Tuesday, December 8, 2009

80-தருமரின் துயரம்

போர்க்களத்தில் ஏற்பட்ட உயிர்ச் சேதங்களை எண்ணி தருமர் சோகமாகக் காணப்பட்டார்.சகோதரர்களையும்,சுற்றத்தாரையும் இழந்து பெற்ற பயன் என்ன என ஏங்கினார்.அர்ச்சுனனைக் கூப்பிட்டு தருமர் சொல்ல ஆரம்பித்தார்.

'நாம் காட்டிலேயே இருந்திருந்தால் துயரம் இருந்திருக்காது. நம் சகோதரர்களைக் கொன்றதால் என்ன நன்மை..வனத்தில் இருந்த போது நம்மிடம் பொறுமை இருந்தது.அடக்கம் இருந்தது,அஹிம்சை இருந்தது.இவையே தருமம்.அறிவின்மையாலும்,ஆணவத்தினாலும்,பொருளாசையாலும் அரசாட்சியில் உள்ள கஷ்டத்தை விரும்பி துயரத்தை அடைந்தோம்.எல்லோரையும் கொன்றுவிட்டு கேவலமாக உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.நம்மால் கொல்லப்பட்டவர்கள் மரணம் என்னும் வாயிலில் புகுந்து யமனின் மாளிகையை அடைந்து விட்டார்கள்.நன்மைகளை விரும்பும் தந்தைகள் அறிவுள்ள மக்களைப் பெற விரும்புகின்றனர்.தாய்மார்கள் விரதங்களும், தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபடுகின்றனர்.மகனையோ,மகளையோ பெற்று அவர்கள் நல்லபடியாக கௌரவத்துடனும்,செயல்திறனுடனும் புகழுடன் வாழ்வார்களாயின் தமக்கு இம்மையிலும்,மறுமையிலும் நற்பேறு கிட்டும் என பெற்றோர் எண்ணுகின்றனர்.இங்கே அவர்கள் நனவு கனவாயிற்று.அவர்கள் வாழ்க்கையும் பாலைவனம் போல் ஆயிற்று.அவர்களின் பிள்ளைகள் நம்மால் கொல்லப்பட்டார்கள்.அவர்கள் தாய் தந்தையர்க்கு ஆற்ற வேண்டிய கடமை நம்மால் தடுக்கப்பட்டது.

ஆசையும், சினமும் மிக்கவர்கள் வெற்றியின் பயனை அடைய முடியாது.இதில் கௌரவர்களும்..நாமும் ஒன்றுதான்.இந்த பூமியின் பயனை அவர்களால் அனுபவிக்க முடியவில்லை.ஆசைவயப்பட்ட நம்மால் மட்டும் இதன் பயனை அனுபவிக்க முடியுமா?எண்ணிப்பார்த்தால் துரியோதனனால் அலைக்கழிக்கப்பட்ட நாமே இந்த உலகின் அழிவுக்கும் காரணமானோம்.நம்மிடம் பகைக் கொண்டு நம்மை அழிப்பதே அவன் லட்சியமாக இருந்தது.நமது பெருமையைக் கண்டு பொறாமை கொண்ட அவன் உடல் வெளுத்துக் காணப்பட்டான்.இதை சகுனியே திருதிராட்டிரனிடம் சொல்லி இருக்கிறான்.துரியோதனன் மீது கொண்ட பாசத்தால் யார் பேச்சையும் கேட்காமல் துரியோதனன் மனம் போனபடி போக வழிவிட்டார்.பீஷ்மரின் பேச்சையும் விதுரருடைய பேச்சையும் கேளாமல் மகனின் மனம் போல செயல்பட்டார்.

கெட்ட புத்தியுள்ள துரியோதனன் பழிபட செயல் புரிந்து உடன்பிறந்தவர்களைக் கொல்வித்தான்.தாய்,தந்தையரைச் சோகத்தில் ஆழ்த்தினான்.கண்ணனை கடுஞ்சொற்களால் ஏசினான்.

யார் செய்த பாவமோ..நாடு அழிந்தது.பல்லாயிரம் வீரர்கள் மடிந்ததும்..நம் கோபம் அகன்றது.ஆனால் இப்போது சோகம் வாள் கொண்டு பிளக்கிறது.நாம் செய்த பாவம்தான்..சகோதரர்கள் அழிவுக்குக் காரணமோ என அஞ்சுகிறேன்.இந்தப் பாவம் தவத்தினால் போகக்கூடியது என ஆகமங்கள் கூறுகின்றன.ஆதலால் நான் தவக்கோலம் பூண்டு காட்டிற்குச் செல்ல விரும்புகிறேன்.இல்லறத்தில் இருந்துக் கொண்டு நாம் செய்யும் செயல்கள் மீண்டும் பிறப்பு, இறப்புக் காரணம் என அற நூல்கள் கூறுகின்றன.ஆகவே சுக துக்கங்களைத் துறந்து சோகமில்லா ஓரிடத்தை நாடிச் செல்ல விழைகிறேன்.தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.ஆகவே அர்ச்சுனா..இந்த பூமியை நீயே ஆட்சி செய்..எனக்கு விடை கொடு..' என்றார்.

இதற்கு அர்ச்சுனனின் பதில் அடுத்த பதிவில்.

3 comments:

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Tamil Home Recipes

Velmaheshk said...

தவம் ஒன்றே நம் பாவங்களை சுட்டெரிக்கும் என உணர்கிறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி VELMAHESH

Post a Comment