Tuesday, June 23, 2009

47-யார்..யார்..எப்படி..?

ஓராண்டுகால அஞ்ஞாத வாசத்தை எப்படி நிறைவேற்றுவது என ஆலோசித்த பாண்டவர்கள்..அதற்கு விராட நாடே ஏற்றது என முடிவு செய்தனர்.

அப்போது அர்ச்சுனன் தருமரிடம்..'அண்ணா.., தாங்கள் ராஜசூய யாகம் செய்த மன்னர்..அங்கு போய் விராடனுக்கு பணிந்து எப்படி இருக்க முடியும்?'என்றான்.

அப்போது தருமர்..'தம்பி வருந்தாதே..கங்கன் என்னும் பெயருடன் துறவுக் கோலம் பூண்டு..விராட மன்னனுக்கு ஆசி கூறும் உயர் நிலையில் இருப்பேன்' என்றார்.

பின் ஒவ்வொருவரும் எப்படி மாறுவேஷத்தில் இருப்பது எனப் புலப்படுத்தினர்.

தான் சமையல்கலையில் வல்லவன் என்றும்..மடைப்பள்ளியைச் சார்ந்து வல்லன் என்னும் பெயருடன் சுவையான உணவு மன்னனுக்கு அளிக்கும் பணியில் ஈடுபடுவேன்...என்றான் பீமன்.

தான் இந்திரலோகத்தில் பெற்ற சாபத்தை பயன்படுத்திக் கொள்ளப் போகதாகவும்..அதன்படி 'பேடி'வேஷம் தாங்கி..பிருகன்னளை என்ற பெயருடன்..அரசகுமாரிக்கு நடனம், இசை ஆகியவை கற்றுத் தரும் பணியில் ஈடுபடப் போவதாக அர்ச்சுனன் கூறினான்.

தான் குதிரை இலக்கணங்களை அறிந்திருப்பதால்..தாமக்கிரந்தி என்ற பெயரில்..குதிரைகளை பாதுகாப்பாக வளர்க்கும் பணியில் ஈடுபடப் போவதாக நகுலன் கூறினான்.

தான் தந்திரிபாலன் என்ற பெயரில்..மாடுகளைப் பார்த்துக் கொள்ளும் பணியில் ஈடுபடப்போவதாக சகாதேவன் உரைத்தான்.

தான் சைரந்தரி என்னும் பெயருடன் மன்னன் மனைவிக்கு ஒப்பனை
செய்யும் பணியில் ஈடுபடுவேன் என்றாள் திரௌபதி.

பின்...தங்கள் ஆடை..மற்றும் ஆயுதங்களை வைக்க இடம் தேடி..மக்கள் நடமாட்டம் அற்ற ஒரு சுடுகாட்டில்..ஓங்கி வளர்ந்த ஒரு வன்னி மரத்தின்..உச்சியில் இருந்த பொந்தில் அனைவற்றையும் வைத்தனர்.

பின்னர் தருமர் துர்க்கையை நோக்கி தியானம் செய்ய..துர்க்கையும் காட்சி அளித்து..அஞ்ஞாத வாசம் நல்லபடி நடந்தேறும் என்றும்..பின் போரில் வெற்றியும் கிடைக்கும் என்றும் வரம் அளித்து மறைந்தது.

தருமருக்கு..பின் தெய்வீகத் தந்தையின் அருளால் துறவிக் கோலம் தானாகவே வந்தமைந்தது.காவியும்,கமண்டலமும் ஏந்தித் தூய துறவியாகவே காட்சியளித்தார்.

அதைப்போலவே..மற்றவர்கள் தோற்றமும்..அவரவர்கள் நினைத்தபடி மாறின.

No comments:

Post a Comment