Sunday, June 12, 2011

152-உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்



பீஷ்மர் தருமருக்கு மேலும் சொல்லத் தொடங்கினார்..

'தருமா..காலகவிருஷியர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு கூண்டில் காகம் ஒன்றை அடைத்துக் கொண்டு,ஆங்காங்குச் சென்று குற்றம் புரிபவரைக் கண்டுபிடித்து விடுவார்.காகத்தின் மொழி எனக்குத் தெரியும்..ஆகவே காகம் சொல்வதை நான் புரிந்துக் கொள்வேன் என்பார்.அவர் ஒரு சமயம் கோசல நாட்டு மன்னனான க்ஷேமதரிசியைக் காணச் சென்றார்.மன்னனைச் சார்ந்த அதிகாரிகளின் குற்றத்தைக் காக மொழியின் மூலம் தெரிந்து கொண்டார்.

நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட முனிவர் அமைச்சர்களுடன் மன்னன் இருக்கையில் அங்குச் சென்றார்.அமைச்சருள் ஒருவரை நோக்கி..'நீ செய்த அரச குற்றங்களை நான் அறிவேன்.அரசாங்க உடமைகளைத் திருடியதையும்,செல்வத்தைக் கொள்ளை அடித்ததையும் நான் என் காகம் மூலம் அறிந்து கொண்டேன்.நீ செய்தது சரிதானா..என உன் மனசாட்சியைக் கேட்டுப் பார்' என்றார்.முனிவரின் அப்பேச்சைக் கேட்ட அவையோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் கோசல நாட்டில் எங்கும் காகம் மொழி பற்றியே பேசப்பட்டது.அதிகாரிகளின் ஒழுக்கக் கேட்டை மக்கள் கடுமையாக விமரிசனம் செய்யத் தொடங்கினர்.அமைச்சர்கள் பற்றிய புகார்கள் எங்கும் எழுந்தது.இந்நிலையில் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் முனிவருக்கு எதிராகச் சதி செய்யத் தொடங்கினர்.முனிவரின் காகத்தைத் தீர்த்துக் கட்டுவது எனமுடிவெடுத்தனர்.முனிவர் உறங்கிக் கொண்டிருந்த போது கூண்டிலேயே காகத்தைக் கொன்றனர்.காலையில் எழுந்த முனிவர் காகத்தின் கதி கண்டு வருந்தினார்.மன்னனைக் காணச் சென்றார்.

க்ஷேமதரிசி என்னும் அம் மன்னனை நோக்கி ..'மன்னா..உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.உனக்குச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.உன்னைச் சார்ந்த சிலர் உனக்கு கேடு செய்கின்றனர்.அரசாங்க பொக்கிஷத்தைஸ் சிறிது சிறிதாகத் திருடுகின்றனர்.நான் இதை என் காகத்தின் மூலம் அறிந்தேன்.உன்னைச் சார்ந்தவர்களின் கோபம் காகத்திடம் சென்று அதனைக் கொன்று விட்டது.

உயிர்களீடம் கருணை அற்ற அவர்கள் வேறொரு திட்டத்தையும் வைத்துள்ளனர்.உன் சமையல்காரர் மூலம் உன் அழிவை விரும்புகின்றனர்.ஆகவே நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவர்களிடம் நான் கொண்ட அச்சத்தால் நான் வேறு ஆசிரமம் செல்ல விழைகிறேன்.அவர்கள் கோபத்தால் என் மீது வீசிய அம்பு என் காகத்தைக் கொன்று விட்டது.பயங்கரமான விலங்குகளால் சூழப்பட்ட குகையில் நுழைவது போல துன்பம் தருவது, கொடியவர்களால் சூழப்பட்ட அரச நீதியில் நுழைவது.ஆயினும் அரச நீதி என்னும் நதியைக் காகம் என்னும் படகைக் கொண்டு கடந்து வந்தேன்.

உன் அரசு வஞ்சகர்களால் சூழப்பட்டுள்ளது.இந்நிலையில் நீ யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.நிலைமை இப்படியிருக்கையில்..நான் எப்படி இங்கு தங்குவது? தீமையின் கை இங்கு ஓங்கி உள்ளது.நன்மை செய்பவன் கொல்லப்படுகிறான்.தீமை செய்பவனை யாரும் கண்டுக் கொள்வதில்லை.நல்ல ஆட்சியில் நல்லவர் துன்பம் இல்லாது இருப்பர்.தீயவர் தண்டிக்கப் படுவர்.உனது ஆட்சி சுழல்கள் நிறைந்த அபாயகரமான நதியாக இருக்கிறது.நீயோ நஞ்சு கலந்த உணவாக இருக்கிறாய்.அதாவது தீயோரின் ஆலோசனைதான் உன் நெஞ்சில் நிறைந்துள்ளது.

உன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மிக்க கொடியவர்களாக உள்ளனர்.நீயோ பாம்புகள் நிறைந்த கிணறு போல் இருக்கிறாய்.முட்புதர்கள் பின்னிப் படர்ந்து தண்ணீர் வெளியே தெரியா நதியாய் இருக்கிறாய்.உடன் இருப்போரால் உனக்கு அழிவு நிச்சயம்.உனது ஆட்சியின் மாட்சியையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன்.நாடாளும் ஆசைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மக்களிடம் அன்புள்ளவனாக ஆட்சி செய்கிறாயா என்பதை அறிய முற்பட்ட போது உன்னிடம் பெரிய குற்றம் ஏதும் தெரியவில்லை.ஆனால் அமைச்சர்கள் அப்படியில்லையே.அவர்கள் தாகத்திற்கு உதவாத தண்ணீர் போல உள்ளனர்.நீயோ பசித்தவனுக்குக் கிடைத்த உணவு போல இருக்கிறாய்.

உனது நன்மையை நாடுபவன் நான் என்பதை உணர்ந்த அமைச்சர்கள் என்னிடம் வெறுப்பு கொண்டுள்ளனர்.அவர்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை நான் செய்த பெரிய குற்றமாகக் கருதுகின்றனர்.நீயும் அவர்களிடம் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கூறினார் முனிவர்.

மன்னன் முனிவரை நோக்கி,'உமது துன்பத்தை நான் போக்குகிறேன்.நீர் இங்கேயே தங்கி இருக்கலாம்.உம்மை வெறுப்பவரை நான் வெறுக்கிறேன்.அவர்களுக்கு எத்தகைய தண்டனை தரப் போகிறேன் என்பதை பாருங்கள்.நான் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நன்மை செய்யத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்' என்றான்.

முனிவர் மன்னனிடம், 'நீ காகம் கொல்லப்பட்ட செய்தியை வெளியே சொல்ல வேண்டாம்.ஆனால் உனது அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து விடு.பின் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவர்களைக் கொலை செய்.ஒரு குற்றத்தைப் பல பேர் சேர்ந்து செய்வாராயின் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்.பொருளின் தன்மையால் தான் ஒருவரிடம் செருக்குத் தோன்றுகிறது.அந்தப் பொருளை அப்புறப்படுத்தி விட்டால் அகங்காரம் குறையும்.அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான்.மனதிலேயே வைத்திருப்பான்.தீயவரைத் தீயவரைக் கொண்டே அழிக்க வேண்டும்.இந்த ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றுதான் உனக்கு இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதாயிற்று.மக்கள் நலனை நான் பெரிதும் விரும்புகிறேன். வேந்தே!இப்போது என்னைப்பற்றி உரைக்கின்றேன்..என் பெயர் காலகவிருக்ஷயன் என்பதாம்.உன் தந்தையும், என் தந்தையும் உற்ற நண்பர்கள்.அந்தப் பிணைப்பு வழி வழியாய் தொடர வேண்டும் என விழைகிறேன்.இப்போது நீ அரசன்.உன் பகைவரை நீ நண்பன் எனக் கருத வேண்டாம் என மீண்டும் உரைக்கின்றேன்.அரசாட்சியை அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஏன் துன்பம் அடைகிறாய்? அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது தவறாகும்'" என்றார்.

நல்லது கெட்டது உணர்ந்த கோசல நாட்டு மன்னனும் முனிவரின் நல் யோசனைகளை ஏற்று நாட்டை நன்கு ஆண்டான்.

"தருமா! உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள யாரும் தயங்கக் கூடாது என்பதனையும், அதே நேரத்தில் தீயவர்களின் யோசனையை ஏற்கக் கூடாது என்பதனையும் இதன் மூலம் அறிவாயாக" என்றார் பீஷ்மர்.
 

2 comments:

இராஜராஜேஸ்வரி said...

அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான்.மனதிலேயே வைத்திருப்பான்.தீயவரைத் தீயவரைக் கொண்டே அழிக்க வேண்டும்.//

அருமையான பயனுள்ள கருத்துக்கு நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.

Post a Comment