால் அவரே இந்த முடிவை அங்கீகரித்து விட்டதாகவே நினை.உன் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் உனக்கு வழிகாட்டிய பரமாத்மாவும் தமது கடமை முடிந்தது எனக் கருதித் தமது உலகை அடைந்து விட்டார்., நீயும் உன் சகோதரர்களும் ஆற்ற வேண்டிய அருஞ்செயலைத் தெய்வ சம்மதத்துடன் செய்து முடித்து விட்டீர்கள். பூமித்தாயின் பாரம் உங்களால் குறைந்தது.கடமையை நிறைவேற்றிய உங்கள் காலமும் முடிவடையும் நேரம் வந்து விட்டது.இந் நில உலக வாழ்க்கையைத் துறந்து நல்ல கதியை அடைய உன் சகோதரருடன் புறப்படுவாயாக.."என்றார்.

கருத்து மிக்க வியாசரின் இந்த நல்லுரையைக் கேட்ட அர்ச்சுனன்..தன் சகோதரர்களிடம் நடந்ததை எல்லாம் எடுத்துரைத்தான்.

(மௌசல பருவம் முற்றும்)

No comments:

Post a Comment