Monday, July 11, 2011

155-அகஸ்தியர்-இல்வலன்-வாதாபி பற்றிய கதை

பாண்டவர்கள் தீர்த்த யாத்திரையின் போது மணிமதி என்னும் நகரத்தில் தங்கி இருந்தனர்.அப்போது யுதிஷ்டிரர் லோமசரை நோக்கி, 'இல்வலனையும், வாதாபியையும் அகத்தியர் ஏன் அழித்தார்?" என வினவ முனிவர் சொல்லலானார்.

இல்வலன் என்னும் அசுரன் மணிமதி நாட்டை ஆண்டு வந்தான்.அவன் தம்பியின் பெயர் வாதாபி.இல்வலனுக்கு மகப்பேறு இல்லை.அவன் தவ வலிமை மிக்க அந்தணன் ஒருவனை அடைந்து, 'இந்திரனுக்கு இணையான பிள்ளையை நான் பெற வேண்டும்.அதற்கான ஆசி அருள வேண்டும்' என்றான்.அவனது செருக்கை உணர்ந்த அந்தணர், 'எனது ஆசி உனக்கு இல்லை' என்றார்.

கடும் சினம் கொண்ட இல்வலன், அன்று முதல் அந்தணர்களை கொல்ல முடிவெடுத்தான்.மாயையில் வல்ல அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக உருமாறச் செய்தான்.இல்வலன் அந்த ஆட்டை சமைத்து அந்தணர்களுக்கு அளித்து அவர்களை கொல்ல நினைத்தான்.இல்வலனிடம் அபூர்வ ஆற்றல் ஒன்று இருந்தது.ஒருவன் இறந்து விட்டாலும் அவனைப் பெயரிட்டு கூப்பிட்ட அளவில் உயிர் பெற்று வந்துவிடுவான்.

அந்தணர்கள் இல்வலன் படைக்கும் ஆட்டுக்கறியை உண்ட பின் அவன் 'வாதாபி' என்று குரல் கொடுத்துத் தம்பியை அழைப்பான்.உடன் வாதாபி அந்தணர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உடன் வெளியே வந்துவிடுவான்.இப்படி பல அந்தணர்களைக் கொன்றான்.

அச்சமயத்தில் அகத்திய முனிவர் தம் மூதாதையர் பள்ளத்தாக்கில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதற்கான காரணத்தைக் கேட்டார்.

'நாங்கள் உன் முன்னோர்கள்.உனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று வேண்டி, இங்கு இப்படித் தொங்குகிறோம்! உனக்கு ஒரு மகன் பிறந்தால் எங்களுக்கு நற்கதி கிடைக்கும்' என்றனர்.அகத்தியரும் தனக்குப் பொருத்தமான பெண் எங்கிருக்கிறாள் என்பதை தன் எதிர்கால உறவால் கண்டறிந்தார்,

விதர்ப்பநாட்டு மன்னனுக்கு ஒரு பெண் பிறக்குமாறு செய்தார்.லோபமுத்திரைஎனப் பெயர் பெற்ற அவளுக்குரிய கணவனை ஆராய்ந்தான் மன்னன்.அகத்தியருக்கி அஞ்சி யாரும் அவளை மணமுடிக்க வரவில்லை.

அகத்தியர் அப்பெண்ணை தனக்குத் தருமாறு மன்னனைக் கேட்டார்.பெரும் தவசிக்குப் பெண் கொடுக்க விருப்பமில்லா மன்னன் தன் மனைவியிடம் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த லோபமுத்திரை, 'தந்தையே..நீங்கள் கவலைப்பட வேண்டாம்.என்னை அம் முனிவருக்கே மணமுடியுங்கள்' என்றாள்.

அகத்தியருக்கும்,லோபமுத்திரைக்கும் திருமணம் முடிந்தது.முனிவர் தன் மனைவியிடம்,'இனி நீ ஆஸ்ரம விதிப்படி நடந்து கொள்ளவேண்டும்.விலை உயர்ந்த ஆடை,அணிகளை விலக்கி மரவுரிகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அவ்வாறே லோபமுத்திரையும் செய்து வந்தாள்.அவளது தூய தன்மையையும்,அடக்கத்தையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.ஒருநாள் லோபமுத்திரையின் அழகுக் கண்டு, அவளுடன் இன்பம் அடைய விரும்பினார்.தன் கருத்தை அவளிடம் தெரிவித்த போது அவளோ தவக்கோலத்தில் புணர்ச்சியை விரும்பவில்லை.உயர்ந்த ஆடை அணிகலன்களை இருவரும் அணிந்து இன்பம் அனுபவிப்போம் என்றாள்.உடன் முனிவர்,'எனக்கேது உயர் ஆடைகளும், அணிகலன்களும் என்றார்.

'உம் தவ வலிமையால் அவற்றை அடையலாம்' என்றாள் லோபமுத்திரை.ஆனால் தவத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பாத முனிவர் மன்னனிடம் சென்று பொருள் பெற விழைந்தார்.

அகத்தியர் முதன் முதலாய் ஸ்ருதர்வா என்ற மன்னனிடம் சென்றார்.பெரும் செல்வத்தை நாடி வந்திருப்பதைத் தெரிவித்தார்.மன்னனோ..'முனிவரே! நாட்டில் வரவும் செலவும் சரியாய் உள்ளது.நான் பெரும் செல்வத்திற்கு எங்கு போவேன்..' என வருந்தினான்.குடிகளைத் துன்புறுத்தி வரி வசூலித்துத் தருவதானால் அச் செல்வம் தனக்கு வேண்டாம் என்ற முனிவர் ..அம்மன்னனையும் அழைத்துக் கொண்டு பிரத்நஸ்வன் என்னும் மன்னனை சந்தித்தார்.அம்மன்னனும் கையை விரித்துவிட , அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திரஸதஸ்யு என்ற மன்னனைச் சந்தித்தார்.அவனும் வருவாய்க்கும், செலவிற்கும் சரியாகிவிடுகிறது என உரைக்க, அனைவரும் வேறு என்ன செய்வது என ஆலோசித்தனர்.பின், மன்னர்களின் யோசனைப்படி இல்வலன் என்னும் அசுரனைக் காணச் சென்றனர்.

அவர்களைக் கண்ட அசுரன் பெரும் வரவேற்பளித்தான்.

வாதாபியை ஆட்டுக் கறியாக்கி அவன் விருது படைக்கப் போகிறான் என அனைவரும் அறிந்துக் கொண்டனர்.மன்னர்கள் அஞ்சினர்.அவர்களிடம் அகத்தியர்,'வாதாபியை ஜீரணித்து விடுகிறேன்.கவலை வேண்டாம்' என ஆறுதல் கூறினார்.

அனைவரும் உணவுக்காக அமர்ந்தனர்.இல்வலன் மகிழ்ச்சியில் இருந்தான்.ஆட்டுக்கறியை மேலும்..மேலும் கேட்டு அகத்தியரே சாப்பிட்டார்.உடன் இல்வலன்'வாதாபி..இம்முனிவர் உன்னை ஜீரணிப்பதற்குள் வெளியே வா என கூக்குரலிட்டான்.ஆனால் அகத்தியரோ..'வாதாபி..உலக நன்மையின் பொருட்டு உன்னை நான் ஜீரணிக்கிறேன்' என்று கூறி மூன்று முறை தன் வயிறை தடவிக் கொடுத்தார்.இல்வலனோ..'வாதாபி வா..வா..' என்றான்.அகத்தியரோ..'இல்வலா! இனி வாதாபி வர மாட்டான்.அவன் கதை முடிந்தது.அவனை நான் ஜீரணித்து விட்டேன்' என்று கூறினார்.தம்பியின் மரணம் அறிந்த இல்வலன் வருந்தினான்.

பின் அவன் அகத்தியரை நோக்கி, 'முனிவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டி நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்?' என்றான்.

'அசுரா..உன்னிடம் அதிகம் செல்வம் இருப்பதாய் அறிந்தோம்..செல்வத்தால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..ஆகவே..மிக்க செல்வத்தைத் தருவாயாக' என்று கேட்டார்.

அதற்கு இல்வலன், 'நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்' என்றான் செருக்குடன்.

'இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் பொன் நாணயமும்,பதினையாரிரம் பசுக்களும் கொடு. எனக்கு முப்பதாயிரம் பசுக்களும், முப்பதாயிரம் பொன்னும், மற்றும் விரைந்து செல்ல இரண்டு குதிரைகளையும், பொன் தேரையும் கொடு' என்றார் அகத்தியர்.

'முனிவரே!தாங்கள் கேட்டது போல பசுக்களும் பொன்னும் தருகிறேன்.பொன் தேர் ஏதும் என்னிடம் இல்லை' என்றான் இல்வலன்.

'போய் நன்றாகப் பார்.பொன் தேர் இருக்கிறது' என்றார் அகத்தியர்.

சென்று பார்த்த அசுரன் பொன் தேர் இருப்பதைப் பார்த்தான்.பின் , முனிவர் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.அகத்தியர் ஆஸ்ரமம் திரும்பினார்.இல்வலணோ மன அமைதி இழந்தான்.அகத்தியரை கொல்ல நினைத்தான்..தகவல் அறிந்த அகத்தியர் அவனைப் பார்வையாலேயே அழித்தார்.உடன் வந்த மன்னர்கள் அகத்தியரிடம் விடை பெற்று நாடு திரும்பினர்.

முனிவர் தன் மனைவியை அழைத்து செல்வங்களைக் காட்டினார்.லோபமுத்திரை மகிழ்ச்சி அடைந்தாள்.பின் அகத்தியர் அவளிடம் 'உனக்கு எத்தனை மகன்கள் வேண்டும்? ஆயிரமா..அல்லது அத்துணை வன்மை பொருந்திய நூறு பிள்ளைகள்..அல்லது நூறு பிள்ளைகளுக்கு இணையான பத்துப் பிள்ளைகள்..அல்லது அத்துணை வன்மையும் மிக்க ஒரு பிள்ளை வேண்டுமா? உன் விருப்பத்தைத் தெரிவி' என்றார்.

அனைத்துச் சிறப்பும் பொருந்திய ஒரு மகன் போதும் என்றாள் லோபமுத்திரை.

அவளுக்கு..வேதங்களையும், உபநிஷதங்களையும் ஓதிய படியே ஒரு மகன் பிறந்தான்.அக்குழந்தைக்கு த்ருடஸ்யு என்ற பெயர் இட்டனர்.பிறந்ததுமே பலவானாகத் திகழ்ந்த அக்குழந்தை தந்தையின் ஹோமத்திற்காக வேண்டிய ஸமித்தினைச் சுமை சுமையாகக் கோணர்ந்தது.இதனால் இத்மவாஹன் என்னும் பெயர் பெற்றான்.

மகனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.அவரது முன்னோர்கள் அனைவரும் விரும்பிய சுவர்க்கம் அடைந்தனர்.அப்புத்திரனால் அகத்தியர் ஆஸ்ரமமும் உலகப் பிரசித்தி அடைந்தது...என லோமசர் கூறி முடித்தார்.

இக்கதையினால்..செருக்கும் அடக்கமின்மையும் குலத்தைக் கெடுத்துவிடும் என உணரலாம்.

No comments:

Post a Comment