Monday, June 20, 2011

153-ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்





தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார்.

பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றேன், கேள்' எனக் கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் பங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான்.நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது.சில நாட்களுக்குப் பின் அம் மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான்.இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான்.அறிவு மயங்கிய அம் மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.

களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான்.குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான்.அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன்..இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக்கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே..பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பலவாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந்தான்.அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

அவன் நடந்ததைக் கூறினான்.'நான் வேட்டையாட காட்டிற்குச் சென்றேன்.ஒரு தெய்வம் என்னை மயக்கிவிட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒரு அழகான குளத்தில் நீராடுகையில் பெண் ஆனேன்.இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.'

பின் தன் மக்களை அழைத்து'என் செல்வங்களே..நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்' என்றான்

பெண் ஆன அம் மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான்.முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி'இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்தவர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக" என்றான்.அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்றுமையுடன் ஆண்டனர்.

அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர்களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந்தான்.மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, 'ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில்லை..காஸ்யபரின் புத்திரர்கள்தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர்.நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள்.உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே! இது மரபில்லவே' என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான்.மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டனர்.

அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,'ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது' என வினவினான்.

அவள் அவனை நோக்கி,'நான் முன்னர் மன்னனாக இருந்தேன்.அப்போது நூறு பிள்ளைகளைப் பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன்.பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க்கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைகளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர்.இதைவிட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)

இந்திரன் அவளை நோக்கி, 'முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய்.இதனால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்' என்றான்.

ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி'நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப்பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது.தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல' என மன்றாடினாள்.

தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு,'உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளா?' என வினவினான்.

;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.' என்றாள்.

இந்திரன் வியப்புடன்,'நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?'என்றான்.

அதற்கு அவள் 'பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம்.ஆண்களுக்கு அப்படி இல்லை.ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை பிழைக்கச் செய்ய வேண்டுகிறேன்' என்றாள்.

உடன் இந்திரன், 'உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்' என்றார்.மேலும் அவளை நோக்கி, 'நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கிறாயா?' என்றான்.

"நான் மீண்டும் ஆணாக விரும்பவில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்.ஆண் பெண் புணர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள்.இதனால்தான் நான் பெண்தன்மையை விரும்புகிறேன்.நான் இப்படியே பெண்ணாகவே இருந்து விடுகிறேன்.இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கிறது" என்றாள்.

அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.

இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

5 comments:

சந்திர கிருஷ்ணா said...

புதிய தகவல்! நன்றி!

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமையானதொரு வலைப்பூ இன்று வலைச்சரத்தால் முக்கியமாக மணிராஜ் வலைப்பூ ஆசிரியர்
இராஜ ராஜேஸ்வரி அவர்களால் தங்களது மகாபாரதம் வலைத்தளத்தை கண்டு மகிழ்ந்தேன்.

இனி தொடர்ந்து வருகிறோம் நண்பரே..

தாங்களும் ஓய்விருக்கும் போது எமது சிவயசிவ - என்னும் வலைத்தளத்திற்கு வருகை தாருங்கள்..

http://sivaayasivaa.blogspot.com

நன்றி..

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து படிக்கிறேன்.
நன்றி.

vidivelli said...

சகோ நீண்ட நாட்களிற்குப்பின் நலம் தானே...
அழகிய பதிவு
வாழ்த்துக்கள்..

எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு

vidivelli said...

nalla pathivu
valththukkal




எனதுபக்கமும் உங்க வருகைக்காக காத்திருக்கு

Post a Comment