Monday, December 27, 2010

131-ஞானம்,தவம்,தானம்

தருமர் பீஷ்மரிடம்..'ஞானம்,தவம்,தானம்..இவற்றுள் சிறந்தது எது? என வினவ பீஷ்மர் கூறுகிறார்.

'முன்னொரு காலத்தில் வியாசருக்கும்,மைத்ரேயருக்கும் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கூறுகிறேன்.ஒரு முறை வியாசர் யாருக்கும் தெரியாமல் மைத்ரேயரை சந்தித்தார்.மாறுவேடத்துடன் வந்த வியாசருக்கு அறுசுவை உணவளித்தார் மைத்ரேயர்.உணவு உண்டு எழுந்திருக்கும் போது வியாசர் நகைத்தார்.அது கண்ட மைத்ரேயர் வியாசரை நோக்கி'தாங்கள் நகைத்தற்குரிய காரணத்தை நான் தெரிந்துக் கொள்ளலாமா? உம்மிடம் தவச்செல்வம் இருக்கிறது.என்னிடம் பொருட் செல்வம் இருக்கிறது.இவற்றின் தன்மைகளை விளக்கவேண்டும்" என்றார்.

வியாசர் சொன்னார் 'தவச் செல்வத்திற்கும் பொருட் செல்வத்திற்கும் சிறிது வேறுபாடு உண்டு.தவச் செல்வம் எல்லா நன்மைகளையும் தருவதனால் எல்லாவற்றையும் விடச் சிறந்ததாகும்.நீ மிகுதியானப் பொருளைச் செலவழித்தாலும் அதிகமாக இன்சொல் கூறியதாலும் எனக்கு நகையுண்டாயிற்று.வேதம் என்ன சொல்கிறது தெரியுமா?பிறருக்குத் தீங்கு இழைக்கக் கூடாது.கொடுக்க வேண்டும்.உண்மையே பேச வேண்டும் என்ற மூன்றையும் வேதம் வற்புறுத்திக் கூறுகிறது.தாகத்துடன் இருப்பவனுக்குத் தன்ணீர் தருவது பெரும் கொடையாகும்.தேவர்களை நீர் வழிபட்டதனால் என் தரிசனம் உமக்குக் கிடைத்தது.

உமது தூய தானத்தினாலும், தவத்தினாலும் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.உம்மிடம் இருந்து நல்ல மணம் தூரத்திலும் வீசுகிறது.இது உமது கர்மப் பலன் என்றே கருதுகிறேன்.சந்தன மணம் போன்றதுதான் நல்ல செயல்களால் வீசும் மணமும்.தானம் தான் எல்லாப் புண்ணியங்களையும் விட மேலான புண்ணியம்.மற்றப் புண்ணியங்கள் இல்லாவிடினும் தானமே மிகச் சிறந்ததாகும்.இதில் ஐயம் இல்லை.தானம் செய்பவர்கள் உயிரையும் தரத் தயாராய் இருப்பர்.அவர்களிடத்தில் தான் தருமம் நிலை பெற்றிருக்கிறது.

ஆகமங்களைப் பயில்வதும், துறவு மேற்கொள்வதும், ஐம்பொறிகளை அடக்கித் தவம் செய்வதும் ஆகிய அனைத்தையும் விடத் தானம் மிக உயர்ந்ததாகும்" என்றார்.



132-பாவத்திற்குக் காரணம்..



பாவத்திற்குக் காரணம் யாது என்ற தருமரின் வினாவிற்கு பீஷ்மர் அளித்த பதில்

'தருமா! பெரிய முதலை போன்றது பேராசை.அதுவே பாவத்திற்கு இருப்பிடமாகும்.பேராசையிலிருந்து பாவமும், துன்பமும் உண்டாகின்றன.மேலும் பேராசை இம்சைக்குக் காரணமாகிறது.பேராசையால் சினம் உண்டாகிறது.மடமை, சூழ்ச்சி,மானக்கேடு,பொறாமை,பொருள் நஷ்டம்,பழி ஆகிய அனைத்திற்கும் பேராசையே காரணமாகும்.மக்கள் தம் தீய செயல்களை விடாமல் இருப்பதற்கும் காரணம் பேராசைதான்.எவ்வளவுதான் இன்ப போகங்களை ஒருவன் அனுபவித்தாலும் அவனது ஆசைக்கு அளவே கிடைசாது.பல நதிகள் வந்து விழுந்தாலும் கடல் நிரம்பாதது போல பேராசை உள்ளவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் மன நிறைவு ஏற்படாது.தேவர்களும், அசுரர்களும் கூடப் பேராசையின் உண்மைத் தன்மையை உணரவில்லை

அறியாமையையும்,ஐம்பொறிகளையும்,மனத்தையும் வென்ற மனிதன் பேராசையை வெற்றி கொள்ள வேண்டும்.மனதை அடக்காத பேராசைக்காரரிடம் வீண் ஆடம்பரம்,துரோகம், புறங்கூறல்,பொறாமை ஆகியவை இருக்கும்.மிகப் படித்த அறிஞர்கள் ஆகமக் கருத்துக்களை நன்கு மனதில் வைத்திருப்பர்.பல ஐயங்களை விலக்குவர்.ஆனால் பேராசை காரணமாக அவர்கள் அறிவு இழந்து எப்போதும் துன்புறுவர்.அவர்கள் உள்ளம் கொடூரமானது.ஆனால் தேனொழுகப் பேசுவர்.தருமத்தின் பெயரால் அவர்கள் உலகைக் கொள்ளையடிப்பர்.

மன்னனே! நேர்மையானவர்களைப் பற்றிக் கூறுகிறேன்.அவர்கள் மேல் உலகம் இல்லையென்றாலும் ஈதலே கடன் என்று எண்ணுபவர்.விருப்பு வெறுப்பு அற்றவர்.பெரியோர்களின் சொற்களில் சிந்தை செலுத்தும் இயல்பினர்.புலனடக்கம் உடையவர்.வாய்மையைப் போற்றுபவர்.இன்பத்தில் திளைக்க மாட்டார்கள்.துன்பத்தில் மூழ்க மாட்டார்கள்.இரண்டையும் சமமாகக் கருதுவர்.அவர்கள் செய்யும் தருமம் பிறர் பாராட்டுதலுக்கோ புகழுக்கோ அல்ல.பயம்,சினம்,ஆசை ஆகியவை இவர்களிடம் நெருங்கா.இத்தகையோரை நீ போற்றுதல் வேண்டும்.

No comments:

Post a Comment