Thursday, October 7, 2010

115-தருமங்களின் மூலக் காரணம் சீலம்

தருமர்..பீஷ்மரைப் பார்த்து 'எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும்..சீலம் என்பது என்ன? அதனை எப்படி பெறுவது?' என வினவினார்.
பீஷ்மர் உரைக்கலானார்...
திரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..
பீஷ்மர்- 'தருமா..நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது.முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தைக் கண்டு பொறாமைக் கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான்.அப்போது திருதிராஷ்டிரன் "மகனே! எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய்? உனக்கு நேர்ந்த துன்பம் என்ன?" எனவினவினான்.
அதற்கு துரியோதனன்'தந்தையே! தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்கப் பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர்.இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது.அது கண்டு மனம் புழுங்குகிறது என்றான்.அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன்..'மகனே நீ சீலத்தைப் போற்றுவாயாக.அதனைப் போற்றினால்..மூவுலக ஆட்சியைக் கூட நீ பெறலாம்.சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை.மாந்தாதா ஒரே இரவிலும்,ஜனமேஜயர் மூன்று நாட்களிலும் நாபகர் ஏழு நாட்களிலும் பூமியைப் பெற்றார்கள்.இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.
சீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல்..கருணை,தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும்.இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள்.முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.
நாட்டை பறிகொடுத்த இந்திரன்,பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டிக் கொண்டான்.பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்குக் காரணமான ஞானத்தைப் பற்றிக் கூறினார்.இந்திரன் 'இதைவிட மேலானது இருக்கிறதா? இவ்வளவுதானா?' என வினவினான்.'இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க' என்றார் பிரகஸ்பதி.இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் 'இன்னமும் இதைப் பற்றி அறிய விரும்புகிறேன்' என்றான்.'அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும்' என்றார்.
இந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார்.மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டிக் கொண்டார்.அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான்.அந்தணனோ ;'தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள்' என்று கூற , பிரகலாதனும் ஒப்புக் கொண்டான்.
பின்னர் ஒரு நாள்,அவன் பணிவிடையைக் கண்டு மகிழ்ந்த பிரகலாதன் 'நீ வேண்டும் வரம் யாது?' என்றான்.
'உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன்' எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான்.ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி'அப்பயியே..நீ கேட்ட வரத்தைத் தந்தேன்' என்றான்.உடன் அந்தணன் மறைந்தான்.
பிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.
அப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது..'நீ யார்?' என அவன் வினவ..'நான்தான் சீலம்.உன்னால் விடப்பட்டு செல்கிறேன்.எங்கே போகிறேன் தெரியுமா? உன்னைடம் ஏவல் புரிந்த அநதணனிடம்' என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.
பிரகலாதன் மேனியிலிருந்த் மீண்டும் ஒரு ஒளி..'நீ யார்' என்றான்.'நான் தருமம்..சீலம் எங்கு இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்..ஆகவே நானும் அந்த அந்தணனை நாடிச் செல்கிறேன்' என உரைத்துப் போனது.
பிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி..இம்முறை சத்தியம்.எங்கே தருமம் உள்ளதோ..அங்கே நான் இருப்பேன் என தருமத்தைத் தொடர்ந்தது.
மீண்டும் ஒரு ஒளி..அது 'பலம்" சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.
பின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள்.நீ யார் என்றான் பிரகலாதன்.
அதற்கு அந்த மகள் 'நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன்.இப்போது உன்னிடம் பலம் நீங்கிச் சென்றுவிட்டது.எனவே நான் அந்த் பலத்தை நாடிச் செல்கிறேன்.நான் நாடிச் செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது."என்றாள்.
'யார் அந்த அந்தணன்' என்றான் பிரகலாதன்.
'அவன் தேவேந்திரன்.அந்தண வேடம் தாங்கி உனக்குப் பணி புரிந்தான்.நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய்.இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்துச் சென்றான்.சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம்,சத்தியம்,பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின.இறுதியாக நானும் செல்கிறேன்'என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.

ஆகவே..துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நன்மைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர்' என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கிக் கூறினார்.
பீஷ்மர் தருமருக்கு இப்படி உரைத்தார்.
(பீஷ்மர் உரைத்தல் தொடரும்)

2 comments:

Unknown said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

erodethangadurai said...

நல்ல பதிவு... மேலும், உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி, தொடர்ந்து வருகை தாருங்கள்.. !

Post a Comment