Thursday, July 28, 2011

157-தரும வியாதர் உரைத்த நீதிகள் -2

"என் மூதாதையர் காலத்திலிருந்தே இத் தொழிலை என் குடும்பம் செய்து வருகிறது.என் பெற்றோரைக் காப்பது ஒன்றே என் கடமையாய் செய்து வருகிறேன்.இத் தொழிலைப் பற்றி நான் கவலைப்படவில்லை.என் வாழ்வில் சில நெறி முறைகளை பின் பற்றி வருகிறேன்.சத்தியம் தவறுவதில்லை.உண்மையே பேசுகிறேன்.வினைப் பயனை நம்புகிறேன்.யாரையும் இழிவாகக் கருதுவதில்லை.இன்ப துன்பங்களை சமமாய் எண்ணுகிறேன்.நாட்டில் நல்லாட்சி நடைகிறது.ஜனக மாமன்னன் நீதி தவறாது ஆட்சி செய்கிறான்.
நானாக எதையும் கொல்வதில்லை.பிறரால் கொல்லப்பட்ட மாட்டிறைச்சிகளை விற்கிறேன்.ஆனால் நான் புலால் உண்பதில்லை.நோன்பு நோற்கிறேன்.பிறரது புகழ்ச்சியையும்,இகழ்ச்சியையும் சமமாகக் கருதுகிறேன்.ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவிற்கு தானம் செய்ய வேண்டும்.காமத்தாலோ, பயத்தாலோ தருமத்தை விட்டுவிடக்கூடாது.அரிய காரியங்களைச் செய்ய தளர்ச்சியடையக் கூடாது.நல்ல செயல்கலையே எப்போதும் செய்ய வேண்டும்.ஒரு பாவி தன் பாவச்செயலால் அழிந்துப் போகிறான்.தூயோரைப் பழிப்பதும்,தருமத்தில்பற்றின்மையும் அழிவைத் தருகின்றன.நல்லோர்கள் அனைவரிடமும் பணிவுடன் இருப்பர்.அடக்கம் இல்லாதவர்கள் தற்புகழ்ச்சியில் ஈடுபட்டுத் தாழ்வடைகின்றனர்.தவறுசெய்பவர் அத் தவறை உணர்ந்து வருந்துவாராயின் அவர்களைப் பாவ கர்மம் பற்ருவதில்லை.ஒருவன் தவறான செயல்களைச் செய்து விட்டு 'நான் அப்படிச் செய்யவில்லை' என சாதித்தாலும் அவன் பாவ கர்மத்தினின்றும் தப்ப முடியாது.
எவன் தன் குற்றம் உணராது பிறர் குற்றம் காண்கின்றானோ அவனுக்கு நற்கதி கிடைக்காது.அவன் மறுமையிலும் துன்புறுவான்.நற்செயல்கள் செய்வதால் ஒருவன் எல்லாப் பாவங்களையும் தொலைத்துவிடுகின்றான்., பேராசையுள்ளவர்கள் பாவப்படுகுழியில் வீழ்வர்.' என்றார் தரும வியாதர்.
கௌசிகன் தக்கோரின் மேலான ஒழுக்கங்களைக் கூறுமாறு கேட்க,வியாதர் பதில் உரைத்தார்..

'மேலான ஒழுக்கங்களில் தானம்,தவம்,யாகம்,ஆகமம்,சத்தியம் ஆகிய ஐந்தும் குறிப்பிடத்தக்கன.ஆகமத்தின் அடிப்படை சத்தியம்.சத்தியத்தின் அடிப்படை புலனடக்கம்.புலனடக்கத்தின் அடிப்படை போகங்களைத் துறத்தல்.இவை எப்போதும் மேலான ஆசாரங்களில் நிலை பெற்றுள்ளன.எப்போதும் உண்மையையே உரைத்து, தருமத்தைச் செய்து, நிதானத்துடன் ஆகமக் கருத்துகளைக் கவனமாக கற்று உணர்ந்து அறம்,பொருள்,இன்பங்களை அடைபவர்கள் மேலான ஒழுக்க சீலர் ஆவர்.
ஐம்பொறிகளையும் அடக்கி வென்றவர்கள் மோட்சத்தை அடைவர்.அல்லாதார் துன்பக் கடலில் மூழ்குவர்.கொல்லாமை,வாய்மை, எல்லா உயிரிடத்தும் அன்புடன் இருத்தல் ஆகிய மூன்றும் உயர்ந்த தருமம் ஆகும்.இம்மூன்றில் கொல்லாமை மிக உயர்ந்த தருமம்.அது வாய்மையில் நிலை பெறுகிறது.சாதுக்களின் தருமம் என்பது மேலான ஒழுக்கமாகும்.நியாயத்துடன் பொருந்தியது தருமம் என்றும்,அநியாயத்துடன் கூடியது பாவம் என்றும் சொல்லப்படுகிறது.யாரிடம் கோபம்,செருக்கு,வஞ்சனை முதலிய கெட்ட பண்புகள் இல்லையோ அவர்கள் ஒழுக்கம் உள்ளவராய் கருதப்படுவர்.
நல்வினை, தீவினைகளின் பயனான இன்ப, துன்பங்களை அனுபவிப்பதன் மூலம் வினைகள் கெடுகின்றன என எண்ணுபவர்கள் மேலோராவர்.தானம் செய்வதில் நாட்டமுடையவர்கள் இன்பத்தை அடைவார்கள்.மேலான ஒழுக்கம் உடையவர் தமது குடும்பங்களின் சௌகரியங்களைக் குறைத்துக் கொண்டு சாதுக்களுக்கு உதவி செய்வர்.அறவோர் ஞானமாகிய உயர்நிலையில் நின்று புத்தி மயங்கிக் கிடக்கும் மக்களை நல்வழிப்படுத்த நினைப்பர்' என்று கௌசிகனுக்கு மேலோரின் பண்புகள் பற்றிக் கூறினார் தருமவியாதர்.
அவர் மேலும் கூறியது அடுத்த பதிவில்.

Saturday, July 23, 2011

156-தருமவியாதர் உரைத்த நீதிகள்








'
கௌசிகன் என்பவன் சிறந்த அந்தணன்.வேதத்தில் வல்லவன்.எப்போதும் தவத்தை மேற்கொண்டிருப்பவன்.ஒருநாள் வேத மந்திரத்தை உச்சரித்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்திருந்தான்.அப்போது மரத்தின் மீது அமர்ந்திருந்த ஒரு கொக்கு அவன் மீது எச்சமிட்டது.அதனால் கோபம் கொண்ட அந்தணன் அந்தக் கொக்கை தீ உமிழும் கண்களால் நோக்க அந்த வெம்மையைத் தாங்காது அக்கொக்கு எரிந்து தரையில் விழுந்தது.அந்தணன் பறவையின் முடிவு கண்டு வருந்தினான்.
பிறகு பிட்சைக்காகக் கிராமத்தை அடைந்தான்
.ஒரு வீட்டின் வாயிலில் நின்றவாறு 'தாயே..பிட்சை தருக' என்றான்.அவ்வீட்டுப் பெண்மணி சிறிது நேரம் பொறுத்திருக்கக் கூறினாள்.பசியுடன் வீட்டிற்கு வந்த கணவனைக் கவனிப்பதில் ஈடு பட்டாள்.கணவனையே தெய்வமாகக் கொண்ட அந்தப் பெண் சொல்லாலும்,செயலாலும் எப்போதும் கணவருக்கு மகிழ்ச்சியையே தருவாள்.
பிட்சைக் கேட்டு வந்த அந்தணனை நீண்ட நேரம் காக்க வைத்தற்கு வருந்தினாள்
.'பெண்ணே..என்னை வேறிடத்திற்குச் செல்லமுடியாதவாறு செய்து விட்டாயே' என சீறினான்.
கௌசிகனின் சினம் கண்டு வருந்தியவள்
, 'கணவனுக்கு பணிவிடை செய்துவர நேரமாகிவிட்டது.மன்னிக்கவும்.' என்றாள்.
அந்தணனும் கோபத்துடன்
'உனக்கு உன் கணவனைத் தவிர வேறு யாரும் உயர்வில்லை போலும்.தேவாதி தேவனே எங்களைப் போற்றுகிறான்.நீ எம்மாத்திரம்.வேதவித்தாகத் திகழும் என் பெருமையை நீ அறியாய்..அந்தணர்கள் சரியாக மதிக்கப் படாவிடின் எரித்து விடுவர்' என்றான்.
உடன் அவள் கூறினாள்
'மாமுனியே! சினத்தை அடக்குவாயாக.என்னை சுட்டு எரிக்க நான் கொக்கு அல்ல.காலம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னியுங்கள்.நான் உத்தமர்களை என்றும் பழித்ததில்லை.தவவலிமை மிக்க பலரை நான் அறிவேன்.வாதாபியை அடக்கிய அகத்தியர் முதலியவர்களை நான் போற்றுகின்றேன்.உமது சினத்தை நீர் அடக்குவீராக.என்னைப் பொறுத்தவரை கணவரை விட உயரானவர் யாருமில்லை.அதனால் ஏற்படும் பயனும் நான் அறிவேன்.நீர் சினம் கொண்டு கொக்கை எரித்ததை எனது பதிவிரதத் தன்மையால் அறிந்தேன்.நீர் சினத்தால் அக்கொக்கை எரித்தது போல என்னை ஒன்றும் செய்யமுடியாது' என்றாள்.
மேலும் கூறத்தொடங்கினாள் அந்தப் பத்தினி
,'அந்தணர் என்பவர் யார் தெரியுமா?கோபத்தை விடுபவர் அந்தணர்.பிறரால் துன்புறுத்தப் பட்டாலும் அப்பிறர்க்குத் துன்பம் செய்யாதவரே அந்தணர்.யார் ஆகமப் பயிற்சியுள்ளவரோ அவரே அந்தணர்.யார் இன்ப துன்பங்களைச் சமமாகக் கருதுகின்றனரோ அவரே அந்தணர்.'யான்' எனும் செறுக்கு அற்றவர் யாரோ அவரே அந்தணர்..தருமத்தை அறிதல் எளிதன்று.நீர் தருமத்தை நங்கு அறிதல் வேண்டும்.மிதிலையில் தரும வியாதர் என்றொருவர் இருக்கிறார்.அவரிடம் சென்று தருமம் பற்றி உணர்வீர்களாக..நன்மை தீமை உணர்ந்த யாரும் பெண்களைப் பழிக்கவோ..துன்புறுத்தவோ மாட்டார்கள்' என்றாள்.
இதைக் கேட்ட கௌசிகன் வியப்புற்றான்
.'என்னிடம் இருந்த கோபம் விலகியது.மிதிலை சென்று தரும வியாதரிடம் தருமங்கள் பற்றி அறிய விரும்புகிறேன்' என்று சொல்லிவிட்டு கௌசிகன் மிதிலைக்குப் புறப்பட்டான்.
வீட்டிலிருக்கும் போதே கொக்கு எரிக்கப்பட்டதை உணர்ந்து பேசியவளின் பேச்சுகளை எண்ணி வியந்தான்
. தரும வியாதரிடம் மேலும் தருமங்களை அறிய மிதிலையை நோக்கி விரைந்தான்.அறத்தின் பொலிவுடன் இருந்தது அந்நாடு.உணவு தானியங்கள் நிறைந்திருந்தன.மக்கள் நிம்மதியுடன் இருந்தனர்.கௌசிகன் தரும வியாதர் இருக்குமிடம் சென்றான்.அப்போது விலங்குகளைக் கொல்லும் இடத்தில், மாட்டிறைச்சியையும்,மானிறைச்சியையும் விற்பனை செய்துக் கொண்டிருந்தார்,தரும வியாதர்.ஜனநெருக்கடியாய் இருந்ததால் கௌசிகன் தனியான ஓரிடத்தில் அமர்ந்தான்.தருமவியாதர், அவனிடம் சென்று,'உம்மை ஒரு பதிவிரதை மிதிலைக்குப் போகுமாறு பணித்ததை நான் அறிவேன்..உனக்கு வேண்டியது யாது? என்றார்.
கௌசிகனுக்கு
இது இரண்டாவது வியப்பு,'இவ்விடத்தில் நீர் இருப்பது தவறு.என் வீட்டிற்குப் போகலாம்'என தருமவியாதர் அழைக்க கௌசிகன் மகிழ்ந்தான்.
தருமவியாதர்
தன் வீட்டில் கௌசிகனுக்கு தக்க உபசாரம் செய்தார்.கௌசிகனும் மகிழ்ந்து'தருமவியாதரே..நீர் செய்யும் தொழில் உமக்கு ஏற்றதன்று' என்றான். .




Monday, July 11, 2011

155-அகஸ்தியர்-இல்வலன்-வாதாபி பற்றிய கதை

பாண்டவர்கள் தீர்த்த யாத்திரையின் போது மணிமதி என்னும் நகரத்தில் தங்கி இருந்தனர்.அப்போது யுதிஷ்டிரர் லோமசரை நோக்கி, 'இல்வலனையும், வாதாபியையும் அகத்தியர் ஏன் அழித்தார்?" என வினவ முனிவர் சொல்லலானார்.

இல்வலன் என்னும் அசுரன் மணிமதி நாட்டை ஆண்டு வந்தான்.அவன் தம்பியின் பெயர் வாதாபி.இல்வலனுக்கு மகப்பேறு இல்லை.அவன் தவ வலிமை மிக்க அந்தணன் ஒருவனை அடைந்து, 'இந்திரனுக்கு இணையான பிள்ளையை நான் பெற வேண்டும்.அதற்கான ஆசி அருள வேண்டும்' என்றான்.அவனது செருக்கை உணர்ந்த அந்தணர், 'எனது ஆசி உனக்கு இல்லை' என்றார்.

கடும் சினம் கொண்ட இல்வலன், அன்று முதல் அந்தணர்களை கொல்ல முடிவெடுத்தான்.மாயையில் வல்ல அவன் தன் தம்பி வாதாபியை ஆடாக உருமாறச் செய்தான்.இல்வலன் அந்த ஆட்டை சமைத்து அந்தணர்களுக்கு அளித்து அவர்களை கொல்ல நினைத்தான்.இல்வலனிடம் அபூர்வ ஆற்றல் ஒன்று இருந்தது.ஒருவன் இறந்து விட்டாலும் அவனைப் பெயரிட்டு கூப்பிட்ட அளவில் உயிர் பெற்று வந்துவிடுவான்.

அந்தணர்கள் இல்வலன் படைக்கும் ஆட்டுக்கறியை உண்ட பின் அவன் 'வாதாபி' என்று குரல் கொடுத்துத் தம்பியை அழைப்பான்.உடன் வாதாபி அந்தணர் வயிற்றைக் கிழித்துக் கொண்டு உடன் வெளியே வந்துவிடுவான்.இப்படி பல அந்தணர்களைக் கொன்றான்.

அச்சமயத்தில் அகத்திய முனிவர் தம் மூதாதையர் பள்ளத்தாக்கில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்து அதற்கான காரணத்தைக் கேட்டார்.

'நாங்கள் உன் முன்னோர்கள்.உனக்கு ஒரு புதல்வன் பிறக்க வேண்டும் என்று வேண்டி, இங்கு இப்படித் தொங்குகிறோம்! உனக்கு ஒரு மகன் பிறந்தால் எங்களுக்கு நற்கதி கிடைக்கும்' என்றனர்.அகத்தியரும் தனக்குப் பொருத்தமான பெண் எங்கிருக்கிறாள் என்பதை தன் எதிர்கால உறவால் கண்டறிந்தார்,

விதர்ப்பநாட்டு மன்னனுக்கு ஒரு பெண் பிறக்குமாறு செய்தார்.லோபமுத்திரைஎனப் பெயர் பெற்ற அவளுக்குரிய கணவனை ஆராய்ந்தான் மன்னன்.அகத்தியருக்கி அஞ்சி யாரும் அவளை மணமுடிக்க வரவில்லை.

அகத்தியர் அப்பெண்ணை தனக்குத் தருமாறு மன்னனைக் கேட்டார்.பெரும் தவசிக்குப் பெண் கொடுக்க விருப்பமில்லா மன்னன் தன் மனைவியிடம் இது குறித்து ஆலோசித்துக் கொண்டிருந்தான்.அப்போது அங்கு வந்த லோபமுத்திரை, 'தந்தையே..நீங்கள் கவலைப்பட வேண்டாம்.என்னை அம் முனிவருக்கே மணமுடியுங்கள்' என்றாள்.

அகத்தியருக்கும்,லோபமுத்திரைக்கும் திருமணம் முடிந்தது.முனிவர் தன் மனைவியிடம்,'இனி நீ ஆஸ்ரம விதிப்படி நடந்து கொள்ளவேண்டும்.விலை உயர்ந்த ஆடை,அணிகளை விலக்கி மரவுரிகளைத் தரித்துக் கொள்ள வேண்டும்' என்றார்.அவ்வாறே லோபமுத்திரையும் செய்து வந்தாள்.அவளது தூய தன்மையையும்,அடக்கத்தையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.ஒருநாள் லோபமுத்திரையின் அழகுக் கண்டு, அவளுடன் இன்பம் அடைய விரும்பினார்.தன் கருத்தை அவளிடம் தெரிவித்த போது அவளோ தவக்கோலத்தில் புணர்ச்சியை விரும்பவில்லை.உயர்ந்த ஆடை அணிகலன்களை இருவரும் அணிந்து இன்பம் அனுபவிப்போம் என்றாள்.உடன் முனிவர்,'எனக்கேது உயர் ஆடைகளும், அணிகலன்களும் என்றார்.

'உம் தவ வலிமையால் அவற்றை அடையலாம்' என்றாள் லோபமுத்திரை.ஆனால் தவத்தை தவறான வழியில் பயன்படுத்த விரும்பாத முனிவர் மன்னனிடம் சென்று பொருள் பெற விழைந்தார்.

அகத்தியர் முதன் முதலாய் ஸ்ருதர்வா என்ற மன்னனிடம் சென்றார்.பெரும் செல்வத்தை நாடி வந்திருப்பதைத் தெரிவித்தார்.மன்னனோ..'முனிவரே! நாட்டில் வரவும் செலவும் சரியாய் உள்ளது.நான் பெரும் செல்வத்திற்கு எங்கு போவேன்..' என வருந்தினான்.குடிகளைத் துன்புறுத்தி வரி வசூலித்துத் தருவதானால் அச் செல்வம் தனக்கு வேண்டாம் என்ற முனிவர் ..அம்மன்னனையும் அழைத்துக் கொண்டு பிரத்நஸ்வன் என்னும் மன்னனை சந்தித்தார்.அம்மன்னனும் கையை விரித்துவிட , அவ்விருவரையும் அழைத்துக் கொண்டு திரஸதஸ்யு என்ற மன்னனைச் சந்தித்தார்.அவனும் வருவாய்க்கும், செலவிற்கும் சரியாகிவிடுகிறது என உரைக்க, அனைவரும் வேறு என்ன செய்வது என ஆலோசித்தனர்.பின், மன்னர்களின் யோசனைப்படி இல்வலன் என்னும் அசுரனைக் காணச் சென்றனர்.

அவர்களைக் கண்ட அசுரன் பெரும் வரவேற்பளித்தான்.

வாதாபியை ஆட்டுக் கறியாக்கி அவன் விருது படைக்கப் போகிறான் என அனைவரும் அறிந்துக் கொண்டனர்.மன்னர்கள் அஞ்சினர்.அவர்களிடம் அகத்தியர்,'வாதாபியை ஜீரணித்து விடுகிறேன்.கவலை வேண்டாம்' என ஆறுதல் கூறினார்.

அனைவரும் உணவுக்காக அமர்ந்தனர்.இல்வலன் மகிழ்ச்சியில் இருந்தான்.ஆட்டுக்கறியை மேலும்..மேலும் கேட்டு அகத்தியரே சாப்பிட்டார்.உடன் இல்வலன்'வாதாபி..இம்முனிவர் உன்னை ஜீரணிப்பதற்குள் வெளியே வா என கூக்குரலிட்டான்.ஆனால் அகத்தியரோ..'வாதாபி..உலக நன்மையின் பொருட்டு உன்னை நான் ஜீரணிக்கிறேன்' என்று கூறி மூன்று முறை தன் வயிறை தடவிக் கொடுத்தார்.இல்வலனோ..'வாதாபி வா..வா..' என்றான்.அகத்தியரோ..'இல்வலா! இனி வாதாபி வர மாட்டான்.அவன் கதை முடிந்தது.அவனை நான் ஜீரணித்து விட்டேன்' என்று கூறினார்.தம்பியின் மரணம் அறிந்த இல்வலன் வருந்தினான்.

பின் அவன் அகத்தியரை நோக்கி, 'முனிவரே! உங்களுக்கு என்ன வேண்டும்? என்ன வேண்டி நீங்கள் அனைவரும் வந்துள்ளீர்கள்?' என்றான்.

'அசுரா..உன்னிடம் அதிகம் செல்வம் இருப்பதாய் அறிந்தோம்..செல்வத்தால் ஆக வேண்டிய காரியம் ஒன்று இருக்கிறது..ஆகவே..மிக்க செல்வத்தைத் தருவாயாக' என்று கேட்டார்.

அதற்கு இல்வலன், 'நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்' என்றான் செருக்குடன்.

'இவர்கள் ஒவ்வொருவருக்கும் பதினையாயிரம் பொன் நாணயமும்,பதினையாரிரம் பசுக்களும் கொடு. எனக்கு முப்பதாயிரம் பசுக்களும், முப்பதாயிரம் பொன்னும், மற்றும் விரைந்து செல்ல இரண்டு குதிரைகளையும், பொன் தேரையும் கொடு' என்றார் அகத்தியர்.

'முனிவரே!தாங்கள் கேட்டது போல பசுக்களும் பொன்னும் தருகிறேன்.பொன் தேர் ஏதும் என்னிடம் இல்லை' என்றான் இல்வலன்.

'போய் நன்றாகப் பார்.பொன் தேர் இருக்கிறது' என்றார் அகத்தியர்.

சென்று பார்த்த அசுரன் பொன் தேர் இருப்பதைப் பார்த்தான்.பின் , முனிவர் கேட்ட அனைத்தையும் வழங்கினான்.அகத்தியர் ஆஸ்ரமம் திரும்பினார்.இல்வலணோ மன அமைதி இழந்தான்.அகத்தியரை கொல்ல நினைத்தான்..தகவல் அறிந்த அகத்தியர் அவனைப் பார்வையாலேயே அழித்தார்.உடன் வந்த மன்னர்கள் அகத்தியரிடம் விடை பெற்று நாடு திரும்பினர்.

முனிவர் தன் மனைவியை அழைத்து செல்வங்களைக் காட்டினார்.லோபமுத்திரை மகிழ்ச்சி அடைந்தாள்.பின் அகத்தியர் அவளிடம் 'உனக்கு எத்தனை மகன்கள் வேண்டும்? ஆயிரமா..அல்லது அத்துணை வன்மை பொருந்திய நூறு பிள்ளைகள்..அல்லது நூறு பிள்ளைகளுக்கு இணையான பத்துப் பிள்ளைகள்..அல்லது அத்துணை வன்மையும் மிக்க ஒரு பிள்ளை வேண்டுமா? உன் விருப்பத்தைத் தெரிவி' என்றார்.

அனைத்துச் சிறப்பும் பொருந்திய ஒரு மகன் போதும் என்றாள் லோபமுத்திரை.

அவளுக்கு..வேதங்களையும், உபநிஷதங்களையும் ஓதிய படியே ஒரு மகன் பிறந்தான்.அக்குழந்தைக்கு த்ருடஸ்யு என்ற பெயர் இட்டனர்.பிறந்ததுமே பலவானாகத் திகழ்ந்த அக்குழந்தை தந்தையின் ஹோமத்திற்காக வேண்டிய ஸமித்தினைச் சுமை சுமையாகக் கோணர்ந்தது.இதனால் இத்மவாஹன் என்னும் பெயர் பெற்றான்.

மகனின் ஆற்றலையும் அறிவையும் கண்டு அகத்தியர் மகிழ்ந்தார்.அவரது முன்னோர்கள் அனைவரும் விரும்பிய சுவர்க்கம் அடைந்தனர்.அப்புத்திரனால் அகத்தியர் ஆஸ்ரமமும் உலகப் பிரசித்தி அடைந்தது...என லோமசர் கூறி முடித்தார்.

இக்கதையினால்..செருக்கும் அடக்கமின்மையும் குலத்தைக் கெடுத்துவிடும் என உணரலாம்.

Sunday, July 3, 2011

154-நல்ல அறிவுதான் இன்பத்திற்குக் காரணம்



'மனிதனுக்குச் செல்வம் என்று போற்றத் தக்கது அறிவுதான்.அறிவு உடையவன் செல்வம் உடையவன் ஆவான்.சுவர்க்கம் கூட அறிவினால் கிடைக்கும் என்பது மேலோர் கருத்து.பிரகலாதன், மங்கி போன்றவர்கள் செல்வத்திற்கு அழிவு நேர்ந்த போது அதனை அறிவாலேயே திரும்பப் பெற்றுள்ளனர்.அத்தகைய அறிவைவிடச் சிறந்தது ஏதுமில்லை.இது தொடர்பாக காஸ்யபருக்கும் இந்திரனுக்கும் நடைபெற்ற உரையாடலைச் சொல்கிறேன்' என பீஷ்மர் தருமருக்குக் கூறலானார்.

கர்வமும் மிகுந்த செல்வமும் உடைய வணிகன் ஒருவன் இருந்தான்.ஒருநாள் காஸ்யபர் என்னும் இளம் துறவி நடந்து சென்று கொண்டிருந்தார்.செருக்கு மிக்க அந்த வணிகனின் தேர் காஸ்யபரின் மீது மோத அவர் கீழே விழுந்தார்.கடும் சினம் கொண்டார்.ஆயின் என் செய்வது..'பொருள் அற்றோர் நிலை இதுதான்.இதைவிடச் செத்துத் தொலையலாம் என மனம் கலங்கிச் செயலற்றுக் கிடந்தார்.அந்த நேரத்தில் இந்திரன் நரி உருவம் தாங்கி அங்கு வந்து இளம் துறவியை நோக்கிக் கூறினான்.

பிறவிகளில் உயர் பிறவி மனிதப் பிறவியே.மேலான இப் பிறவியை அடைந்தும் ஏன் இதனைப் பாழாக்குகிறாய்? ஏன் சாக எண்ணுகிறாய்?இவ்வுலகில் கை உள்ளவர்களைப் பேறு பெற்றவர்களாகக் கருதுகிறேன்.உன்னைப் போன்ற மனிதருக்குப் பொருளில் ஆசை உள்ளதைப் போல என்னைப் போன்ற விலங்குகளுக்குக் கைகளைப் பெற ஆசை உள்ளது.கைகள் இல்லாததால் காலில் தைக்கும் முள்ளைக் கூட அகற்ற முடியாது.தொல்லை தரும் ஈ, எறும்பைக் கூட எங்களால் அகற்ற இயலவில்லை.கைகள் இருந்தால் இத்தகைய தொல்லைகளை அகற்றலாம்.கையில்லாததால் சரியாக உணவைக் கூட உண்ண முடியவில்லை.உடை உடுத்த முடியவில்லை.கை உள்ளவர்கள் எல்லாவற்றையும் எளிதாக அனுபவிக்கிறார்கள்.உன்னுடைய புண்ணியத்தால் நாயாகவோ,நரியாகவோ,கீரியாகவோ,எலியாகவோ, பாம்பாகவோ நீ பிறக்கவில்லை.உனது மேலான மனிதப் பிறவியைப் பற்றிப் பெருமைப்படு.இந்த கிடைத்தற்கரிய மானிடப்பிறவியை நல்வழிகளில் பயன்படுத்து.மனிதப் பிறவி தேவப்பிறவியை விடச் சிறந்தது.எந்தப் பிறவியாயினும் ஆசையை விட்டொழிக்க வேண்டும்.தேவன் தேவேந்திரனாக ஆசைப் படலாம்.அப்படி ஆனாலும் ஆசை அடங்காது.ஒரு பொருளை விரும்பி அது கிடைத்துவிட்டால், அதனாலேயே ஆசை அடங்கி விடுவதில்லை.மனம் வேறு ஒரு பொருளை நாடும்.ஆசை கொள்ளும்.அப்படி ஒவ்வொன்றாகத் தாவிச் செல்லும் மனதை அடக்குதல் மனிதப் பிறவியில் மட்டுமே கூடும்.மனதை அடக்கி அதன் மூலம் இன்பம் அடைவதும், மனதை அடக்காமல் அது போனபடியே சென்று துன்பம் அடைவதும் உன்னிடத்திலேயே இருக்கிறது.ஐம்பொறிகளையும் ஆமை போல் அடக்குபவனுக்குத் துன்பம் இல்லை.

ஒரு முறை ருசி கண்டவர்க்கு மேலும் மேலும் அப்பொருளைப் பெற வேண்டும் என்ற ஆசை உண்டாகும்.ஆசையை உண்டாக்கும் பொருளைப் பற்றிப் பிறர் பேசக் கேட்காமல் இருக்க வேண்டும்.அப்பொருளைப் பார்க்காமல் இருக்க வேண்டும்.தொடாமல் இருக்க வேண்டும்.

மனிதரில் சிலர் கல்வியிற் சிறந்தவராயும்,வலிமை மிக்கவராகவும்,அனுபவம் உள்ளவர்களாக இருந்தும் பாவ காரியங்களில் ஈடுபடுகின்றனர்.யாராய் இருந்தாலும் அப்பிறவியாயினும் யாரும் உயிரை விட விரும்புவதில்லை.அந்தந்த பிறவியில் அததற்குரிய இன்பம் ஒன்று இருக்கிறது.எனவே தான் எந்த உயிரும் அந்த இன்பத்தை அனுபவிக்க விரும்புகிறதே ஒழிய இறக்க விரும்புவதில்லை.

உடற்குறையுள்ள மனிதர் பலர் உள்ளனர்.கை இல்லாதவர்களும்,கால் இல்லாதவர்களும், ஒரு பக்கம் செயல் இழந்தவர்களும் ஆக இப்படி ஊனத்துடன் விளங்குவோர் பலர்.நீயோ உடற் குறை ஏதுமின்றி நோயும் இன்றி இருக்கிறாய்.உனக்குக் கெட்ட பெயரும் இல்லை.இந்நிலையில் கிடைத்தற்கு அரிய உயிரை விடுதல் நல்லதன்று.எனவே உற்சாகத்துடன் எழுந்திரு.தருமம் செய்.தானம் செய்.மனத்தை அடக்கு.சக்திக்கு ஏற்றாற் போல தியாகம் செய்.நற்கதி அடைவாய்.இப்பிறவியில் நல்லது செய்தால் அதன் பயனை அடுத்த பிறவியில் நன்கு அனுபவிப்பாய்.

நான் சென்ற பிறவியில் நல்லது செய்யவில்லை.ஆகமங்களை பழித்தேன்.விதண்டாவாதம் பேசினேன்.அறவோரை பழித்தேன்.ஒன்றும் அறியா நான் மேதாவி போல நடந்து கொண்டேன்.அதனால் நரியாக பிறவியெடுக்க நேர்ந்தது.இந்த இழி பிறவியிலிருந்து விடுபட்டு எனக்கு மனிதப் பிறவி கிடைக்குமா? அப்படிக் கிடைத்தால் அதிலாவது மன நிம்மதியுடன் இருப்பேனா?' என தனது விலங்குப் பிறவி குறித்து இரங்கிக் கூறி முடித்தது.

அது கேட்டு இளந்துறவி வியப்புற்று எழுந்தான்.அறிவு மிக்க நரியின் சொல்லைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தான்.அது நரியன்று என தன் ஞானக் கண்ணால் உணர்ந்தான்.நரி வடிவில் வந்து நன்னெறி காட்டியவன் இந்திரன் என்பதை உணர்ந்தான்.பின் அறநெறியில் வாழ்ந்தான்' என பீஷ்மர் தருமருக்கு நல் அறிவுதான் இன்பத்திற்குக் காரணம் என்பதை இக்கதை மூலம் தெரிவித்தார்.
 

Monday, June 20, 2011

153-ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்





தருமர் பீஷ்மரிடம் 'ஆண் பெண் புணர்ச்சியில் யாருக்கு இன்பம்' என வினவினார்.

பீஷ்மர் அதற்கு, 'இதை விளக்கப் பங்காஸ்வனன் என்னும் மன்னனின் வரலாற்றைக் கூறுகின்றேன், கேள்' எனக் கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் பங்காஸ்வனன் என்னும் ராஜரிஷி ஒருவன் இருந்தான் .நீண்ட காலம் மகப்பேறு இல்லாததால் அவன், இந்திரனுக்கு விரோதமான ஒரு யாகத்தைச் செய்தான்.நூறு பிள்ளைகளைப் பெற்றான்.யாகம் காரணமாக இந்திரனின் பகை ஏற்பட்டது.சில நாட்களுக்குப் பின் அம் மன்னன் வேட்டையாடக் காட்டிற்குச் சென்றான்.இதுதான் தக்க சமயம் என்று கருதிய இந்திரன் அம் மன்னனை அறிவு மயங்கச் செய்தான்.அறிவு மயங்கிய அம் மன்னன் குதிரையில் ஏறி திக்குத் தெரியாது அலைந்தான்.பசி வாட்டியது.

களைப்பால் சோர்ந்து போன மன்னன் நீர் நிறைந்த குளம் ஒன்றைப் பார்த்தான்.குதிரையை குளத்து நீரை குடிக்கச் சொல்லிவிட்டு பின் தான் குளிப்பதற்காக குளத்தில் இறங்கினான்.அப்போது பெண் உருவம் அடைந்தான்.உடன் நாணத்தால் தலை கவிழ்ந்தவன்..இனி குதிரை ஏறி ஊருக்கு எப்படிப் போவது..மனைவிக்கும், மகன்களுக்கும், மக்களுக்கும் என்ன சொல்வது..என் ஆண்மை போய் விட்டதே..பெண் ஆன வெட்கக் கேட்டை யாரிடம் எப்படிச் சொல்வது..எனப் பலவாறு வருந்திய மன்னன் குதிரை மீதேறி நாட்டை அடைந்தான்.அவனைக் கண்டு அனைவரும் வியப்புற்றனர்.

அவன் நடந்ததைக் கூறினான்.'நான் வேட்டையாட காட்டிற்குச் சென்றேன்.ஒரு தெய்வம் என்னை மயக்கிவிட்டது.தாகத்தில் திரிந்த நான், ஒரு அழகான குளத்தில் நீராடுகையில் பெண் ஆனேன்.இது தெய்வச் செயல் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.மனைவி மக்கள் மீதும் செல்வத்தின் மீதும் எனக்கு ஆசை குறையவில்லை.'

பின் தன் மக்களை அழைத்து'என் செல்வங்களே..நான் மறுபடியும் காட்டிற்குச் செல்கிறேன்.நீங்கள் அனைவரும் ஆட்சியை அனுபவியுங்கள்' என்றான்

பெண் ஆன அம் மன்னன் காட்டிற்குச் சென்று ஒரு ஆஸ்ரமத்தைக் கண்டான்.அங்கிருந்த முனிவரின் தொடர்பு ஏற்பட்டது.அந்த பெண்ணிற்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர்.பின்னர் அந்த நூறு பேரையும் அழைத்துக் கொண்டு நகரத்திற்கு வந்தான்.முன் தான் ஆணாக இருந்த போது பிறந்த நூறு பிள்ளைகளை நோக்கி'இந்த நூறு பேரும் நான் பெண்ணான பிறகு பிறந்தவர்கள்.நீங்கள் அனைவரும் சகோதரப் பாசத்துடன் ஒன்றுபட்டு ஆட்சி இன்பத்தை அடைவீராக" என்றான்.அவர்களும் அவ்வாறே நாட்டை ஒற்றுமையுடன் ஆண்டனர்.

அது கண்டு தேவேந்திரன் மனம் புழுங்கினான்.எனது செயல் இவர்களுக்கு நன்மை ஆயிற்றே அன்றி தீமை பயக்கவில்லையே என வருந்தினான்.உடன் அந்தணன் வேடம் தாங்கி அந்த நகரையடைந்தான்.மன்னனுக்கு முதலில் பிறந்த குமாரர்களைக் கண்டு, 'ஒரு தந்தைக்குப் பிறந்த சகோதரர்களிடையேக் கூட ஒற்றுமை இருப்பதில்லை..காஸ்யபரின் புத்திரர்கள்தாம் அசுரர்கலூம், தேவர்களும். அவர்களே நாடு காரணமாகத் தங்களுக்குள் சண்டையிட்டனர்.நீங்களோ பங்காஸ்வனனுக்குப் பிறந்தவர்கள்.மற்ற நூற்றுவரோ முனிவருக்குப் பிறந்தார்கள்.உங்களுக்கே உரிய உங்கள் தந்தையின் நாட்டை முனிவரின் பிள்ளைகள் அனுபவிக்கிறார்களே! இது மரபில்லவே' என்று கூறி அம் மக்களிடையே பகையை உண்டாக்கினான்.மனம் மாறிய அவர்கள் ஒருவரோடு ஒருவர் சண்டையிட்டு மாண்டனர்.

அது கண்ட ரிஷி பத்தினி கதறி அழுதாள்.அப்போது தேவேந்திரன் அவள் எதிரில் தோன்றி,'ஏன் இப்படி அழுகிறாய்? உனக்கு என்ன நேர்ந்தது' என வினவினான்.

அவள் அவனை நோக்கி,'நான் முன்னர் மன்னனாக இருந்தேன்.அப்போது நூறு பிள்ளைகளைப் பெற்றேன்.ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றபோது ஒரு குளத்தில் இறங்கிக் குளிக்கும் போது பெண்ணாகி விட்டேன்.பெண்ணானப் பின் ஒரு முனிவரின் சேர்க்கையால் நூறு பிள்ளைகளைப் பெற்றெடுத்தேன்.அந்த இருநூறு பிள்ளைகளும் பகை கொண்டு சண்டையிட்டு மாண்டனர்.இதைவிட எனக்கு துன்பம் வேண்டுமா? என்றாள் (ன்)

இந்திரன் அவளை நோக்கி, 'முன்னர் நீ மன்னனாய் இருக்கையில் என்னை மதிக்காது எனக்கு எதிரான யாகம் செய்தாய்.இதனால் நான் மிகவும் வருந்தினேன்.அந்தப் பழியைத் தீர்த்து விட்டேன்' என்றான்.

ரிஷி பத்தினி இந்திரனை வணங்கி'நான் பங்காஸ்வனனாய் இருக்கையில் மகப்பேறு வேண்டிச் செய்யப்பட்ட யாகம் அது.தங்களை அவமதிக்கச் செய்தது அல்ல' என மன்றாடினாள்.

தேவேந்திரன் அவள் செய்த தவற்றைப் பொறுத்துக் கொண்டு,'உனக்கு எந்தப் பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.ஆணாக இருக்கையில் பிறந்தவைகளா? அல்லது பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளா?' என வினவினான்.

;நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகள் பிழைக்க வேண்டும்.' என்றாள்.

இந்திரன் வியப்புடன்,'நீ ஆணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை விரும்பாததன் காரணம் என்ன? பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளிடம் விருப்பம் கொண்டதேன்?'என்றான்.

அதற்கு அவள் 'பெண்களுக்குத் தான் மக்கள் பாசம் அதிகம்.ஆண்களுக்கு அப்படி இல்லை.ஆதலால்தான் நான் பெண்ணாக இருந்த போது பிறந்த பிள்ளைகளை பிழைக்கச் செய்ய வேண்டுகிறேன்' என்றாள்.

உடன் இந்திரன், 'உண்மை உரைப்பவளே! இப்போது நான் அனைவரையும் பிழைக்கச் செய்கிறேன்' என்றார்.மேலும் அவளை நோக்கி, 'நீ ஆணாக விரும்புகிறாயா? அல்லது இப்போது இருப்பது போல பெண்ணாகவே இருக்கிறாயா?' என்றான்.

"நான் மீண்டும் ஆணாக விரும்பவில்லை.பெண்ணாகவே இருக்க விரும்புகிறேன்.ஆண் பெண் புணர்ச்சியில் பெண் தான் அதிகம் இன்பம் அடைகிறாள்.இதனால்தான் நான் பெண்தன்மையை விரும்புகிறேன்.நான் இப்படியே பெண்ணாகவே இருந்து விடுகிறேன்.இதிலேயே எனக்கு இன்பம் கிடைக்கிறது" என்றாள்.

அவ்வாறே வரம் தந்து இந்திரன் சென்றான்.

இவ்வாறு பெண் தான் அதிக இன்பம் பெறுகிறாள் என பீஷ்மர் தருமருக்கு உரைத்தார்.

Sunday, June 12, 2011

152-உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும்



பீஷ்மர் தருமருக்கு மேலும் சொல்லத் தொடங்கினார்..

'தருமா..காலகவிருஷியர் என்னும் முனிவர் ஒருவர் இருந்தார்.அவர் ஒரு கூண்டில் காகம் ஒன்றை அடைத்துக் கொண்டு,ஆங்காங்குச் சென்று குற்றம் புரிபவரைக் கண்டுபிடித்து விடுவார்.காகத்தின் மொழி எனக்குத் தெரியும்..ஆகவே காகம் சொல்வதை நான் புரிந்துக் கொள்வேன் என்பார்.அவர் ஒரு சமயம் கோசல நாட்டு மன்னனான க்ஷேமதரிசியைக் காணச் சென்றார்.மன்னனைச் சார்ந்த அதிகாரிகளின் குற்றத்தைக் காக மொழியின் மூலம் தெரிந்து கொண்டார்.

நாட்டு நலனில் அக்கறைக் கொண்ட முனிவர் அமைச்சர்களுடன் மன்னன் இருக்கையில் அங்குச் சென்றார்.அமைச்சருள் ஒருவரை நோக்கி..'நீ செய்த அரச குற்றங்களை நான் அறிவேன்.அரசாங்க உடமைகளைத் திருடியதையும்,செல்வத்தைக் கொள்ளை அடித்ததையும் நான் என் காகம் மூலம் அறிந்து கொண்டேன்.நீ செய்தது சரிதானா..என உன் மனசாட்சியைக் கேட்டுப் பார்' என்றார்.முனிவரின் அப்பேச்சைக் கேட்ட அவையோர் அதிர்ச்சி அடைந்தனர்.

பின் கோசல நாட்டில் எங்கும் காகம் மொழி பற்றியே பேசப்பட்டது.அதிகாரிகளின் ஒழுக்கக் கேட்டை மக்கள் கடுமையாக விமரிசனம் செய்யத் தொடங்கினர்.அமைச்சர்கள் பற்றிய புகார்கள் எங்கும் எழுந்தது.இந்நிலையில் குற்றம் புரிந்தவர்கள் அனைவரும் முனிவருக்கு எதிராகச் சதி செய்யத் தொடங்கினர்.முனிவரின் காகத்தைத் தீர்த்துக் கட்டுவது எனமுடிவெடுத்தனர்.முனிவர் உறங்கிக் கொண்டிருந்த போது கூண்டிலேயே காகத்தைக் கொன்றனர்.காலையில் எழுந்த முனிவர் காகத்தின் கதி கண்டு வருந்தினார்.மன்னனைக் காணச் சென்றார்.

க்ஷேமதரிசி என்னும் அம் மன்னனை நோக்கி ..'மன்னா..உன்னை நான் அடைக்கலம் அடைந்தேன்.என்னைக் காப்பாற்ற வேண்டுகிறேன்.உனக்குச் சிலவற்றைக் கூற விரும்புகிறேன்.உன்னைச் சார்ந்த சிலர் உனக்கு கேடு செய்கின்றனர்.அரசாங்க பொக்கிஷத்தைஸ் சிறிது சிறிதாகத் திருடுகின்றனர்.நான் இதை என் காகத்தின் மூலம் அறிந்தேன்.உன்னைச் சார்ந்தவர்களின் கோபம் காகத்திடம் சென்று அதனைக் கொன்று விட்டது.

உயிர்களீடம் கருணை அற்ற அவர்கள் வேறொரு திட்டத்தையும் வைத்துள்ளனர்.உன் சமையல்காரர் மூலம் உன் அழிவை விரும்புகின்றனர்.ஆகவே நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அவர்களிடம் நான் கொண்ட அச்சத்தால் நான் வேறு ஆசிரமம் செல்ல விழைகிறேன்.அவர்கள் கோபத்தால் என் மீது வீசிய அம்பு என் காகத்தைக் கொன்று விட்டது.பயங்கரமான விலங்குகளால் சூழப்பட்ட குகையில் நுழைவது போல துன்பம் தருவது, கொடியவர்களால் சூழப்பட்ட அரச நீதியில் நுழைவது.ஆயினும் அரச நீதி என்னும் நதியைக் காகம் என்னும் படகைக் கொண்டு கடந்து வந்தேன்.

உன் அரசு வஞ்சகர்களால் சூழப்பட்டுள்ளது.இந்நிலையில் நீ யாரிடமும் நம்பிக்கை வைக்க முடியாது.நிலைமை இப்படியிருக்கையில்..நான் எப்படி இங்கு தங்குவது? தீமையின் கை இங்கு ஓங்கி உள்ளது.நன்மை செய்பவன் கொல்லப்படுகிறான்.தீமை செய்பவனை யாரும் கண்டுக் கொள்வதில்லை.நல்ல ஆட்சியில் நல்லவர் துன்பம் இல்லாது இருப்பர்.தீயவர் தண்டிக்கப் படுவர்.உனது ஆட்சி சுழல்கள் நிறைந்த அபாயகரமான நதியாக இருக்கிறது.நீயோ நஞ்சு கலந்த உணவாக இருக்கிறாய்.அதாவது தீயோரின் ஆலோசனைதான் உன் நெஞ்சில் நிறைந்துள்ளது.

உன் அதிகாரத்திற்குட்பட்டவர்கள் மிக்க கொடியவர்களாக உள்ளனர்.நீயோ பாம்புகள் நிறைந்த கிணறு போல் இருக்கிறாய்.முட்புதர்கள் பின்னிப் படர்ந்து தண்ணீர் வெளியே தெரியா நதியாய் இருக்கிறாய்.உடன் இருப்போரால் உனக்கு அழிவு நிச்சயம்.உனது ஆட்சியின் மாட்சியையும் மக்களின் வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவே இங்கு வந்தேன்.நாடாளும் ஆசைகளையும் ஐம்புலன்களையும் அடக்கி மக்களிடம் அன்புள்ளவனாக ஆட்சி செய்கிறாயா என்பதை அறிய முற்பட்ட போது உன்னிடம் பெரிய குற்றம் ஏதும் தெரியவில்லை.ஆனால் அமைச்சர்கள் அப்படியில்லையே.அவர்கள் தாகத்திற்கு உதவாத தண்ணீர் போல உள்ளனர்.நீயோ பசித்தவனுக்குக் கிடைத்த உணவு போல இருக்கிறாய்.

உனது நன்மையை நாடுபவன் நான் என்பதை உணர்ந்த அமைச்சர்கள் என்னிடம் வெறுப்பு கொண்டுள்ளனர்.அவர்கள் செய்த தவறுகளை நான் சுட்டிக்காட்டியதை நான் செய்த பெரிய குற்றமாகக் கருதுகின்றனர்.நீயும் அவர்களிடம் சற்று விழிப்பாக இருக்க வேண்டும்' என்று கூறினார் முனிவர்.

மன்னன் முனிவரை நோக்கி,'உமது துன்பத்தை நான் போக்குகிறேன்.நீர் இங்கேயே தங்கி இருக்கலாம்.உம்மை வெறுப்பவரை நான் வெறுக்கிறேன்.அவர்களுக்கு எத்தகைய தண்டனை தரப் போகிறேன் என்பதை பாருங்கள்.நான் நீதியை நிலைநாட்டி மக்களுக்கு நன்மை செய்யத் தாங்கள் உதவி செய்ய வேண்டும்' என்றான்.

முனிவர் மன்னனிடம், 'நீ காகம் கொல்லப்பட்ட செய்தியை வெளியே சொல்ல வேண்டாம்.ஆனால் உனது அமைச்சர்களின் அதிகாரத்தைப் பறித்து விடு.பின் ஏதோ ஒரு காரணத்தைக் கூறி அவர்களைக் கொலை செய்.ஒரு குற்றத்தைப் பல பேர் சேர்ந்து செய்வாராயின் அவர்கள் தப்பித்துவிடுவார்கள்.பொருளின் தன்மையால் தான் ஒருவரிடம் செருக்குத் தோன்றுகிறது.அந்தப் பொருளை அப்புறப்படுத்தி விட்டால் அகங்காரம் குறையும்.அறிவுடை அரசன் கருத்தை வெளியே சொல்லமாட்டான்.மனதிலேயே வைத்திருப்பான்.தீயவரைத் தீயவரைக் கொண்டே அழிக்க வேண்டும்.இந்த ரகசியம் எங்கே வெளியே தெரிந்துவிடுமோ என்றுதான் உனக்கு இவ்வளவு தூரம் சொல்ல வேண்டியதாயிற்று.மக்கள் நலனை நான் பெரிதும் விரும்புகிறேன். வேந்தே!இப்போது என்னைப்பற்றி உரைக்கின்றேன்..என் பெயர் காலகவிருக்ஷயன் என்பதாம்.உன் தந்தையும், என் தந்தையும் உற்ற நண்பர்கள்.அந்தப் பிணைப்பு வழி வழியாய் தொடர வேண்டும் என விழைகிறேன்.இப்போது நீ அரசன்.உன் பகைவரை நீ நண்பன் எனக் கருத வேண்டாம் என மீண்டும் உரைக்கின்றேன்.அரசாட்சியை அமைச்சரிடம் கொடுத்து விட்டு ஏன் துன்பம் அடைகிறாய்? அவர்களுக்கு அதிக அதிகாரம் கொடுப்பது தவறாகும்'" என்றார்.

நல்லது கெட்டது உணர்ந்த கோசல நாட்டு மன்னனும் முனிவரின் நல் யோசனைகளை ஏற்று நாட்டை நன்கு ஆண்டான்.

"தருமா! உத்தமமான யோசனைகளை ஏற்றுக் கொள்ள யாரும் தயங்கக் கூடாது என்பதனையும், அதே நேரத்தில் தீயவர்களின் யோசனையை ஏற்கக் கூடாது என்பதனையும் இதன் மூலம் அறிவாயாக" என்றார் பீஷ்மர்.
 

Wednesday, May 18, 2011

151-தானம் கொடுப்பவர்..ஏற்பவர் இயல்புகள் (3)





சுனஸ்ஸகன் யாதுதானி என்னும் அந்தப் பேயை நோக்கி, 'நான் நாய்களுக்கு எப்போதும் துணைவனாவேன்.இவர்கள் கூறியது போல என் பெயரைப் பகுத்துக் கூறமுடியாது.' என்றான்.

யாதுதானி அவனிடம் 'உம் பேச்சு தெளிவாக இல்லை.உச்சரிப்பும் சரியாக இல்லை.ஆதலால் இன்னொருமுறை உம் பெயரைச் சொல்லவும்' என்றாள்.நான் ஒரு போதும் கூறியதை திரும்பக் கூறமாட்டேன் என்று கூறியவாறு சுனஸ்ஸகன் திரிதண்டத்தால் அந்தப் பேயை ஓங்கி அடித்துக் கொன்றான்.திரிதண்டத்தை பின் தரையில் ஊன்றித் தரையில் அமர்ந்தான்.

பின் அனைத்து ரிஷிகளும் தாமரைக் கிழங்குகளையும்,தாமரை மலர்களையும் வேண்டிய அளவு எடுத்துக் கொண்டு குளக்கரையில் ஏறினர்.பின் தரையில் அவற்றை வைத்துவிட்டு தன்னீடிர் இறங்கி தர்ப்பணம் செய்தனர்.கரை எறி பார்க்கையில் தாமரைக் கிழங்குகளைக் காணவில்லை. 'எந்தப் பாவி கிழங்குகளை எடுத்துப் போனானோ' என வருந்தினர்.ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொண்டனர்.

அத்ரி, 'தாமரைக் கிழங்கை திருடிச் சென்றவன் பசுவைக் காலால் உதைத்தவன் ஆவான்! காலமல்லாத காலத்தில் வேதம் ஓதியவன் ஆவான்,நாய்களை இழுத்துச் செல்லும் இழிநிலையை அடைவான்.சந்நியாசம் ஏற்றும்,காமத்தை விடாத போலித் துறவி ஆவான்.அடைக்கலம் அடைந்தவனைக் கொன்ற பாவி ஆவான்' என்றார்.

காச்யபர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் எல்லாரிடமும் எல்லாவற்றையும் பேசும் நாவடக்கம் அற்றவனாவான்.அடைக்கலைப் பொருளை அபகரித்துக் கொள்பவனாவான்.பொய் சாட்சி சொல்பவன் ஆவான்.புலால் உண்ணும் பாவத்தைச் செய்பவனாவான்' என்றார்.

ஜமதக்னி, 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தண்ணீரை மாசுபடுத்தியவன் ஆவான்.பசுவை அடித்துத் துன்புறுத்திய பாவி ஆவான்.காலம் அல்லாத காலத்தில் மனைவியைப் புணர்ந்தவன் ஆவான்.எல்லோரையும் பகைத்தவன் ஆவான்' என்றார்.

பரத்வாஜர்,'தாமரைக் கிழங்கைத் திருடியவன் தருமத்தைக் கை விட்டவன் ஆவான்.பெண்களுக்குத் தீமை புரிந்தவன் ஆவான்.குருவை பழித்தவன் ஆவான்.' என்றார்.

கௌதமர். 'தாமரைக் கிழங்கைத் திருடியவன், வேதங்களை மறந்தவன் ஆவான்.மூன்று அக்கினிகளைத் துறந்தவன் ஆவான்' என்றார்.

விசுவாமித்திரர், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் , தாய் தந்தையைக் காப்பாற்றதவன் ஆவான்.வேதத்தை வஞ்சகமாகக் கற்றவன் ஆவான்.செருக்குடையவன் ஆவான்' என்றார்.

அருந்ததி,'தாமரைக் கிழங்கைத் திருடியவள் மாமியாரை அவமதிப்பவள் ஆவாள்.விருந்தினரைப் புறக்கனித்தவள் ஆவாள்.கணவனால் விரும்பத்தகாதவள் ஆவாள்' என்றாள்.

பசுஸகன்' தாமரைக் கிழங்கைத் திருடியவன் சந்ததியில்லாதவன் ஆவான்.ஏழையாவான்.அடிமையாகப் பிறப்பான்.நாஸ்திகன் ஆவான்' என்றார்.

சுனஸ்ஸகன், 'தாமரைக் கிழங்கைத் திருடியவன் ரித்விக்குகளில் ஒருவனான அத்வர்யு என்பவனுக்கும்,சாம வேதம் ஓதியவனுக்கும்,அதர்வண வேதம் ஓதியவனுக்கும் பெண்ணைக் கொடுத்தவன் ஆவான்' என்று கூறினான்.

ரிஷிகள் உடன் அவனை நோக்கி, 'உன் சபதம் அந்தணர்களுக்கு விருப்பமானது.ஆதலால் தாமரைக் கிழங்குகளைத் திருடியது நீதான்' என்று கூறினர்.

உடன் சுனஸ்ஸகன், "உண்மைதான்..கிழங்குகளை எடுத்தவன் நான்தான்.ரிஷிகளே உங்களைக் காக்கவே நான் இங்கு வந்தேன். உங்களைக் கொல்ல விருஷாதர்ப்பியினால் அனுப்பப் பட்ட யாதுதானி என்னும் பேய் என்னால் கொல்லப்பட்டது.நான் இந்திரன்.ஆசையை அகற்றியதால், அழியாத உலகங்கள் உங்களுக்குக் கிடைத்தன.உடன் புறப்பட்டு அந்த உலகங்களை அடையுங்கள்' என்று கூறினான். பின் ரிஷிகள் அனைவரும் சுவர்க்கத்திற்குச் சென்றனர்.

'தருமா..மிக்க பசியால் வாடிய போதும், அரசனால் பரிசுகள் வழங்கப்பட்டப் போதும் அந்தப் பரிசுகளில் ஆசை கொள்ளவில்லை ரிஷிகள்.இவர்கள் வரலாற்றைக் கொண்டு, 'எந்த நிலையிலும் ஆசை அற்றவர் மறுமை அடைவர்" என்பதை உணர்வாயாக' என்றார் பீஷ்மர்.