Thursday, November 10, 2011

188- மகாபிரஸ்தானிக பருவம் மேலுலகம் எய்தியது.




விருஷ்ணிகளின் அழிவை உணர்ந்த தருமர் தங்களுக்கும் முடிவு காலம் வந்துவிட்டதை உணர்ந்தார்.உலக வாழ்வைத் துறந்து செல்லலாம் என்னும் தமது கருத்தைச் சகோதரிரிடம் தெரிவித்தார்.காலம் எல்லா உயிரினங்களையும் உரிய நேரத்தில் அழிக்கும் சக்தி வாய்ந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.துறவு மேற்கொள்ள விழந்தனர்.எல்லோரும் தருமரின் கூற்றுக்கு அடி பணிந்தனர்.தருமர் நாட்டை விட்டுப் புறப்படும் முன் சுபத்ரையிடம் கூறினார்..'உன்னுடைய பேரனான பரீட்சித்தை அஸ்தினாபுர அசனாக நியமித்து உள்ளேன்.யாதவர்களில் எஞ்சியுள்ள வஜ்ரன் இந்திரப்பிரஸ்தத்தை ஆள்வான்.நீ எங்களுடன் துறவு மேற்கொண்டு வர வேண்டாம்.இவர்களுக்கு உதவியாக இங்கேயே இரு.குரு வம்சத்தில் எஞ்சியிருக்கும் யுயுத்சு இந்த இரண்டு அரசர்களுக்கும் பாதுகாவலாக இருப்பான்.கிருபாசாரியார் இருவருக்கும் ஆசாரியாராகத் திகழ்வார்'

இவ்வாறு நாட்டில் ஆட்சி நடக்க ஏற்பாடுகளைச் செய்துவிட்டு தருமர் சுவர்க்க லோகம் அடையத் துறவு மேற்கொண்டார்.சகோதரர்களும்,திரௌபதியும் மரவுரி தரித்துத் தருமரைத் தொடர்ந்து சென்றனர்.அவரை பிரிய மனம் இல்லாத மக்கலும் நெடுந் தொலைவு தொடர்ந்து சென்று பின் திரும்பினர்.

பாண்டவர்களும், திரௌபதியும் உண்ணா நோன்பு மேற்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்றனர்.புண்ணிய நதிகளில் நீராடினர்.புனிதத் தலங்களைத் தரிசித்தனர்.முதலில் தருமரும்,அவருக்குப் பின் பீமனும்,பின்னால் அர்ச்சுனனும்,அவனுக்குப் பின் நகுல, சகாதேவனும் சென்றனர்.அவர்களைத் தொடர்ந்து திரௌபதியும் சென்றாள்.நாய் ஒன்று அவர்களைத் தொடர்ந்து சென்றது.அர்ச்சுனன் காண்டீபம் என்னும் வில்லையும் அம்பறாத் துணிகளையும் விடமுடியாதவனாகச் சுமந்து சென்றான்.

அவர்கள் கடற்கரையை அடைந்த போது, அக்கினி தேவன் தோன்றி,'முன்னர் நான் காண்டவ வனத்தை எரிப்பதற்கு காண்டீபம் என்னும் வில்லையும் இரண்டு அம்பறாத் துணிகளையும் வருணனிடம் இருந்து பெற்று அர்ச்சுனனுக்கு அளித்தேன்.அந்தக் காரியம் நிறைவேறியதோடு வேறு அரிய செயல்களையும் அவற்றைக் கொண்டு நிறைவேற்றினான்.இனி அவற்றால் பயனில்லை.எனவே அவற்றை வருணனிடமே ஒப்படைத்து விடுக' என்று கூறி மறைந்தான். அவ்வாறே அவை கடலில் இடப்பட்டன.

பிறகு பாண்டவர்கள் பூமியை வலம் வருபவரைப் போலத் தெற்கு நோக்கிச் சென்றனர். பின் தென்மேற்காய்ச் சென்றனர்.பின் வடக்கு நோக்கிச் சென்றனர்.இமயமலையைக் கண்டனர்.அதனையும் கடந்து சென்று மலைகளில் சிறந்த மேரு மலையைத் தரிசித்தனர்.சுவர்க்கத்தை நோக்கி அவர்கள் பயணம் தொடர்ந்த போது திரௌபதி சோர்ந்து விழுந்து இறந்து விட்டாள்.

அதிர்ச்சி அடைந்த பீமன், 'இந்த தெய்வமகள் ஏன் இப்படி வீழ்ந்து விட்டாள்?'என வினவினான்.அதற்கு தருமர்,'ஐவரிடமும் சமமான அன்பு வைக்க வேண்டியவள், அர்ச்சுனனிடம் மிகவும் பிரியமாக இருந்தாள்.அதனால் இந்த நிலை ஏற்பட்டது' என்று பதிலுரைத்தார்.பின்னர் திரும்பிக்கூட பார்க்காமல் போய்க்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் சகாதேவன் மயங்கி வீழ்ந்தான்...'அண்ணா சகாதேவனின் இந்நிலைக்கு என்ன காரணம்?' என்றான்.'தன்னிடம் உள்ள சாத்திர அறிவு வேறு யாரிடமும் இல்லை என்ற ஞானச்செருக்குக் காரணமாக அவனுக்கு இக்கதி ஏற்பட்டது' என்றபடியே தருமர் போய்க்கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் நகுலன் சாய்ந்தான்.'தன்னைவிட அழகில் சிறந்தவர் யாருமில்லை என்ற அழகுச் செருக்குக் காரணமாகாவன் அப்படி வீழ நேரிட்டது' என்று திரும்பிப் பாராமல் தருமர் விரைந்தார்.அடுத்து அர்ச்சுனன் வீழ்ந்தி இறந்தான்.அதற்கு 'தான் ஒருவனே பகைவரை வெல்ல முடியும் என்ற வீரச் செருக்கே அவனுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றவாறே தருமர் போய்க் கொண்டிருந்தார்.

பீமனுக்கும் தலை சுற்றியது, 'அண்ணா, இதற்கு என்ன காரணம்?' என்றான் பீமன்.'தன்னைவிட பலமுள்ளவர்கள் யாருமில்லை என்னும் வலிமைச் செருக்குதான் காரணம்'என தருமர் சொல்லி முடிப்பதற்குள்பீமன் உயிர் நீத்தான்.

தருமர் போய்க்கொண்டே இருந்தார்.நாய் மட்டும் அவரைத் தொடர்ந்தது.உயிருக்கு உயிரான அனைவரும் மாண்டபோது தருமர் ஏன் மனக் கலக்கமோ..துயரோ அடையவில்லை? காரணம் அவர் துறவு மேற்கொண்ட போதே பந்த பாசங்கள் மறைந்தன.அவர் எந்த பரபரப்பும் அன்றி போய்க்கொண்டிருந்தார்.

அப்போது அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லத் தேவேந்திரனே விமானத்துடன் வந்து அழைத்தான்.'என் சகோதரர்களும்,திரௌபதியும் இல்லாமல் நான் மட்டும் வர மாட்டேன்' என தருமர் பதில் உரைத்த போது நாய் விமானத்தில் ஏற முற்பட்டது.அப்போது இந்த நாய்க்குச் சுவர்க்கத்தில் இடமில்லை' என்று கூறித் தடுத்தான் இந்திரன்.

தருமர், 'என்னிடம் அடைக்கலம் அடைந்த நாயை விட்டு நான் ஒரு போதும் வர மாட்டேன்.இது நான் மேற்கொண்ட விரதம்' என்றார்.

அப்போது நாய் தன் வடிவத்தை மாற்ரிக்கொண்டு தர்மதேவதையாகக் காட்சியளித்தது."தரும நெறியிலிருந்து பிறழாத உன்னை நான் பாராட்டுகிறேன்.தருமத்தை நீ எந்த அளவு காக்கிறாய் என்பதைக் கண்டறிய முன்பும் நான் நச்சுப் பொய்கையில் சோதித்தேன்.உடன் பிறப்புகளுக்கும், மாற்றாந்தாய் மக்களுக்கும் இடையே வேறுபாடு ஏதும் கருதாத உனது தரும வேட்கையை அன்றும் அறிந்தேன்.இப்பொழு நாயின் மீது கொண்ட கருணையுள்ளத்தால் இந்திரன் தேரில் ஏற மறுத்தது கண்டு பாராட்டுகிறேன்' என்று கூறி நாயாக வந்த தருமதேவதை மறைந்தது.

இந்த அற்புதத்தைக் கண்ட தேவர்கள் வியப்படைந்தனர்.தருமர் ரதத்தில் ஏறிச் சுவர்க்கலோகம் சென்றார்.அங்கு நாரதர் அவரை வரவேற்றுப் பாராட்டினார்.'நல்லொழுக்கத்தை விரதமாகக் கொண்டு வாழ்ந்த புண்ணிய பலத்தினால் நீ உடலோடு இந்த சுவர்க்கத்திற்கு வந்துள்ளாய்.உன்னைத் தவிர இத்தகைய நற்பேறு பெற்றவன் உலகில் வேறு யாருமில்லை' என்று மேலும் புகழ்ந்தார் நாரதர்.

நாரதரின் இப்பாராட்டு தருமர் காதுகளில் விழவில்லை.அவரது கண்கள் அவரது சகோதரர்களையும், திரௌபதியையும் தேடியது.ஆனால் அவர்களைக் காண இயலவில்லை.

(மகாபிரஸ்தானிக பருவம் முற்றிற்று)

1 comment:

Unknown said...

பாரதம் அற்புதமான காவியம்..பலமுறை படித்துள்ளேன்..
இதை படித்ததும் பழைய நினைவுகள்....அவர்களோடு ஒன்றி வாழ்ந்தது போல் உணர்கிறேன்.
நன்றி

Post a Comment