Thursday, June 10, 2010

103-அரசன் என்பது எப்படித் தோன்றியது

(சில வலையுலகப் பிரச்னையால்..சில நாட்கள் எழுதாமல் இருந்தேன்..அதனால் தான் தாமதமாக பதிவு வந்துள்ளது..இனி வார வாரம் தொடரும்..நன்றி)

மறுநாள் காலையில் பாண்டவர்களும் பிறரும் குருஷேத்திரம் சென்று பீஷ்மரை வணங்கி அருகில் அமர்ந்தனர்.தருமர் பீஷ்மரை..'அரசன் தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார்.'இன்பம் துன்பம்,பசி தாகம்,பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை.அப்படி இருக்கையில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக்கூடும்?அறிவு ஜீவிகள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரணம் சாதாரணமாய் இராது..ஆகவே அது பற்றி விளக்க வேண்டும்' என்றார்.

பீஷ்மர் கூறத் தொடங்கினார்..'ஆதி காலத்தில்..கிருத யுகத்தில் மக்கள் யாவரும் தரும நெறியைப் பின் பற்றி வாழ்ந்தனர்.ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை..காலம் செல்லச் செல்லத் தரும நெறி குன்றியது.அறிவின் குறைவால் ஆசை வயப்பட்ட மனிதர் தம்மிடம் இல்லாது பிறரிடம் உள்ள பொருளைப் பெற விரும்பினர்.அதனால்..திருட்டு,கொலை,சூது,சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆடத் தொடங்கின.எதைச் செய்வது..எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றிப் போயிற்று.காமம் மிகுந்தது..மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது.வேத நெறி பாழ்பட்டது.தரும நெறி சிதைந்தது.இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர்.பிரம்ம தேவனிடம்சென்று'பகவானே..அருள் புரியுங்கள்..உலகில் தருமம் கெட்டது..அதர்மம் சூழ்ந்துள்ளது.நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்' என முறையிட்டனர்.

பிரம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட நீதி சாத்திரத்தை இயற்றினார்.அதில் அவர் விரிவாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார்.இம் மூன்றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும்..அதில் கூறப்பட்டுள்ளது.மேலும் அதில் சத்துவம்,ராஜசம்,தாமதம் ஆகியவை பற்றியும்..தேசம்,காலம்,முயற்சியின் பயன்,ஞானம்,கருமம்,மந்திர ஆலோசனை,அரசன்,அமைச்சன்,தூதன்,ஒற்றன் ஆகியோர் இயல்பு பற்றியும்,சந்திவிக்கிரகம்,வெற்றிக்குரிய வழிகள்,நால் வகை படையின் இயல்புகள்,பெற முடியாத பொருளைப் பெறும் உபாயம்,பெற்றதைக் காக்கும் முறை,குற்றங்களுக்கு ஏறபத் தண்டனை ஆகியவை பற்றியும் விரிவாக இந்தத் தண்டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.

பிரமதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திரத்தை சிவன் ..மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்களாக அமைத்து அதற்கு வைசாலட்சம் என்று பெயரிட்டார்.இந்திரன் இதனை இன்னும் சுருக்கி 'பாஹூதந்தகம்' எனப் பெயரிட்டார்.அதனைப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களாக்கி 'பாரஹஸ் பத்தியம்'என்று பெயரிட்டார்.சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியாயங்களாகச் சுருக்கினார்.

இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கருதி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.

(அரச பரம்பரை தோற்றம் அடுத்த பதிவில்)

2 comments:

Unknown said...

அப்போதே ஒரு லட்சம்...
இப்போதெனில்...?

vasu balaji said...

/வலையுலகப் பிரச்னையால்../

குருக்‌ஷேத்திரம்?:)))

Post a Comment