Thursday, August 11, 2011

161-கணவனை வயப்படுத்தும் வழி




கணவனை வயப்படுத்தும் வழி யாது? என்று வினவிய சத்யபாமாவிற்கு திரௌபதி உரைத்தது..

நீண்ட நாட்களுக்குப் பின் சத்யபாமாவும் திரௌபதியும் சந்தித்தனர்.கண்ணனின் மனைவியான சத்யபாமா திரௌபதியை நோக்கி..'புகழ் மிக்க பாண்டவர்களை நீ எவ்வாறு வயப்படுத்தினாய்? இதற்குக் காரணம் உனது விரதமா?தவமா? மந்திரமா? வயப்படுத்தும் மை ஏதேனும் வைத்துள்ளாயா?பாண்டவர் ஐவரும் உன்னைக் கண்டு மயங்கிக் கிடக்கிறார்களே, அதற்கு என்ன காரணம்? கண்ணபிரான் எப்போதும் என் வயப்பட்டு இருக்க வேண்டும்.இவற்றையெல்லாம் எனக்கு சொல்' என்றாள்.
'சத்யா..கெட்ட பெண்களின் நடத்தைப் பற்றி நான் ஏதும் கூற மாட்டேன்.நல்ல மாதர்களின் ஒழுக்கத்தைப் பற்றி மட்டும் உரைக்கின்றேன்.மந்திரத்தாலோ,மாயையாலோ, மூலிகையாலோ தன்னை வயப்படுத்தும் மனைவியைக் காணும் கணவன் பாம்பைக் கண்டு அஞ்சுவது போல அஞ்சுவான்.மனைவிக்கு பயப்படும் கணவனுக்கு மன அமைதி இல்லை.அமைதியில்லை என்றால் இன்பம் ஏது!"கெட்ட நடத்தையுள்ள பெண்கள்  கணவனுக்கு தீங்கிழைக்கின்றனர்.கணவனுக்கு விருப்பமில்லா எதையும் மனைவி செய்யக் கூடாது..
நான் என் கணவர்களிடம் நடந்துக் கொள்ளும் முறை பற்றிச் சொல்கிறேன்.என்னிடம் சிறிதும் கர்வமில்லை.ஆசையும் இல்லை.சினமும் இல்லை.பொறாமை என்பது கிஞ்சித்தும் இல்லை.என் மனதைக் கட்டுப்பாடுடன் வைத்துள்ளேன்.தகாத சொற்களைச் சொல்வதில்லை.அதிகமாகவும் ஏதும் கூறுவதில்லை.கணவரின் மனம் அறிந்து நடக்கிறேன்.சூரிய, சந்தரருக்கு இணையான என் கணவர்களை எண்ணிப் பெருமைப்படுகிறேன்.கணவரைத் தவிர மற்றவரை அவர்கள் எவ்வளவு உயரிய நிலையில் இருந்தாலும் நினைத்துக் கூட பார்க்க மாட்டேன்.கணவர் உணவின்றி இருந்தாலும் நானும் அவ்வாறே பட்டினி கிடப்பேன்.வெளியேயிருந்து கணவர் வீடு திரும்பியதும் தக்கவாறு உபசரிப்பேன்.தூய உணவை உரிய காலத்தில் அளிக்கிறேன்.எப்போதும் வீட்டைச் சுத்தமாக வைத்திருக்கிறேன்.சோம்பல் என்பது என்னிடம் துளியும் இல்லை.
கணவர் வெளிநாடு சென்றிருக்கும் போது நான் என்னை அழகு படுத்திக் கொள்வதில்லை.நீராடேன்..பூச்சூடேன்.பூமி போன்ற பொறையுடைய என் மாமியாரை மிகுந்த மரியாதையுடன் கவனித்துக் கொள்கிறேன்.என் கணவர் சத்தியம் தவறாதவர்.நானும் அவ்வாறே உண்மையைக் கடைப்பிடிக்கிறேன்.குடும்பத்தின் வரவு செலவுகளையும் நானே கவனித்துக் கொள்கிறேன்.பின் தூங்கி முன் எழுவேன்..இப்படித்தான் என் கணவரை நான் வயப்படுத்தித் திருப்தி செய்கிறேன்.இது போலவே நீயும் நடந்துக் கொள்வாயாயின் உன் கணவரான கண்ணன் உன்னை விட்டுப் பிரியவே மாட்டார்.' என்றாள் பாஞ்சாலி.
சத்யபாமா திரௌபதியின் சொல் கேட்டு, வாழ்த்தி விடை பெற்றாள்.

Tuesday, August 9, 2011

160-தரும வியாதர் உரைத்த நீதிகள் - 5



வீட்டின் உள்ளே நான்கு அறைகள் இருந்தன.வீடு ஒரு கோயில் போல விளங்கியது.கோயிலில் உள்ள தெய்
வம் போல இருந்தனர் தரும வியாதரின் பெற்றோர்.தெய்வத்தை வழி படுவது போல பெற்றோரை வணங்கி வழிபட்டார் தரும வியாதர்.
'மகனே நீ நீடூழி வாழ்க.நீ நல்ல ஞானத்தை அடைந்திருக்கிறாய்.நாங்கள் உன்னால் உபசரிக்கப் பட்டு தேவ சுகத்தை இங்கேயே அடைந்துள்ளோம்.எங்களைத் தவிர உனக்கு வேறு தெய்வம் இல்லை எனபதை நாங்கள் அறிகிறோம்.உன் நல் ஒழுக்கத்தைக் கண்டு பாட்டனாரும்.முப்பாட்டனாரும் மிகவும் மகிழ்ந்துள்ளனர்.நீ மனத்தாலும்,சொல்லாலும்,செயலாலும் ஒரே தன்மையுடையவனாய் இருக்கிறாய்.ஜமதக்கினி தன் தந்தை பரசுராமரை எப்படி அக்கறையோடு கவனித்துக் கொண்டாரோ அப்படி நீ எங்களைக் கவனித்துக் கொள்கிறாய்' என தரும வியாதரின் பெற்றோர் அவரை மிகவும் பாராட்டினர்.
பின், தரும வியாதர் தன் பெற்றோரை கௌசிகனுக்கு அறிமுகம் செய்தார்.
பின் தரும வியாதர் கௌசிகனிடம்' தாய் தந்தையர் தான் நான் வணங்கும் தெய்வங்கள்.தேவர்கள் தேவேந்திரனை எப்படி வழிபடுகிறார்களோ அப்படி இவர்களை நான் வழிபடுகிறேன்.உயர்ந்த பொருள்களைக் கொண்டு இவர்களை ஆராதிக்கிறேன்.எனக்கு நாங்கு வேதங்களும் இவர்களே.என் மனைவியோடும், மகனோடும் இவர்களுக்கு நானே பணிவிடை செய்கிறேன்.இவர்களுக்கு பிரியமில்லாத எதையும் நான் செய்வதில்லை.உலகில் மேன்மை அடைய வேண்டுமாயின் தாய் தந்தையரை போற்ற வேண்டும்' என்றார் தரும வியாதர்.
அவர் மேலும்,'நீர் மிதிலை சென்று தரும வியாதரைக் காண்பீராயின் அவர் உமக்குத் தருமங்களைக் கூறுவார்' என அக் கற்புக்கரசி சொன்னாள்.இதை என் ஞானத்தால் நான் அறிந்தேன்' என்றார்.
கௌசிகன் தரும வியாதரிடம்' தூய விரதம் உடையவரே! பத்தினியின் சொற்களை அப்படியே உரைத்த உம்மை நான் சிறந்த தவசியாகக் கருதுகிறேன்' எனப் பாராட்டினார்.
தரும வியாதர், "கௌசிகனே..அந்தப் பத்தினி தருமங்களை அறியும் பொருட்டு உம்மை என்னிடம் அனுப்பியிருக்கிறாள்.இவை அனைத்தும் அவளுக்குத் தெரியும்.ஆயினும் என் மூலமாகவே நீர் மேன்மை அடைய வேண்டும்..என்பது அவளது எண்ணம்.நீர் நான் சொல்வதைக் கேட்பீராக! நீர் உம் தாய் தந்தையரைப் போற்றிப் பாதுகாக்கவில்லை.அவர்களின் அனுமதியின்றி வேதப் பயிற்சி பெற வீட்டை விட்டுச் சென்று விட்டீர்.உம்மைப் பிரிந்த துயரத்தால் அவர்கள் அழுது அழுது கண் குருடாயினர்.அவர்களைப் போற்றிப் பாதுகாக்க செல்வீராக' என்றார்.
கௌசிகனும், 'நான் செய்த நல்வினையால் இங்கு வரும் வாய்ப்பினைப் பெற்றேன்.இத்தகைய அறத்தைப் போதிப்பவர் உம்மைத் தவிர வேறு யாருளர்.இப்போது நான் நரகத் துன்பத்திலிருந்து கரையேறி விட்டேன்.உம்மை ஒன்று வேண்டுகிறேன்.சென்ற பிறவியில் உமது நிலை என்னவாக இருந்தது? அதையும் தெரிவிக்க வேண்டும்.அதைத் தெரிந்து கொண்டு என் ஊர் திரும்பி என்னைப் பெற்றோரை நங்கு பாதுகாப்பேன்" என்றான்.
"முற்பிறவியில் நடந்ததைக் கூறுகிறேன்.நான் முற்பிறவியில் அந்தணனாகப் பிறந்தேன்.வேதங்களைக் கற்று பண்டிதன் ஆனேன்.ஆயினும் என் பாவ கர்மத்தால் ஒரு பெரும் குற்றம் நேர்ந்து விட்டது.அரசனுடன் காட்டிற்குச் சென்ற போது, நான் ஒரு அம்பு செலுத்த, அது ஒரு முனிவர் மீது பாய்ந்தது.முனிவர் கடும் சினம் கொண்டார்.நான் விலங்கு என எண்ணி இப்படிச் செய்து விட்டேன்! பொறுத்தருளுவீர்..!! என மன்றாடினேன்.ஆயினும் சினம் தணியாத அம்முனிவர் "நீ வேடனாக பிறப்பாயாக!" என சபித்தார்.அதனால் இப்பிறவியை அடைந்தேன்' என்றார் தரும வியாதர்.
அது கேட்டு கௌசிகன்.."தரும வியாதரே! நீர் அந்தணர் குலத்தில் பிறக்கவில்லை என்பது உண்மை..ஆனாலும் அவர்களைவிட மேலான ஒழுக்கமுள்ளவராக உம்மை மதிக்கிறேண்.அந்தணன் என்பவன் யார்" யார் அறத்தைப் போற்றி பின்பற்றுகிறாரோ அவரே அந்தணர் ஆவார்.பிறப்பால் ஒன்றுமில்லை.அவரவர் ஒழுக்கத்தால் தான் போற்றப்படுகிறார்கள்...என்பதை நங்கு புரிந்து கொண்டேன்.அறிவைவிட உயர்ந்த ஞான ஒளி உம் முகத்தில் பிரகாசிக்கிறது.தருமத்தின் மீது பற்றுள்ளவரே, நான் விடை பெறுகிறேண்' என கைகளைக் கூப்பி வணங்கினான்.
தரும வியாதரும் விடை கொடுத்தார்.
வீடு சென்ற கௌசிகன் தாய் தந்தையரைக் கண் போல பாதுகாத்து வந்தான்.
இக் கதையை மார்க்கண்டேயர் யுதிஷ்டருக்கு உரைத்தார்.இதன் மூலம் கற்பின் சிறப்பும், தாய் தந்தையரை பாதுகாக்கும் அவசியமும்,பிறப்பால் மேன்மையில்லை, ஒழுக்கத்தால்தான் மேன்மையடையமுடியும் என்பன போன்ற நீதிகள் உணர்த்தப்பட்டன.

Sunday, August 7, 2011

159-தரும வியாதர் உரைத்த நீதிகள்- 4



கௌசிகன், தரும வியாதரை நோக்கி, 'உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது? ' என வினவ, தரும வியாதர் கூறலானார்...
'உயிர் கர்ப்பத்தில் சேரும் போதே புண்ணீய பாவ கர்மமும் அதனுடன் சேர்ந்து விடுகின்றன.அவ்வாறு கர்ப்பத்தில் சேரும் நல்வினைப் பயனால் நல்ல பிறப்பும், தீவினைப் பயனால் தீய பிறப்பும் உண்டாகின்றன.தான் செய்த வினைக்கு ஏற்பப் பிறப்பு,இறப்பு, பிணி,மூப்பு,துன்பம் ஆகியவற்றைச் சம்சாரத்தில் உயிர்கள் அனுபவிக்கின்றன.கர்மத் தொடர்பு காரணமாகவே உயிர்கள் ஆயிரக்கணக்கான விலங்கு கதிகளில் பிறப்பதும் நரகத்தை அடைவதுமாக மாறி மாறி அல்லல்படுகின்றன.கர்மத் தொடர்பினால் பிறப்பு இறப்புகளில் பலவகையான துன்பங்களை அடைந்து சக்கரம் போல உயிர்கள் சுழல்கின்றன.
அறவோன் இன்பக் காரியங்களில் இன்பத்தை அனுபவிக்கிறான்.தருமத்தின் நிழலில் தங்குகிறான்.தருமம் செய்து சம்பாதித்த பொருளைக் கொண்டு மேன் மேலும் தருமம் செய்து புண்ணியத்தை ஈட்டுகிறான்.தருமத்தையே எப்போதும் செய்துக் கொண்டு தருமம் என்னும் மரத்தி அடிவேரில் ஈரத்தன்மையை உண்டாக்குகிறான்.அதனால் புண்ணியப் பலன் பூவாகி, காயாகி,கனியாகி அவனைச் சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்கிறது.மறுமையிலும் அவன் இன்பம் தொடர்கிறது.ஒரு ஞானி விருப்பு, வெறுப்புக் கொள்வதில்லை.படிப்படியாக மோட்ச மார்க்கத்தில் சென்று முக்தி அடைகிறான்' என்றார் தரும வியாதர்.
'தரும வியாதரே! நல்வினை, தீவினைகளைப் பற்றி மேலும் விளக்க வேண்டும்' என கௌசிகன் கேட்டான்.
வியாதர் கூறினார்,'ஔ மனிதனுக்கு ஒரு பொருளைக் கண்டவுடன் அதனைப் பெற மனம் விழைகிறது.பல வழிகளில் முயன்று அதனை அடைகிறான்.அதனை அனுபவிக்கையில் மேன் மேலும் ஆசை உண்டாகிறது.மேன் மேலும் அப்பொருளை நாடி அலைகிறான்.ஆசைக்கு இடையூறு ஏற்படுகையில் சினம், ஆத்திரம் முதலிய தீய பண்புகள் உண்டாகின்றன.இவற்றால் கவரப்படும் மனிதனின் புத்தி நலத்தைப் பற்றி எண்ணுவதில்லை.அந்த மனிதன் வஞ்சனையாகத் தர்மவானைப் போல வேஷம் போட்டு பணத்தைத் திருடுகிறான்.இப்படிப் பொருள் சேர்த்ததும் கர்வம் அடைகிறான்.அப்போது யார் அறிவுரைகளும் அவன் காதில் விழுவதில்லை.ஆகமத்தில் இல்லாததை எல்லாம் இருப்பதாகச் சாதிக்கிறான்.பொருளாசையால் அதருமம் மூன்று வகையில் தோன்றுகிறது.பாவத்தை அவன் மனம் சிந்திக்கிறது.வாய் பேசுகிறது.கை செய்கிறது.அவன் எப்போதும் அதருமத்தில் மூழ்கிக் கிடப்பதால் அவனது நற்குணங்கள் அனைத்தும் அழிகின்றன.இத்தகையொனுக்கு இதே குணங்கள் உள்ளவனே நண்பனாகிறான்.இதனால் பாவம் மேலும் துணிந்து செயல் படுகிறது.
இவற்றையெல்லாம் எவன் சான்றோர் மூலமாகவும் அறிந்து கொள்கிறானோ அவன் நற்செயல்களைச் செய்வதிலும், பெரியோரைப் போற்றுவதிலும் சிறந்தி விளங்குகிறான்.அவன் இம்மையிலும் மறுமையிலும் இன்பம் அடைகிறான்.எவன் ஒருவன் ஐம்பொறிகளையும் அடக்கிகிறானோ அவன் இன்பம் அடைகிறான்.இந்த உடல் ஒரு தேர்.ஐம்பொறிகளும் அதில் பூட்டப்பட்ட குதிரைகள்.உயிரே அவற்றை இயக்கும் சாரதி.இந்த ஐந்து குதிரைகளையும் அடக்கி ஆள்பவன் நல்ல நிலையை அடைவான்' எனத் தரும வியாதர் உரைத்தார்.
"உம்மால் பலவற்றை நான் அறிந்து கொண்டேன்.இவற்றால் நான் பெரிதும் பயன் அடைந்தேன்..விடை பெறுகிறேன்" என்றான் கௌசிகன்.
அது கேட்ட வியாதர்.."நீர் எம் வீட்டிற்கு வர வேண்டும்.வந்தால், புண்ணீயப் பலனைக் கண்கூடாக பார்த்து அறிந்து கொள்வீர்' என்றார்.சம்மதித்த கௌசிகரை அழைத்துக் கொண்டு இல்லத்திற்கு விரைந்தார் தரும வியாதர்.வீட்டில் அவரது முதிய தாய்-தந்தையருக்குச் செய்யும் பணிவிடைகளை அவன் வியக்குமாறு எடுத்துரைத்தார்.இதுவே நான் செய்யும் புண்ணிய காரியம் என்றார்.
மேலும் சொன்னவை அடுத்த பதிவில்..
(தொடரும்)

Tuesday, August 2, 2011

158-தரும வியாதர் உரைத்த நீதிகள் -3



மேலும் தருமவியாதர் கூறலானார்..
நான் செய்யும் தொழில் பாராட்டத்தக்கது அல்ல.உண்மையில் இதில் எனக்கு மகிழ்ச்சி இல்லை.முற்பிறப்பில் செய்த தீவினையினால் இப்பிறப்பில் இத் தொழிலைச் செய்கிறேன்.விதி வலிமை மிக்கது.யாராலும் அதை அடக்க முடியாது.பிறப்புக் காரணமாக இத் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறேன்.அறவோரை போற்றி வணங்குகிறேன்.தருமத்தில் பற்றுடையவனாக இருக்கின்றேன்.எப்போதும் நான் செருக்குக் கொள்வதில்லை.நான் அதிகமாகப் பேசுவதுமில்லை.நான் பயிர்த் தொழிலை மேலானதாகக் கருதுகின்றேன்.அதிலும் ஜீவஹிம்சை உள்ளது.கலப்பைக் கொண்டு உழுகையில் பூமியில் உள்ள உயிர்கள் நாசம் அடைகின்றன..
மனிதர்களில் சிலர் பிற உயிர்களைக் கொல்கின்றனர்.நடக்கையில் பல உயிர்கள் மிதிப்பட்டு இறக்கின்றன.உட்கார்ந்திருப்பவர்களும்,படுத்திருப்பவர்களும் தங்கள் உடல் அசைவினால் பல உயிர்களைத் தாங்கள் அறியாமலேயே கொல்கின்றனர்.
உயிர்களைக் கொல்லக் கூடாது என்பது உயரிய தருமம்தான்.ஆனால் உலகம் முழுதும் பிராணிகளைக் கொன்று ஜீவிக்கும் பிராணிகள் தான் அதிகம் உள்ளன.கொல்லாமையே உயர்ந்தது என்னும் சாதுக்கள் கூடத் தம்மை அறியாமல் பிற உயிர்கலுக்குத் துன்பம் விளைவிக்கின்றனர்.உலகில் பலவகை மனிதர்கள் உள்ளனர்.உறவினர்கள் செல்வம் உடைய உறவைப் பார்த்து மகிழ்வதில்லை.செருக்கு மிக்கவர்கள் குருவையே அவமதிக்கின்றனர்.தருமத்துடன் பல செயல்கள் நடைபெறுகின்றன.அதே சமயம் தருமமும் அதருமமும் கலந்த நிகழ்வுகலும் நிகழ்கின்றன.எவன் ஒருவன் தன் தொழிலை நேர்மையுடன் செய்கிறானோ அவன் சுவர்க்கம் செல்வது உறுதி' என்றார் வியாதர்..
பின்னர் தரும வியாதர் முயற்சியை விட விதியைப் புகழ்ந்து பேசினார்.நன்மை, தீமைகளே இன்ப துன்பங்களுக்குக் காரணம் என்றார்.
தருமத்தின் சூட்சுமத்தைச் சுலபமாக யாராலும் உணரமுடியாது.அது பல நேரங்களில் பல வகையாகக் காட்சியளிக்கிறது.பொய் சொல்வதால் நன்மை ஏற்படுமாயின் அந்தப் பொய் பழிக்கப்படாது.அதனால் பாவமும் நேராது.அந்தப் பொய் உண்மையாகவே எண்ணப்படும்.சில நேரங்களில் உண்மை பேசுவதால் பொய்யால் நேரும் பாவம் உண்டாகக்கூடும். ஆதலால் 'எந்தப் பேச்சு உயிருக்கு இன்பம் தருமோ அந்தப் பேச்சு சத்தியமானது.' என்று சான்றோர் அறம் கூறினர்.அது உண்மையா பொய்யா என்பதல்ல, முக்கியம்.அது பிற உயிருக்கு நன்மை தருமா, தராதா என்பதே முக்கியம்.உயிருக்கு உண்மை தராத உண்மைப் பேச்சு அதருமம் எனக் கருதப்படும்.
யாராக இருந்தாலும் நன்மை தீமைகளை அனுபவித்தே ஆக வேண்டும்.இதில் ஐயமில்லை.மனிதன் கெட்ட நிலையை அடைந்தால் செல்வத்தைப் பழிக்கிறான்.அது தனது கர்மப் பலன் என உணர்வதில்லை.
ஊழ்வினை என ஒன்று இல்லையானால், மக்கள் இறக்கமாட்டார்கள்.முதுமை அடைய மாட்டார்கள்.அவரவர் விரும்பியதைப் பெற்று மகிழ்ச்சியடைவர்.ஒவ்வொருவரும் மற்றவரைவிட உயர்வாகவே இருக்க விரும்புகின்றனர்.முயல்கின்றனர்.ஆனால் எண்ணம் போல ஏதும் நடப்பதில்லை.ஆன்மா என்பது தோன்றுவதும் இல்லை..அழிவதும் இல்லை.எல்லா உயிர்களின் உடலும் அழியக் கூடியவை.உடல் கொல்லப்படுமாயின் அந்த உடலுக்கு மட்டுமே அழிவு ஏற்படுகிறது.உயிரோ முன் செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப, மீண்டும் ஓர் உடலை அடைகிறது.
அவன் இறந்தான்..அவன் பிறந்தான் என பேசப்படுவது எல்லாம் உயிரைப் பற்றி அன்று.அழிவு உடலுக்குத்தான்.உயிருக்கு அல்ல.உடல் அழிகையில் உயிர் பிரிகிறது என்பதெல்லாம் தவறு.உயிர் இப்போதுள்ள உடலைவிட்டு வேறோரு உடலை அடைவதையே மரணம் என்கிறார்கள்.இவ்வுலகில் ஒருவர் செய்த வினைப்பயனை இன்னொருவன் அனுபவிப்பதில்லை.அவரவர் செய்த புண்ணிய பாவங்களை அவரவரே அனுபவிக்கின்றனர்.அதனால் நல்லோர் நல் செயல்களையே செய்கின்றனர்.தீயோர் தீய செயல்களையே செய்கின்றனர்.இவ்வுலகில் புண்ணிய பாவங்களுக்கு ஏற்பப் பிறவி ஏற்படுகிறது.அவன் மனிதனாகத்தான் பிறக்கின்றான் என்பதில்லை.வினைக்கு ஏற்ப நாயாகவோ,பூனையாகவோ,ஈயாகவோ,எறும்பாகவோ,மரமாகவோ,தேவனாகவோ பிறக்கிறான்' என்றார் தரும வியாதர்.
பின் அவரை நோக்கி கௌசிகன், 'தருமமுணர்ந்தவரே! உயிர் எவ்வாறு பிறப்பை அடைகிறது? எப்படி புண்ணிய பாவ கர்மங்களின் சம்பந்தத்தை அடைகிறது' என வினவ தரும வியாதர் சொன்னது அடுத்த பதிவில்..
(தொடரும்)

Thursday, July 28, 2011

157-தரும வியாதர் உரைத்த நீதிகள் -2

"என் மூதாதையர் காலத்திலிருந்தே இத் தொழிலை என் குடும்பம் செய்து வருகிறது.என் பெற்றோரைக் காப்பது ஒன்றே என் கடமையாய் செய்து வருகிறேன்.இத் தொழிலைப் பற்றி நான் கவலைப்படவில்லை.என் வாழ்வில் சில நெறி முறைகளை பின் பற்றி வருகிறேன்.சத்தியம் தவறுவதில்லை.உண்மையே பேசுகிறேன்.வினைப் பயனை நம்புகிறேன்.யாரையும் இழிவாகக் கருதுவதில்லை.இன்ப துன்பங்களை சமமாய் எண்ணுகிறேன்.நாட்டில் நல்லாட்சி நடைகிறது.ஜனக மாமன்னன் நீதி தவறாது ஆட்சி செய்கிறான்.
நானாக எதையும் கொல்வதில்லை.பிறரால் கொல்லப்பட்ட மாட்டிறைச்சிகளை விற்கிறேன்.ஆனால் நான் புலால் உண்பதில்லை.நோன்பு நோற்கிறேன்.பிறரது புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் சமமாகக் கருதுகிறேன்.ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும்.காமத்தாலோ, பயத்தாலோ தருமத்தை விட்டுவிடக்கூடாது.அரிய காரியங்களைச் செய்ய தளர்ச்சியடையக் கூடாது.நல்ல செயல்கலையே எப்போதும் செய்ய வேண்டும்.ஒரு பாவி தன் பாவச்செயலால் அழிந்துப் போகிறான்.தூயோரைப் பழிப்பதும்,தருமத்தில்பற்றின்மையும் அழிவைத் தருகின்றன.நல்லோர்கள் அனைவரிடமும் பணிவுடன் இருப்பர்.அடக்கம் இல்லாதவர்கள் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுத் தாழ்வடைகின்றனர்.தவறுசெய்பவர் அத் தவறை உணர்ந்து வருந்துவாராயின் அவர்களைப் பாவ கர்மம் பற்ருவதில்லை.ஒருவன் தவறான செயல்களைச் செய்து விட்டு 'நான் அப்படிச் செய்யவில்லை' என சாதித்தாலும் அவன் பாவ கர்மத்தினின்றும் தப்ப முடியாது.
எவன் தன் குற்றம் உணராது பிறர் குற்றம் காண்கின்றானோ அவனுக்கு நற்கதி கிடைக்காது.அவன் மறுமையிலும் துன்புறுவான்.நற்செயல்கள் செய்வதால் ஒருவன் எல்லாப் பாவங்களையும் தொலைத்துவிடுகின்றான்., பேராசையுள்ளவர்கள் பாவப்படுகுழியில் வீழ்வர்.' என்றார் தரும வியாதர்.
கௌசிகன் தக்கோரின் மேலான ஒழுக்கங்களைக் கூறுமாறு கேட்க,வியாதர் பதில் உரைத்தார்..

'மேலான ஒழுக்கங்களில் தானம்,தவம்,யாகம்,ஆகமம்,சத்தியம் ஆகிய ஐந்தும் குறிப்பிடத்தக்கன.ஆகமத்தின் அடிப்படை சத்தியம்.சத்தியத்தின் அடிப்படை புலனடக்கம்.புலனடக்கத்தின் அடிப்படை போகங்களைத் துறத்தல்.இவை எப்போதும் மேலான ஆசாரங்களில் நிலை பெற்றுள்ளன.எப்போதும் உண்மையையே உரைத்து, தருமத்தைச் செய்து, நிதானத்துடன் ஆகமக் கருத்துகளைக் கவனமாக கற்று உணர்ந்து அறம்,பொருள்,இன்பங்களை அடைபவர்கள் மேலான ஒழுக்க சீலர் ஆவர்.
ஐம்பொறிகளையும் அடக்கி வென்றவர்கள் மோட்சத்தை அடைவர்.அல்லாதார் துன்பக் கடலில் மூழ்குவர்.கொல்லாமை,வாய்மை, எல்லா உயிரிடத்தும் அன்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் உயர்ந்த தருமம் ஆகும்.இம்மூன்றில் கொல்லாமை மிக உயர்ந்த தருமம்.அது வாய்மையில் நிலை பெறுகிறது.சாதுக்களின் தருமம் என்பது மேலான ஒழுக்கமாகும்.நியாயத்துடன் பொருந்தியது தருமம் என்றும்,அநியாயத்துடன் கூடியது பாவம் என்றும் சொல்லப்படுகிறது.யாரிடம் கோபம்,செருக்கு,வஞ்சனை முதலிய கெட்ட பண்புகள் இல்லையோ அவர்கள் ஒழுக்கம் உள்ளவராய் கருதப்படுவர்.
நல்வினை, தீவினைகளின் பயனான இன்ப, துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வினைகள் கெடுகின்றன என எண்ணுபவர்கள் மேலோராவர்.தானம் செய்வதில் நாட்டமுடையவர்கள் இன்பத்தை அடைவார்கள்.மேலான ஒழுக்கம் உடையவர் தமது குடும்பங்களின் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு சாதுக்களுக்கு உதவி செய்வர்.அறவோர் ஞானமாகிய உயர்நிலையில் நின்று புத்தி மயங்கிக் கிடக்கும் மக்களை நல்வழிப்படுத்த நினைப்பர்' என்று கௌசிகனுக்கு மேலோரின் பண்புகள் பற்றிக் கூறினார் தருமவியாதர்.
அவர் மேலும் கூறியது அடுத்த பதிவில்.

Saturday, July 23, 2011

156-தருமவியாதர் உரைத்த நீதிகள்








'
கௌசிகன் என்பவன் சிறந்த அந்தணன்.வேதத்தில் வல்லவன்.எப்போதும் தவத்தை மேற்கொண்டிருப்பவன்.ஒருநாள் வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு கொக்கு அவன் மீது எச்சமிட்டது.அதனால் கோபம் கொண்ட அந்தணன் அந்தக் கொக்கை தீ உமிழும் கண்களால் நோக்க அந்த வெம்மையைத் தாங்காது அக்கொக்கு எரிந்து தரையில் விழுந்தது.அந்தணன் பறவையின் முடிவு கண்டு வருந்தினான்.
பிறகு பிட்சைக்காகக் கிராமத்தை அடைந்தான்
.ஒரு வீட்டின் வாயிலில் நின்றவாறு 'தாயே..பிட்சை தருக' என்றான்.அவ்வீட்டுப் பெண்மணி சிறிது நேரம் பொறுத்திருக்கக் கூறினாள்.பசியுடன் வீட்டிற்கு வந்த கணவனைக் கவனிப்பதில் ஈடு பட்டாள்.கணவனையே தெய்வமாகக் கொண்ட அந்தப் பெண் சொல்லாலும்,செயலாலும் எப்போதும் கணவருக்கு மகிழ்ச்சியையே தருவாள்.
பிட்சைக் கேட்டு வந்த அந்தணனை நீண்ட நேரம் காக்க வைத்தற்கு வருந்தினாள்
.'பெண்ணே..என்னை வேறிடத்திற்குச் செல்லமுடியாதவாறு செய்து விட்டாயே' என சீறினான்.
கௌசிகனின் சினம் கண்டு வருந்தியவள்
, 'கணவனுக்கு பணிவிடை செய்துவர நேரமாகிவிட்டது.மன்னிக்கவும்.' என்றாள்.
அந்தணனும் கோபத்துடன்
'உனக்கு உன் கணவனைத் தவிர வேறு யாரும் உயர்வில்லை போலும்.தேவாதி தேவனே எங்களைப் போற்றுகிறான்.நீ எம்மாத்திரம்.வேதவித்தாகத் திகழும் என் பெருமையை நீ அறியாய்..அந்தணர்கள் சரியாக மதிக்கப் படாவிடின் எரித்து விடுவர்' என்றான்.
உடன் அவள் கூறினாள்
'மாமுனியே! சினத்தை அடக்குவாயாக.என்னை சுட்டு எரிக்க நான் கொக்கு அல்ல.காலம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னியுங்கள்.நான் உத்தமர்களை என்றும் பழித்ததில்லை.தவவலிமை மிக்க பலரை நான் அறிவேன்.வாதாபியை அடக்கிய அகத்தியர் முதலியவர்களை நான் போற்றுகின்றேன்.உமது சினத்தை நீர் அடக்குவீராக.என்னைப் பொறுத்தவரை கணவரை விட உயரானவர் யாருமில்லை.அதனால் ஏற்படும் பயனும் நான் அறிவேன்.நீர் சினம் கொண்டு கொக்கை எரித்ததை எனது பதிவிரதத் தன்மையால் அறிந்தேன்.நீர் சினத்தால் அக்கொக்கை எரித்தது போல என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்றாள்.
மேலும் கூறத்தொடங்கினாள் அந்தப் பத்தினி
,'அந்தணர் என்பவர் யார் தெரியுமா?கோபத்தை விடுபவர் அந்தணர்.பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் அப்பிறர்க்குத் துன்பம் செய்யாதவரே அந்தணர்.யார் ஆகமப் பயிற்சியுள்ளவரோ அவரே அந்தணர்.யார் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுகின்றனரோ அவரே அந்தணர்.'யான்' எனும் செறுக்கு அற்றவர் யாரோ அவரே அந்தணர்..தருமத்தை அறிதல் எளிதன்று.நீர் தருமத்தை நங்கு அறிதல் வேண்டும்.மிதிலையில் தரும வியாதர் என்றொருவர் இருக்கிறார்.அவரிடம் சென்று தருமம் பற்றி உணர்வீர்களாக..நன்மை தீமை உணர்ந்த யாரும் பெண்களைப் பழிக்கவோ..துன்புறுத்தவோ மாட்டார்கள்' என்றாள்.
இதைக் கேட்ட கௌசிகன் வியப்புற்றான்
.'என்னிடம் இருந்த கோபம் விலகியது.மிதிலை சென்று தரும வியாதரிடம் தருமங்கள் பற்றி அறிய விரும்புகிறேன்' என்று சொல்லிவிட்டு கௌசிகன் மிதிலைக்குப் புறப்பட்டான்.
வீட்டிலிருக்கும் போதே கொக்கு எரிக்கப்பட்டதை உணர்ந்து பேசியவளின் பேச்சுகளை எண்ணி வியந்தான்
. தரும வியாதரிடம் மேலும் தருமங்களை அறிய மிதிலையை நோக்கி விரைந்தான்.அறத்தின் பொலிவுடன் இருந்தது அந்நாடு.உணவு தானியங்கள் நிறைந்திருந்தன.மக்கள் நிம்மதியுடன் இருந்தனர்.கௌசிகன் தரும வியாதர் இருக்குமிடம் சென்றான்.அப்போது விலங்குகளைக் கொல்லும் இடத்தில், மாட்டிறைச்சியையும்,மானிறைச்சியையும் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்,தரும வியாதர்.ஜனநெருக்கடியாய் இருந்ததால் கௌசிகன் தனியான ஓரிடத்தில் அமர்ந்தான்.தருமவியாதர், அவனிடம் சென்று,'உம்மை ஒரு பதிவிரதை மிதிலைக்குப் போகுமாறு பணித்ததை நான் அறிவேன்..உனக்கு வேண்டியது யாது? என்றார்.
கௌசிகனுக்கு
இது இரண்டாவது வியப்பு,'இவ்விடத்தில் நீர் இருப்பது தவறு.என் வீட்டிற்குப் போகலாம்'என தருமவியாதர் அழைக்க கௌசிகன் மகிழ்ந்தான்.
தருமவியாதர்
தன் வீட்டில் கௌசிகனுக்கு தக்க உபசாரம் செய்தார்.கௌசிகனும் மகிழ்ந்து'தருமவியாதரே..நீர் செய்யும் தொழில் உமக்கு ஏற்றதன்று' என்றான். .




Monday, July 11, 2011

155-அகஸ்தியர்-இல்வலன்-வாதாபி பற்றிய கதை

பாண்டவர்கள் தீர்த்த யாத்திரையின் போது மணிமதி என்னும் நகரத்தில் தங்கி இருந்தனர்.அப்போது யுதிஷ்டிரர் லோமசரை நோக்கி, 'இல்வலனையும், வாதாபியையும் அகத்தியர் ஏன் அழித்தார்?" என வினவ முனிவர் சொல்லலானார்.

இல்வலன் என்னும் அசுரன் மணிமதி நாட்டை ஆண்டு வந்தான்.அவன் தம்பியின் பெயர் வாதாபி.இல்வலனுக்கு மகப்பேறு இல்லை.அவன் தவ வலிமை மிக்க அந்தணன் ஒருவனை அடைந்து, 'இந்திரனுக்கு இணையான பிள்ளையை நான் பெற வேண்டும்.அதற்கான ஆசி அருள வேண்டும்' என்றான்.அவனது செருக்கை உணர்ந்த அந்தணர், 'எனது ஆசி உனக்கு இல்லை' என்றார்.

கடும் சினம் கொண்ட இல்வலன், அன்று முதல் அந்தணர்களை கொல்ல முடிவெடுத்தான்.மாயையில் வல்ல அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக உருமாறச் செய்தான்.இல்வலன் அந்த ஆட்டை சமைத்து அந்தணர்களுக்கு அளித்து அவர்களை கொல்ல நினைத்தான்.இல்வலனிடம் அபூர்வ ஆற்றல் ஒன்று இருந்தது.ஒருவன் இறந்து விட்டாலும் அவனைப் பெயரிட்டு கூப்பிட்ட அளவில் உயிர் பெற்று வந்துவிடுவான்.

அந்தணர்கள் இல்வலன் படைக்கும் ஆட்டுக்கறியை உண்ட பின் அவன் 'வாதாபி' என்று குரல் கொடுத்துத் தம்பியை அழைப்பான்.உடன் வாதாபி அந்தணர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உடன் வெளியே வந்துவிடுவான்.இப்படி பல அந்தணர்களைக் கொன்றான்.

அச்சமயத்தில் அகத்திய முனிவர் தம் மூதாதையர் பள்ளத்தாக்கில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதற்கான காரணத்தைக் கேட்டார்.

'நாங்கள் உன் முன்னோர்கள்.உனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று வேண்டி, இங்கு இப்படித் தொங்குகிறோம்! உனக்கு ஒரு மகன் பிறந்தால் எங்களுக்கு நற்கதி கிடைக்கும்' என்றனர்.அகத்தியரும் தனக்குப் பொருத்தமான பெண் எங்கிருக்கிறாள் என்பதை தன் எதிர்கால உறவால் கண்டறிந்தார்,

விதர்ப்பநாட்டு மன்னனுக்கு ஒரு பெண் பிறக்குமாறு செய்தார்.லோபமுத்திரைஎனப் பெயர் பெற்ற அவளுக்குரிய கணவனை ஆராய்ந்தான் மன்னன்.அகத்தியருக்கி அஞ்சி யாரும் அவளை மணமுடிக்க வரவில்லை.

அகத்தியர் அப்பெண்ணை தனக்குத் தருமாறு மன்னனைக் கேட்டார்.பெரும் தவசிக்குப் பெண் கொடுக்க விருப்பமில்லா மன்னன் தன் மனைவியிடம் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த லோபமுத்திரை, 'தந்தையே..நீங்கள் கவலைப்பட வேண்டாம்.என்னை அம் முனிவருக்கே மணமுடியுங்கள்' என்றாள்.

அகத்தியருக்கும்,லோபமுத்திரைக்கும் திருமணம் முடிந்தது.முனிவர் தன் மனைவியிடம்,'இனி நீ ஆஸ்ரம விதிப்படி நடந்து கொள்ளவேண்டும்.விலை உயர்ந்த ஆடை,அணிகளை விலக்கி மரவுரிகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அவ்வாறே லோபமுத்திரையும் செய்து வந்தாள்.அவளது தூய தன்மையையும்,அடக்கத்தையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.ஒருநாள் லோபமுத்திரையின் அழகுக் கண்டு, அவளுடன் இன்பம் அடைய விரும்பினார்.தன் கருத்தை அவளிடம் தெரிவித்த போது அவளோ தவக்கோலத்தில் புணர்ச்சியை விரும்பவில்லை.உயர்ந்த ஆடை அணிகலன்களை இருவரும் அணிந்து இன்பம் அனுபவிப்போம் என்றாள்.உடன் முனிவர்,'எனக்கேது உயர் ஆடைகளும், அணிகலன்களும் என்றார்.

'உம் தவ வலிமையால் அவற்றை அடையலாம்' என்றாள் லோபமுத்திரை.ஆனால் தவத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பாத முனிவர் மன்னனிடம் சென்று பொருள் பெற விழைந்தார்.

அகத்தியர் முதன் முதலாய் ஸ்ருதர்வா என்ற மன்னனிடம் சென்றார்.பெரும் செல்வத்தை நாடி வந்திருப்பதைத் தெரிவித்தார்.மன்னனோ..'முனிவரே! நாட்டில் வரவும் செலவும் சரியாய் உள்ளது.நான் பெரும் செல்வத்திற்கு எங்கு போவேன்..' என வருந்தினான்.குடிகளைத் துன்புறுத்தி வரி வசூலித்துத் தருவதானால் அச் செல்வம் தனக்கு வேண்டாம் என்ற முனிவர் ..அம்மன்னனையும் அழைத்துக் கொண்டு பிரத்நஸ்வன் என்னும் மன்னனை சந்தித்தார்.அம்மன்னனும் கையை விரித்துவிட , அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திரஸதஸ்யு என்ற மன்னனைச் சந்தித்தார்.அவனும் வருவாய்க்கும், செலவிற்கும் சரியாகிவிடுகிறது என உரைக்க, அனைவரும் வேறு என்ன செய்வது என ஆலோசித்தனர்.பின், மன்னர்களின் யோசனைப்படி இல்வலன் என்னும் அசுரனைக் காணச் சென்றனர்.

அவர்களைக் கண்ட அசுரன் பெரும் வரவேற்பளித்தான்.

வாதாபியை ஆட்டுக் கறியாக்கி அவன் விருது படைக்கப் போகிறான் என அனைவரும் அறிந்துக் கொண்டனர்.மன்னர்கள் அஞ்சினர்.அவர்களிடம் அகத்தியர்,'வாதாபியை ஜீரணித்து விடுகிறேன்.கவலை வேண்டாம்' என ஆறுதல் கூறினார்.

அனைவரும் உணவுக்காக அமர்ந்தனர்.இல்வலன் மகிழ்ச்சியில் இருந்தான்.ஆட்டுக்கறியை மேலும்..மேலும் கேட்டு அகத்தியரே சாப்பிட்டார்.உடன் இல்வலன்'வாதாபி..இம்முனிவர் உன்னை ஜீரணிப்பதற்குள் வெளியே வா என கூக்குரலிட்டான்.ஆனால் அகத்தியரோ..'வாதாபி..உலக நன்மையின் பொருட்டு உன்னை நான் ஜீரணிக்கிறேன்' என்று கூறி மூன்று முறை தன் வயிறை தடவிக் கொடுத்தார்.இல்வலனோ..'வாதாபி வா..வா..' என்றான்.அகத்தியரோ..'இல்வலா! இனி வாதாபி வர மாட்டான்.அவன் கதை முடிந்தது.அவனை நான் ஜீரணித்து விட்டேன்' என்று கூறினார்.தம்பியின் மரணம் அறிந்த இல்வலன் வருந்தினான்.

பின் அவன் அகத்தியரை நோக்கி, 'முனிவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டி நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்?' என்றான்.

'அசுரா..உன்னிடம் அதிகம் செல்வம் இருப்பதாய் அறிந்தோம்..செல்வத்தால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..ஆகவே..மிக்க செல்வத்தைத் தருவாயாக' என்று கேட்டார்.

அதற்கு இல்வலன், 'நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்' என்றான் செருக்குடன்.

'இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் பொன் நாணயமும்,பதினையாரிரம் பசுக்களும் கொடு. எனக்கு முப்பதாயிரம் பசுக்களும், முப்பதாயிரம் பொன்னும், மற்றும் விரைந்து செல்ல இரண்டு குதிரைகளையும், பொன் தேரையும் கொடு' என்றார் அகத்தியர்.

'முனிவரே!தாங்கள் கேட்டது போல பசுக்களும் பொன்னும் தருகிறேன்.பொன் தேர் ஏதும் என்னிடம் இல்லை' என்றான் இல்வலன்.

'போய் நன்றாகப் பார்.பொன் தேர் இருக்கிறது' என்றார் அகத்தியர்.

சென்று பார்த்த அசுரன் பொன் தேர் இருப்பதைப் பார்த்தான்.பின் , முனிவர் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.அகத்தியர் ஆஸ்ரமம் திரும்பினார்.இல்வலணோ மன அமைதி இழந்தான்.அகத்தியரை கொல்ல நினைத்தான்..தகவல் அறிந்த அகத்தியர் அவனைப் பார்வையாலேயே அழித்தார்.உடன் வந்த மன்னர்கள் அகத்தியரிடம் விடை பெற்று நாடு திரும்பினர்.

முனிவர் தன் மனைவியை அழைத்து செல்வங்களைக் காட்டினார்.லோபமுத்திரை மகிழ்ச்சி அடைந்தாள்.பின் அகத்தியர் அவளிடம் 'உனக்கு எத்தனை மகன்கள் வேண்டும்? ஆயிரமா..அல்லது அத்துணை வன்மை பொருந்திய நூறு பிள்ளைகள்..அல்லது நூறு பிள்ளைகளுக்கு இணையான பத்துப் பிள்ளைகள்..அல்லது அத்துணை வன்மையும் மிக்க ஒரு பிள்ளை வேண்டுமா? உன் விருப்பத்தைத் தெரிவி' என்றார்.

அனைத்துச் சிறப்பும் பொருந்திய ஒரு மகன் போதும் என்றாள் லோபமுத்திரை.

அவளுக்கு..வேதங்களையும், உபநிஷதங்களையும் ஓதிய படியே ஒரு மகன் பிறந்தான்.அக்குழந்தைக்கு த்ருடஸ்யு என்ற பெயர் இட்டனர்.பிறந்ததுமே பலவானாகத் திகழ்ந்த அக்குழந்தை தந்தையின் ஹோமத்திற்காக வேண்டிய ஸமித்தினைச் சுமை சுமையாகக் கோணர்ந்தது.இதனால் இத்மவாஹன் என்னும் பெயர் பெற்றான்.

மகனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.அவரது முன்னோர்கள் அனைவரும் விரும்பிய சுவர்க்கம் அடைந்தனர்.அப்புத்திரனால் அகத்தியர் ஆஸ்ரமமும் உலகப் பிரசித்தி அடைந்தது...என லோமசர் கூறி முடித்தார்.

இக்கதையினால்..செருக்கும் அடக்கமின்மையும் குலத்தைக் கெடுத்துவிடும் என உணரலாம்.