Tuesday, September 28, 2010

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

113-அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?

தருமர் பீஷ்மரை நோக்கி 'வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்?' எனவும், 'அரசன் தனக்குத் துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? ' என வினவ பீஷ்மர் கூறலானார்.

.உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களைப் பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான்.அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் நற்குலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும்.லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும்.எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களைப் பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார்.அரசனுக்குத் துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களைச் சமமாக கருதத் தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும்.நாட்டின் பொருளைப் பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும்.ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும்.நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும்.நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும்.அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும்.எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்றுக் கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான்' என்றார்.

மன்னருக்குள்ள பண்புகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூறப் பீஷ்மர் உரைக்கலானார்.

Monday, September 27, 2010

112-மூடன் தரக் குறைவான வார்த்தையைக் கூறினால்....

தருமர் பீஷ்மரைப் பார்த்து..'பிதாமகரே! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்கப் பட்டால் என்ன செய்ய வேண்டும்? என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.

'தருமரே! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்துக் கொள்ள வேண்டும்.ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன் பழிக்கும் ஒருவனுடைய புண்ணியத்தைத் தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்குக் கொடுத்துத் தன்னைத் தூய்மை செய்து கொள்கிறான்.இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்தக் கூடாது.அவன் உலகத்தில் பகையைப் பெற்றுப் பயனற்ற கதியை அடைவான்,போகும் இடமெல்லாம்"இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான்.அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான்" எனத் தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களைச் சகித்துக் கொள்ள வேண்டும்.

பிறரைப் பழித்துப் பேசி பழக்கப்பட்ட ஒருவன் தன் தாயைப் பற்றிக் கூட அடாத பழி கூறுவான்.மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் மயில் போல அவன் மகிழ்ச்சி அடைவான்.பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சுக் கொடுக்கக் கூடாது.எவன் நேரில் புகழ்ந்தும் மறைவில் குறை கூறியும் பேசுகிரானோஅவன் உலகில் நாய் போன்றவன் ஆவான்.ஞானமும், கல்வியும்,தருமமும் இழந்தவன் ஆவான்.அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன.ஆதலால், நல்லறிவுள்ளவன் பாப புத்தியுள்ளவனும்,விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தைப் போல உடனே விலக்க வேண்டும்.

மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தைச் சொலபவன் பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களைத் தானே வெளியிடுபவன் ஆவான்.அடக்கமின்றி பிறர் பழி கூறித் திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையைப் போலவும், தெருத் தெருவாகச் சுற்றி அலையும் நாயைப் போலவும் கருதி விலக்க வேண்டும்.நாவடக்கம் இன்றிப் பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும்.உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் தாழ்ந்தோருடன் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள்.,கடிப்பார்கள்.,புழுதி வாரி இறைப்பார்கள்.,பல்லைக் காட்டி பயமுறுத்துவார்கள்.

கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்துக் கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள்.ஏசுபவன் பழியேந்திச் செல்வான்.,பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான்.தருமா..நீ அற்பர் சொல்லைப் பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக' என்றார் பீஷ்மர்.

Thursday, September 23, 2010

111-கடினமான துன்பங்களைக் கடக்கும் வழி

தருமர் 'கடினமான துன்பங்களைக் கடப்பது எப்படி?' என பீஷ்மரிடம் வினவ..பீஷ்மர் உரைக்கிறார்.

'யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ..அவர்..கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தருமத்தை ஆடம்பரத்திற்காகச் செய்யாமல் தம் தேவையைக் குறைத்துக் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ,தமக்குத் துன்பம் செய்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ,யார் பிறருக்குக் கொடுத்துக் கொண்டும் தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ,யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தருமத்தை உணர்ந்து தாய்,தந்தையைப் போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்குத் துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியைக் கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் தம் முன்னோர்களுக்காகத் தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்கச் செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் மது, மாமிசம் மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும்,சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும்,உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் எல்லாக் கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் இந்திரனும்,விஷ்ணுவும்,ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.

தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந் துன்பங்களைக் கடத்தற்காகச் செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன்.நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களைக் களைவாயாக!" என்று கூறி முடித்தார் பிதாமகன்.

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

Thursday, September 2, 2010

110-குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை

தருமர் பீஷ்மரை நோக்கி 'ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரைத் தன் வசமாக்கிக் கொள்ளத்தக்க வழிகள் யாவை' என வினவினார்.

அதற்கு பீஷ்மர், 'இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..

கண்ணபிரான்..நாரதரை நோக்கி..'நாரதரே..பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும் ரகசியத்தை அறியத் தக்கவரல்லர்.ஆதலால் உம் மேன்மையை அறிந்துக் கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்துச் சில உண்மைகளைத் தெரிந்துக் கொள்ள விரும்புகிறேன்.நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன்.புசிக்கத் தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன்.மற்றொரு பாதியைச் சுற்றத்தாருக்குத் தருகிறேன்.அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன.எனக்குத் துணை செய்வார் யாரும் இல்லை.அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை..விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை.

தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய்..எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன்.இந்நிலையில் எனக்கும்,என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன்' என்று கேட்டுக் கொண்டார் .

நாரதர்.."கண்ணா..ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு.ஒன்று உட்பகை.மற்றது வெளிப்பகை.சுற்றத்தாரால் வருவது உட்பகை.மற்றோரால் வருவது வெளிப்பகை.வெளிப்பகையை விடக் கொடியது உட்பகை.நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டைத் திரும்ப பெற எண்ணுகிறீர்.கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண வி ரும்புவதைப் போன்றது.ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும்.ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது.அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல.மென்மையானது..மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' என்றார்.

கண்ணன் நாரதரைப் பார்த்து 'இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது?' என்று வினவ, நாரதர்,'கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல்..'என்றார்.'இனிய சொற்கள் கூர்மையான அரத்தைப் போன்றவை.இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும்.வேண்டிய பொருள்களைக் கொடுத்து அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டும்.

எப்போதும் சுற்றத்தாரைக் காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும்,புகழும்,ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.அனைவரும் உன்னச் சார்ந்தே உள்ளனர்.உயிர்கள் அனைத்துக்கும் நாதரே...நீர் அறியாதது ஏதுமில்லை' என்று முடித்தார்.

இதை எடுத்து உரைத்த பீஷ்மர்..சுற்றந் தழுவுதலின் மேன்மையைத் தருமருக்கு உணர்த்தினார்.

இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்தப் பட்டது.

(பீஷ்மரின் உரையாடல் தொடரும்)

(பீஷ்மரின் அறிவுரைகள் தொடரும்)

Sunday, August 29, 2010

109-நண்பன்..பகைவன்..சுற்றம்..

தருமர், பீஷ்மரிடம் 'கங்கை மைந்தா..மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது.அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி? அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்? அரசன் எப்படிப்பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்..எவன் நம்பத்தகாதவன்' என்றெல்லாம் வினவினார்.

பீஷ்மர் சொல்கிறார்..'அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்கப் பட்டவன்.)பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை..பரம்பரையாய் உதவி செய்பவன்),சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து ஏற்படுத்தப்பட்டவன்) என நான்கு வகை நண்பர்களுண்டு.நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன்.அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான்.தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம்.ஆனால் அவனுக்குத் தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்லக் கூடாது.அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன்.அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கைக் கொள்ள நேரிடும்.நட்பு,பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல.ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும்,அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு.மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும்,சகஜனும் உத்தமர்கள்.மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.

அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது.நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும்.கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள்.அவமதிப்பார்கள்.மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான்.நல்லவன் கெட்டவன் ஆகலாம்..கெட்டவன் நல்லவனாகலாம்.நண்பன் பகைவன் ஆகலாம்..பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு.ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது.முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள்,இன்பம் அனைத்தும் நாசமாகும்.ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது.அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும்.எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையைப் பெற வேண்டும்.

நல்ல தோற்றமும்,அழகும்,கம்பீரக் குரலும்,பொறுமையும்,நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான்.தருமா...அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாகக் கொள்ள வேண்டும்.நல்லறிவு படைத்தவர்களையும்,நினைவாற்றல் மிக்கவர்களையும்,நல்ல இயல்பு உள்ளவர்களையும் ,தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

புகழ் நோக்கம் உடையவனும்,நீதியை விரும்புபவனும்,காமம்,அச்சம்,சினம் இல்லாதவனும்,அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்துக் கொள்ளாதவனும் ஆகிய ஒருவனிடம் அமைச்சுப் பதவியைத் தர வேண்டும்.அறம்,பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்கச் செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும்.ஆனாலும்..தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது.அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும்.ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள்.அதனால் காரியம் நிறைவேறாது.

மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும்.அரசனின் பெருமைக் கண்டு சுற்றம் மகிழாது.சுற்றத்தாரால் துன்பமும் உண்டு.இன்பமும் உண்டு.சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர்.ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.

சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான்.எனவே, சுற்றத்தாரைச் சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப் படுத்த வேண்டும்.அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதைச் செய்யக் கூடாது.அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும்.குணமோ,குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது.இவ்விதம் பகைவர்,நண்பன்,சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான்' என்று உரைத்தார் பீஷ்மர்.

(பீஷ்மருடன் உரையாடல் தொடரும்)

Friday, August 20, 2010

108-மனக்கவலை மறைய..

தருமர்..'மனதில் கவலை அற்றிருக்கவும்,அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்..

தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும்.மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும்.

நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும்.மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள்.பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும்,நீரும் அளித்து பாலைக் கறக்க வேண்டும்.ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலைப் பெற முடியாது.அதுபோல தக்க உதவிகளைச் செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.மக்களிடம் அதிக வரிச் சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.வரி வசூலிப்பதில் மாலைக் கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும்.கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான்.கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)

குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும்.குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும்.அறநெறி கெடாமல் குடிமக்களைக் காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணியப் பயனை இன்பமாக அனுபவிப்பான்.யாகம்,தானம்,தவம் ஆகியவற்றைச் செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான்.இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான்.தருமா..இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு' என்றார் பீஷ்மர்.

(பீஷ்மரின் அறிவுரை தொடரும்)

Saturday, August 7, 2010

107-முப்பத்தாறு குணங்கள்

'தருமா..அறம்..பொருள்..இன்பம்..இம்மூன்றையும் காலத்திற்கேற்றபடி போற்ற வேண்டும்.காலம் அரசனுக்குக் காரணமா..அல்லது அரசன் காலத்துக்குக் காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது.அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால்...அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும்.அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும்.அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர்.மக்களின் குரலும்,நிறமும்,மனமும் தெளிவாக விளங்கும்.அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை.கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள்.உழவு இன்றியே பூமி பயன் தரும்.இவை கிருதயுக தருமம்.அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும்.அக் காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும்.அந்தக் காலத்தில் உழுதால்தா பூமி பயனைத் தரும்.

அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டுப் பாதி பாகத்தைத் தொடந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும்.அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும்.அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும்.அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும்.கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும்.தருமத்தை காண முடியாது.நான்கு வருண தருமங்கள் சிதறிப் போகும்.வியாதிகள் பெருகும்.ஆடவர் அகால மரணமடைவர்.மகளிர் விதவை ஆவர்.ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணன் என உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக' என்றார் பீஷ்மர்.



தருமர்..'இம்மையிலும்..மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை?'என்று பீஷ்மரிடம் கேட்க..

பீஷ்மர் சொல்கிறார்..'ஒரு மன்னன் 36 குணங்களைக் கடை பிடிக்க வேண்டும்.அவை

1) விருப்பு, வெறுப்பு இன்றித் தர்மங்களைச் செய்தல்

2) பரலோகத்தில் விருப்புடன் நட்புப் பாராட்டுதல்

3)அறவழியில் பொருளை ஈட்டுதல்

4)அறம் பொருள்கட்கு அழிவின்றி இன்பத்தைப் பெறுதல்

5)யாருடனும் அன்புடன் பேசுதல்

6)நல்லவர் அல்லாதார்க்குத் தராத கொடையாளியாக இருத்தல்

7)தற்புகழ்ச்சியின்றி இருத்தல்

8)கருணையுடன் இருத்தல்

9)கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்

10)பகைவன் எனத் தீர்மானித்துப் போரிடல்

11)நற்குணம் அற்றவரிடம் தூதர்களைச் சேராது இருத்தல்

12)பிறர்க்குத் துன்பம் தராது பணி புரிதல்

13)சான்றோரிடம் பயனை அறிவித்தல்

14)பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்

15)துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்

16)தக்காரைச் சார்ந்திருத்தல்

17)நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்

18)ரகசியத்தை வெளியிடாதிருத்தல்

19)உலோபிகள் அல்லாதார்க்குக் கொடுத்தல்

20)தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்

21)அருவருப்படையாமல் மனைவியைக் காத்தல்

22)தூய்மையுடன் இருத்தல்

23)பல பெண்களுடன் சேராதிருத்தல்

24)நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்

25)வழிபடத் தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்

26)வஞ்சனையின்றிப் பெரியோர்க்குப் பணிவிடை செய்தல்

27)அடம்பரமின்றித் தெய்வ பூஜை செய்தல்

28)பழிக்கு இடமில்லாப் பொருளை விரும்புதல்

29)பணிவுடன் பணி புரிதல்

30)காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்

31)பயனுள்ளவற்றையே பேசுதல்

32)தடை சொல்லாது உதவி புரிதல்

33)குற்றத்திற்கேற்பத் தண்டித்தல்

34)பகைவரைக் கொன்றபின் வருந்தாதிருத்தல்

35)காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்

36)தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை

ஆகியவையாகும்..

( பீஷ்மரின் அறிவுரை தொடரும்)