Monday, July 26, 2010

106-அரசாட்சி பற்றிப் பீஷ்மர்

தருமர், பிதாமகாரிடம் 'சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை? கிராமங்களைக் காப்பதும்,ஒற்றர்களை ஏவுவதும்,குடிமக்களை அன்புடையவர்களாக இருக்குமாறு செய்வதும் எங்ஙனம்? என்று கேட்டார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'அரசன் முதலில் தன்னை வெல்ல வேண்டும்.அதாவது ஐம்பல அடக்கம் வேண்டும்.பிறகு பகைவரை வெற்றி கொள்ள வேண்டும்.தன்னை வென்றவனே பகைவனை வென்றவன் ஆவான்.கோட்டைகள்,நாட்டின் எல்லை,மக்கள் கூடும் இடங்கள்,சோலைகள்,ரகசியமான இடங்கள்,அரண்மனை ஆகியவற்றைப் பாதுகாக்கத் தகுதியுள்ள ஆட்களை நியமிக்க வேண்டும்.நன்றாகச் சோதிக்கப்பட்டவர்களும்,அறிவாளிகளும்,பசி,தாகங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவர்களும்,சமயத்தில் முட்டாளும்,குருடனும்,செவிடனும் போல நடிக்கத் தெரிந்தவர்களும் ஆகியவர்களையே ரகசிய ஒற்றர்களாக நியமிக்க வேண்டும்.அரசன் எல்லா அமைச்சர்களிடத்தும்,மூவகை நண்பர்களிடத்தும்,மைந்தரிடத்திலும் ,நகரத்திலும்,கிராமத்திலும்,பிற மன்னர்களிடத்திலும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் ஒற்றர்களை இருக்கச் செய்ய வேண்டும்.

கடைகள்,விளையாடும் இடங்கள்,மக்கள் கூடும் இடங்கள்,வீதிகள்,தோட்டங்கள்,பூங்காக்கள்,கல்வி நிலையங்கள்,நீதிமன்றங்கள்,வேலைக்காரர்கள் இருக்கும் இடங்கள், செல்வந்தரின் வீடுகள் ஆகிய இடங்களில் பிற அரசர்களால் அனுப்பப்படும் ஒற்றர்களைத் தன் ஒற்றரைக் கொண்டு தேடி அறிந்து தண்டிக்க வேண்டும்.ஒற்றரைத் தடுப்பதன் மூலம் தீமைகள் தடுக்கப் படும்.

பகை அரசன் தன்னை விடப் பலம் உள்ளவனாக இருந்தால் தூது அனுப்பிச் சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும்.நூல் அறிவு மிக்க அந்தணர்களையும்,க்ஷத்திரியர்களையும்,வைசியர்களையும் அமைச்சர்களாகக் கொள்ள வேண்டும்.பகைவர்களைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.தக்க காலம் வரும்போது அவர்களை விரைந்து கொல்ல வேண்டும்.எப்போதும் மூர்க்கத்தனமாக போரையே நாடக் கூடாது.சாமம்,தானம்,பேதம் ஆகிய மூன்று வழிகளில் பெறக் கூடிய பொருள்களை அடைய வேண்டும்.குடிமக்களைக் காக்க வெண்டி அவர்களிடம் இருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்ய வேண்டும்.குடிமக்களைத் தான் பெற்ற மக்களைப்போல் கருத வேண்டும்.நீதி செலுத்துகையில் நண்பன் என்று பார்க்கக் கூடாது.நேர்மையும்,நடுவு நிலை தவறாமையும் உள்ளவர்களை நீதிபதிகளாக அமர்த்த வேண்டும்.இந்தக் குணங்கள் யாவும் மன்னனிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.

பலதுறை வல்லுநர்களை அரசன் எப்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.தங்கம்,ரத்தினம் ஆகியவற்றை எடுக்கும் இடங்களிலும்,உப்பளத்திலும்,சுங்கச்சாவடிகளிலும் ,யானைக் கூட்டம் உள்ள இடத்திலும்,அமைச்சர்கள் அல்லது நம்பிக்கை உள்ளவர்களை நியமிக்க வேன்டும்.எப்போதும் தண்டநீதி செலுத்தும் அரசனைத் தருமம் வந்தடையும்.தண்டநீதி என்பது அரசனுக்கு உத்தம தருமமாகும்.அரசன் பகைவரிடத்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும்.அவர்கள் வரக்கூடிய பாலங்களை உடைக்க வேண்டும்.வழியை அடைக்க வேண்டும்.வெகு தொலைவில் இருந்து வரும் பகைப் படைகளைக் கண்காணிப்பதற்குப் புற மதில்களில் அமைக்கப் பட்டுள்ள பிரகண்டி என்னும் இடங்களையும் ,மதில்மீது இருந்து அதைப் பற்ற வரும் பகைப்படை மீது அம்பு செலுத்தும் 'அகாசஜநநீ' என்னும் இடங்களையும் நன்கு பாதுகாக்க வேண்டும்.நால்வகைப் படைகளைப் பற்றிய ரகசியங்களைப் பகைவர் அறியாதவாறு பாதுகாக்க வேண்டும்.ஏராளமான முதலைகளும்,திமிங்கலங்களும் அகழியில் இருக்குமாறு செய்ய வேண்டும்.நாடெங்கும் கிணறுகளை வெட்ட வேண்டும்.முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும்.கற்களாலும்,செங்கற்களாலும் வீடுகளை அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் தண்ணீர்ச் சாலைகளையும் கடைகளையும் ஏற்படுத்த வேண்டும்.சந்தர்ப்பவசத்தால் காரணமின்றி ஒருவரைச் சினம் கொண்டு தண்டித்திருந்தால் அவன் மகிழ்ச்சியடையும்படி நல்ல சொற்களைக் கூறிப் பொருளையும் கொடுத்து அவனது வெறுப்புணர்ச்சியை மாற்ற வேண்டும்'

(பீஷ்மர் மேலும் தொடர்கிறார்)

2 comments:

Unknown said...

இவ்வளவு இருக்கு.. ஆனால் இப்பலாம் குடும்பத்தை முன்னேற்றுவதிலேயே ஆள்பவர்கள் நேரேம் செலவிடுகிறார்கள்

Unknown said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

Post a Comment