Tuesday, April 27, 2010

99-கண்ணனிடம் பீஷ்மரின் பணிவான வினா

கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார்..பின் கண்ணனை நோக்கி.."கண்ணா..உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன்..உமது வாக்கன்றோ வேத வாக்கு..என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன்..எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை..இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும்..உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூடக் கிடையாதே..எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்' என உரைத்தார்.

அது கேட்டு கண்ணன் 'கௌரவர்களில் சிறந்தவரே..உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர்..அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர்..இதோ நான் அருள் புரிகிறேன்..உமது உடலில் உள்ள எரிச்சலும்..சோர்வும்,தளர்வும் உடனே நீங்கிவிடும்.உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும்..இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம்..உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன்..' என்றார்.

அப்போது அவரை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர்..தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர்.வனம் தூய்மையாக காட்சி அளித்தது..எங்கும் சாந்தி நிலவியது..சூரியன் மறைந்தான்..அனைவரும் 'நாளை வருகிறோம்' என்று பீஷ்மரிடம் விடை பெற்றுத் திரும்பினர்.

மறுநாள்..கண்ணன்,நாரதர் உட்பட அனைவரும் தருமத்தின் இருப்பிடமான குருக்ஷேத்திரம் வந்தனர்.அனைவரும் அம்புப் படுக்கையில் இருந்த பீஷ்மரிடம் சென்றனர்.தருமர் பீஷ்மரை கையெடுத்துக் கும்பிட்டார்.பீமன்,அர்ச்சுனன்,நகுலன், சகாதேவன் ஆகியோர்களும்..மற்றவர்களும் சிரம் தாழ்த்தி அவரை வணங்கினர்.

அப்போது நாரதர் அனைவரையும் நோக்கி..'கங்கை மைந்தரிடம் அறிய வேண்டிய அனைத்து தர்மங்களையும் கேட்டுத் தெரிந்துக் கொள்ளுங்கள்.இந்தப் பீஷ்மர் சூரியன் போல மறைய இருக்கிறார்.ஆகவே அவரிடம் நெருங்கிச் சென்று வேண்டியதைக் கேளுங்கள் சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்' என்றார்.நாரதர் சொன்ன மொழிகளைக் கேட்டதும் அனைவரும் பீஷ்மரை நெருங்கினர்.ஆனால் வாய் திறந்து பேச அஞ்சினர்..அப்போது..

தருமர் கண்ணனிடம் "கண்ணா..உம்மைத் தவிரப் பாட்டனாரிடம் பேசும் சக்தி இங்கு யாருக்கும் இல்லை..ஆதலால் நீரே பேசும்' என்று வேண்டிக் கொண்டார்.பின் கண்ணனே தன் பேச்சை ஆரம்பித்தார்..'கங்கை மைந்தரே..இரவு நேரம் நன்கு கழிந்ததா? சோர்வு போனதா? ஞானங்கள் அனைத்தும் தோன்றுகிறதா?' என்று வினவினார்.

உடன் பீஷ்மர்..

"கண்ணா..உம் அருளால் என் உடல் எரிச்சல்கள் தொலைந்தன..மயக்கம் விலகியது.இப்போது தெளிந்த சிந்தனையுடன் உள்ளேன்..கண்ணா..நீவரம் அளித்தபடி..எல்லாத் தருமங்களும் மனதில் ஒளிவிடுகின்றன.ராஜ தருமம்,ஆபத்துத் தருமம்,மோட்ச தருமம் ஆகிய அனைத்துத் தருமங்களையும் அறிகின்றேன்.எந்தத் தருமத்தில் எப் பிரைவைக் கேட்டாலும் விளக்கமாகச் சொல்கிறேன்..கண்ணா..உன் புண்ணியத்தால்..நான் திரும்பவும் இளைஞன் போல உணருகிறேன்..நற்கதிக்குச் செல்லவிருக்கும் நான் அக்கதியை அடையும் வழியை எடுத்துக் கூறும் வல்லமை பெற்றவனாக உள்ளேன்..ஆயினும்..உம்மிடம் மண்டியிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்..இந்தத் தரும உபதேசங்களை நீரே தருமருக்குக் கூறாதது ஏன்?' என்றார்.

2 comments:

Ragavachari B said...

பீஷ்மரின் தரும உபதேசங்களை உங்கள் மூலம் அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்.

எல் கே said...

arumai

Post a Comment