Sunday, September 13, 2009

60 - கண்ணனின் அறவுரை ( பகவத்கீதையின் ஒரு பகுதி)

அர்ச்சுனன் மனக் கலக்கம் கண்டு கண்ணன் கூறலானார்.
'அர்ச்சுனா..வருந்தாதே..தகுதி இல்லாதவரிடம் இரக்கம் காட்டாதே! ஞானிகள்..இறந்தவர்களுக்காகவோ, இருப்பவர்களுக்காகவோ துயரம் கொள்வதில்லை.இங்கு உள்ளவர்களும் உடல் அழிந்தாலும் இருப்பார்கள்.அவர்கள் உயிர் அழிவதில்லை.இந்தப்பிறவியில் உயிருடன் கூடிய உடம்புக்கு இருக்கும் இளமை,அழகு,முதுமை மீண்டும் மறுபிறப்பிலும் ஏற்படும்.இப்படி தோன்றுவதும்..மறைவதும் உயிர்களின் இயல்பு என்பதை உணர்.இதுவே உலக இயற்கை என்ற தெளிவு பெற்றால்..இன்ப துன்பங்கள் யாரையும் நெருங்காது.இதை உணர்ந்தவர் எதற்கும் கலங்குவதில்லை.

அர்ச்சுனா..உடல் அழிவுக்கு கலங்காதே..உயிர் அழியாது.தனது புண்ணிய பாவ செயல்களுக்கு ஏற்ப மறுபிறவி அடையும்.ஆத்மா கொல்வதும் இல்லை...கொல்லப்படுவதும் இல்லை.ஆகவே கலங்காது..எழுந்து போர் செய்.கடமையை நிறைவேற்று.

ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை..இறப்பும் இல்லை.இது எப்போதோ இல்லாதிருந்து பிறகு திடீரென பிறந்ததன்று.இது என்றும் இறவாதது.என்றும் பிறவாதது.அதாவது உடல் கொல்லப்பட்டாலும்..உயிர் கொல்லப்படுவதில்லை.

நைந்து போன ஆடைகளை விடுத்து..புது ஆடைகளை உடுத்துவது போல் உயிர் நைந்து போன உடல்களை விட்டுப் பிரிந்து புதிய உடலைப் பெறுகிறது.எந்த போர்க்கருவியும் உயிரை வெட்டாது.உடலை எரிக்கும் தீ உயிரை எரிப்பதில்லை.வெட்டினாலும்,குத்தினாலும்,தரதர என இழுத்துப் போனாலும் உயிருக்கு ஒரு துன்பமும் இல்லை.ஆகவே மாளப்போகிறவர்களுக்காக நீ ஏன் அழுகிறாய்?அவர்கள் வினைப் பயனை அவர்கள் விதிப்படி அடைவர்.

பிறந்தவர் இறப்பதும்..இறந்தவர் பிறப்பதும் இயல்பு.அதற்காக ஏன் வருத்தம்.இவ்வுலக நியதியை யாராலும் மாற்ற இயலாது.ஆகவே நீ உன் கடமையை ஆற்று.

இந்த ஆன்மாவின் செயல் விந்தையானதுதான் எனினும் மாற்றமுடியா தன்மைத்து.எல்லார் உடம்பிலும் உள்ள ஆத்மாவை யாராலும் கொல்ல முடியாது.ஆகவே ..நீ யாருக்கும் வருந்த வேண்டாம்.தவிர்க்க இயலா போர் வந்து விட்டது.வீரர்களை வரவேற்க சொர்க்கவாசல் தயாராய் விட்டது.சிறந்த வீரர்கள் அங்கு செல்ல உன் கடமையைச் செய்.இது தர்மயுத்தம் என்பதை நினைவில் கொள்.இங்கு நீ தயக்கம் காட்டினால்..புகழை இழப்பாய்.அத்துடன் மட்டுமின்றி..அது உனக்கு பழியும் தரும்.

இரக்கத்தால் நீ போரிடவில்லை என பகைவர்கள் எண்ணமாட்டார்கள்.போரிட அஞ்சுகிறாய் என சிறுமைப்படுத்துவர்.உனக்கு அந்த இழுக்கு வரலாமா?இதைவிடப் பெருந்துன்பம் எதுவுமில்லை.வென்றால் இந்த மண்ணுலகம்..வீர மரணம் அடைந்தால் விண்ணுலகம்.இதனை மறக்காது துணிந்து போர் செய்..

வெற்றி..தோல்வி பற்றியோ..இன்ப துனபம் பற்றியோ..இலாப நஷ்டம் பற்றியோ கருதாமல் ஊக்கத்துடன் போர் செய்.பழி,பாவம் உன்னைச் சாராது.புகழும்,புண்ணியமும் உனக்குக் கிடைக்கும்' என கண்ணன் தமது உரையை முடித்தார்.

கண்ணனின் அறவுரைக் கேட்டதும்..பார்த்தனின் மனக்குழப்பம் தீர்ந்தது.அவன் கண்ணனை வணங்கி..'அச்சுதா..என் மயக்கம் ஒழிந்தது.என் சந்தேகங்கள் தீர்ந்தன.இனி உன் சொல் படி நடப்பேன்' எனக்கூறி போரிடத் தயாரானான்.

**** **** ****

இலட்சக்கணக்கான வீரர்கள் அழிய பாரதப்போர் தொடங்கும் முன் இரு சாராரும் சில விதிமுறைகளைப் பின்பற்ற ஒப்புக் கொண்டனர்.

அவை வருமாறு

போர் பகலில் மட்டுமே நடைபெறும்.
ஆயுதமின்றி இருப்போரிடம் போரிடக் கூடாது
புறமுதுகிடுவோரை தொடர்ந்து சென்று தாக்கக்கூடாது
இரு வீரர்கள் போரிடுகையில்..மூன்றாமவர் இடையே புகுந்து ஒருவரைத் தாக்கக் கூடாது
அடைக்கலம் அடைந்தவர்களைக் கொல்லக்கூடாது
யானைப் படையுடன் யானைப்படையும், தேர்ப் படையுடன் தேர்ப்படையும்,குதிரைப் படையுடன்..குதிரைப் படையும்,காலாட் படையுடன்..காலாட்படையும் போரிட வேண்டும்.

இப்படி ஒரு நியதியை ஏற்படுத்திக் கொண்ட போது..சில நேரங்களில் அதையும் மீறி போரிட நேர்ந்தது.

No comments:

Post a Comment