Monday, September 27, 2010

112-மூடன் தரக் குறைவான வார்த்தையைக் கூறினால்....

தருமர் பீஷ்மரைப் பார்த்து..'பிதாமகரே! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமரே! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன் பழிக்கும் ஒருவனுடைய புண்ணியத்தைத் தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்குக் கொடுத்துத் தன்னைத் தூய்மை செய்து கொள்கிறான்.இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்தக் கூடாது.அவன் உலகத்தில் பகையைப் பெற்றுப் பயனற்ற கதியை அடைவான்,போகும் இடமெல்லாம்"இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான்.அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான்" எனத் தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழித்துப் பேசி பழக்கப்பட்ட ஒருவன் தன் தாயைப் பற்றிக் கூட அடாத பழி கூறுவான்.மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் மயில் போல அவன் மகிழ்ச்சி அடைவான்.பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூடாது.எவன் நேரில் புகழ்ந்தும் மறைவில் குறை கூறியும் பேசுகிரானோஅவன் உலகில் நாய் போன்றவன் ஆவான்.ஞானமும், கல்வியும்,தருமமும் இழந்தவன் ஆவான்.அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன.ஆதலால், நல்லறிவுள்ளவன் பாப புத்தியுள்ளவனும்,விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தைப் போல உடனே விலக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தைச் சொலபவன் பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களைத் தானே வெளியிடுபவன் ஆவான்.அடக்கமின்றி பிறர் பழி கூறித் திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையைப் போலவும், தெருத் தெருவாகச் சுற்றி அலையும் நாயைப் போலவும் கருதி விலக்க வேண்டும்.நாவடக்கம் இன்றிப் பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும்.உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் தாழ்ந்தோருடன் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள்.,கடிப்பார்கள்.,புழுதி வாரி இறைப்பார்கள்.,பல்லைக் காட்டி பயமுறுத்துவார்கள்.

கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்துக் கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள்.ஏசுபவன் பழியேந்திச் செல்வான்.,பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான்.தருமா..நீ அற்பர் சொல்லைப் பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக' என்றார் பீஷ்மர்.

2 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

அருமை

Unknown said...

படிக்கப் படிக்க வருத்தப்படும் மனதுக்கு ஆறுதலாயிருக்கு;-(

இனியும் தொடர்ந்து படிப்பேன். மனமார்ந்த நன்றி.

Post a Comment