Thursday, September 2, 2010

110-குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தருமர் பீஷ்மரை நோக்கி 'ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரைத் தன் வசமாக்கிக் கொள்ளத்தக்க வழிகள் யாவை' என வினவினார்.

அதற்கு பீஷ்மர், 'இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..

கண்ணபிரான்..நாரதரை நோக்கி..'நாரதரே..பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும் ரகசியத்தை அறியத் தக்கவரல்லர்.ஆதலால் உம் மேன்மையை அறிந்துக் கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்துச் சில உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன்.புசிக்கத் தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன்.மற்றொரு பாதியைச் சுற்றத்தாருக்குத் தருகிறேன்.அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன.எனக்குத் துணை செய்வார் யாரும் இல்லை.அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை..விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை.

தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய்..எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன்.இந்நிலையில் எனக்கும்,என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டார் .

நாரதர்.."கண்ணா..ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு.ஒன்று உட்பகை.மற்றது வெளிப்பகை.சுற்றத்தாரால் வருவது உட்பகை.மற்றோரால் வருவது வெளிப்பகை.வெளிப்பகையை விடக் கொடியது உட்பகை.நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டைத் திரும்ப பெற எண்ணுகிறீர்.கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண வி ரும்புவதைப் போன்றது.ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும்.ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது.அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல.மென்மையானது..மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' என்றார்.

கண்ணன் நாரதரைப் பார்த்து 'இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது?' என்று வினவ, நாரதர்,'கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல்..'என்றார்.'இனிய சொற்கள் கூர்மையான அரத்தைப் போன்றவை.இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும்.

எப்போதும் சுற்றத்தாரைக் காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும்,புகழும்,ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் உன்னச் சார்ந்தே உள்ளனர்.உயிர்கள் அனைத்துக்கும் நாதரே...நீர் அறியாதது ஏதுமில்லை' என்று முடித்தார்.

இதை எடுத்து உரைத்த பீஷ்மர்..சுற்றந் தழுவுதலின் மேன்மையைத் தருமருக்கு உணர்த்தினார்.

இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்தப் பட்டது.

(பீஷ்மரின் உரையாடல் தொடரும்)

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

2 comments:

ஷைலஜா said...

உண்மைதான் .குற்றம்பார்க்கின் சுற்றம் இல்லைதான் நல்ல பதிவு!

நடராஜன் said...

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பதை வாழ்க்கையில் உணர்ந்தவன். நன்று.

Post a Comment