Friday, December 25, 2009

82-தருமரின் உறுதி

அர்ச்சுனன் கூறிய காரணங்களை கேட்டும் தருமர் மனம் மாறவில்லை.துறவு மேற்கொள்ள இருக்கும் தன் முடிவில் மாற்றமில்லை என்றார்.அவர் அர்ச்சுனனிடம்..'நான் சொல்வதை உன் ஐம்புலன்களையும் ஒருமுகப் படுத்தி நான் சொல்வதைக் கேள்.அப்போது நான் சொல்வதில் உள்ள நியாயம் உனக்குப் புரியும்.முனிவர்கள் சேர்க்கையால் நான் மேலான நிலைமையை அடையப் போகிறேன்.நீ சொல்வதால் அரசாட்சியை நான் மேற்கொள்ளப் போவதில்லை.நான் காட்டுக்குச் செல்லப் போவது உறுதி.கானகம் சென்று கடுந்தவம் இருக்கப் போவது உறுதி.தவிர்க்க இயலாது.உலகப் பற்று நீங்கி முனிவர்களுடன் கூடி ஆத்ம சிந்தனையில் திளைப்பேன்.உடலை சாத்திரப்படி உண்ணாவிரதத்தால் இளைக்கச் செய்வேன்.இரண்டு வேளையும் நீராடுவேன்.காட்டில் உள்ள பறவை,விலங்குகளின் இனிய ஒலிகளைக் கேட்டு மனம் மகிழ்வேன்.தவம் செய்வோர் மேற்கொள்ளும் சாத்திர விதிப்படி பின்பற்றுவேன்.விருப்பு,வெறுப்பு,இன்ப துன்பம்,மான அவமானம் ஆகியவற்றிலிருந்து விலகி எப்போதும் தியானத்தில் இருப்பேன்.எனக்கு இனி நண்பரும் இல்லை..பகைவரும் இல்லை.

வாள் கொண்டு ஒருவர் கையை அறுத்தாலும் சரி,சந்தனத்தால் ஒருவர் அபிசேகம் செய்தாலும் சரி இருவருக்குமே தீங்கையோ, நன்மையையோ நினைக்க மாட்டேன்.இவ்வளவு நாள் இந்த புத்தி இல்லாமல்தான் சகோதரர்களைக் கொன்றேன்.பிறப்பு,இறப்பு,மூப்பு,நோய்,வேதனை இவைகளால் பீடிக்கப் படும் மனித வாழ்க்கையில் ஒரு பயனும் இல்லை.நிலையில்லா உலகில் தோன்றும் அற்ப ஆசைகளால் ஒரு அரசன் மற்ற அரசனைக் கொல்கிறான்.இவ்வளவு நாட்கள் அறிவு தெளிவற்றுக் கிடந்த நான் இப்போது தெளிந்த ஞானத்துடன் ஒரு முடிவிற்கு வந்து விட்டேன்..என்றும் நிலைத்து நிற்கக் கூடிய முக்தியை அடையத் துணிந்து விட்டேன்' என்றார்.

பீமன் சத்திரியர் துறவு மேற்கொள்ளக்கூடாது என்றும் தருமர் அரசாட்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்திக் கூறியவை அடுத்த பதிவில்...

1 comment:

பித்தனின் வாக்கு said...

நல்ல விளக்கங்கள், அருமையான வரிகள். நன்றி.

Post a Comment