Monday, October 25, 2010

116-ஆபத்து காலத்தில் மன்னன் நடக்கும் முறை

யுக மாறுபாட்டால் தருமம் குன்றித் திருடர்கள் மலிந்து விட்டால், அத்தகைய ஆபத்துக் காலத்தில் மன்னன் எவ்வாறு நடந்துக் கொள்ள வேண்டும்? என த்ருமர் வினவ பீஷ்மர் உரைக்கிறார்.



'தருமா..இது பற்றி முன்னொரு காலத்தில் சத்ருந்தபன் என்னும் மன்னனுக்கும், பாரத்வாஜருக்கும் நடந்த உரையாடலை உனக்கு உனக்குச் சொல்கிறேன்..கேள்..



சௌவீர தெச மன்னனான சத்ருருந்தபன் பாரத்வாஜரிடம் சென்று, 'பெற முடியாத ஒரு பொருளைப் பெறுவது எப்படி? பெற்ற பொருளை வளரச் செய்வது எப்படி?வளர்ந்த பொருளைப் பயன்படுத்துவது எப்படி? என வினவினான்.



அது கேட்ட பாரத்வாஜர் அறவுரை அருளினார். மன்னன் தண்டிப்பதில் உறுதியாய் இருக்க வேண்டும்.தண்டனையைக் கண்டு மனிதன் பயப்படுவான்.ஆதலால் அனைவரையும் தண்டனையினாலேயே அடக்கி வைக்க வேண்டும்.அப்போதுதான் நாட்டில் அமைதி நிலவும்.நாட்டில் அமைதி நிலவினால்தான் நல்ல பல திட்டங்களை ஒழுங்காக நிறைவேற்ற முடியும்.ஆகையால்தான் சாம தான பேத தண்டம் ஆகிய நான்கில் தண்டம் முக்கியமானது என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.பெரிய மரத்தின் வேர் அறுபட்டால் கிளைகள் எங்கனம் இருக்கும்.அது போல பகைவரின் ஆணிவேரை முதலில் அறுக்க வேண்டும்.பின்னர் அவனுக்குத் துணையாக இருப்பவரை அழிக்க வேண்டும்.



ஆபத்துக் காலத்தில் அரசன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.ஆற்றலுடன் போரிட வேண்டும்.ஆற்றலுடன் பின் வாங்கவும் தயாராய் இருக்க வேண்டும்.பின் வாங்கத் தயங்கக் கூடாது.பணிவான சொற்களைப் பேச வேண்டும்.விருப்பு, வெறுப்புகளுக்கு ஆட்படாமல் செயல் பட வேண்டும்.பகைவனிடம் சமாதானம் செய்துக் கொண்ட போதிலும் அவனிடம் நம்பிக்கைக் கொள்ளக் கூடாது.அப்பகைவனிடம் நட்புடன் நடந்துக் கொண்டாலும் வீட்டில் இருக்கும் பாம்பிடம் இருப்பது போல எப்போதும் பயத்துடன் இருக்க வேண்டும்.செல்வத்தை விரும்புபவன் தாழ்ந்து பணிந்து கண்ணீர் வடித்துக் காரியத்தைச் சாதித்துக் கொள்ள வேண்டும்.காரியம் ஆகும்வரை பகைவரைத் தோளில் சுமக்க வேண்டும்.காரியம் முடிந்த உடன் மட்குடத்தைக் கல்லில் போட்டு உடைப்பதுபோல அவனை அழித்துத் தொலைக்க வேண்டும்.



ஒரு நொடிப்பொழுதானாலும் கருங்காலி மரத்தின் தீயைப் போல ஒளி விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.உமியில் உள்ள தீயைப் போல நீண்ட காலம் புகைந்து கொண்டிருக்கக் கூடாது.நன்றி கெட்டவரிடம் பொருள் தொடர்பு கொள்ளக் கூடாது.அவர்கள் காரியம் முடியும் வரை நல்லபடியே நடந்து கொள்வர்.காரியம் முடிந்தபின் அவமதிப்பர்.ஆதலால் அத்தகையவரின் காரியத்தை முழுதும் முடிக்காமல் மிச்சம் உள்ளதாகவே வைத்திருக்க வேண்டும்.



வேந்தன் விடா முயற்சியுடன் பகைவனுடைய வீட்டுக்குச் செல்ல வேண்டும்.அவன் உடல் நலக் குறைவாய் இருந்தால் உடல் நலன் குறித்து விசாரிக்க வேண்டும்.சோம்பேறிகளும்,தைரியம் இல்லாதவர்களும்,பிறரது பழிச் சொற்களுக்குப் பயப்படுவர்களும்,விடா முயற்சியின்றி விட்டு விட்டு முயல்பவர்களும் பொருளை அடையமுடியாது.ஆமை தன் உறுப்புகளை மறைத்துக் கொள்வது போல் மன்னன் தன் குறைகளை மறைத்துக் கொள்ள வேண்டும்.குயில்,பன்றி,மேருமலை,ஒன்றும் இல்லாத வீடு, பாம்பு ஆகியவற்றைப் போல ஒழுக வேண்டும்.



(குயில்-தான் காக்க வேண்டிய முட்டையைக் காக்கையின் கூட்டில் இட்டு அதனைக் காப்பாற்றுமாறு செய்யும்.அதுபோல மன்னன் பயிர்,வாணிபம்,வழி,காடுகள் ஆகிய தனது பொருள்களைப் பிறரைக் கொண்டு காக்குமாறு செய்ய வேண்டும்.

பன்றி-தான் உண்ணும் கோரைப் புற்களை வேருடன் களைந்து உண்ணும்.அது போல மன்னன் பகைவர்களை வேருடன் களைந்துக் கொல்ல வேண்டும்.

மேருமலை-தன்னைத் தாண்டத் தகாதவாறு அசைவற்ரு நிற்கும்.அதைப் போல வேந்தனும் தன்னைப் பகைவர் வெற்றி கொள்ள முடியாதபடி உறுதியுடன் இருக்க வேண்டும்.

ஒன்றும் இல்லாத வீடு-பல பொருள்களை விரும்புவதாக இருக்கும்.அதைப் போலவே அரசனும் எல்லாப் பொருள்களையும் விரும்புபவனாக இருக்க வேண்டும்

பாம்பு-கடும் சினத்துடன் யாரும் நெருங்க முடியாததாக இருக்கும்.அதைப்போல மன்னனும் பகைவரால் நெருங்க முடியாதவனாக இருக்க வேண்டும்)

(தொடரும்)

No comments:

Post a Comment