Thursday, April 15, 2010

97-அனைவரும் பீஷ்மரிடம் செல்லுதல்

அரசாட்சியை ஏற்ற தருமர்..பின்..கண்ணன் உறையும் இடம் சென்றார்.கண்ணன் அப்போது தியானத்தில் இருந்தார்..அது கண்டு வியந்த தருமர்..'மூவுலக நாயகனே..உலக உயிர் அனைத்தும் உம்மை நோக்கி தியானம் செய்கையில்..நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்..' என வினவினார்.

'யுதிஷ்டிரா! அம்புப் படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார்.ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது.எவரது நாணொலிக் கேட்டு..இந்திரனும் நடுங்குவானோ..அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.முன்னொரு சமயம்..மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்த்ப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது.தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும்..வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் வேத வேதாங்கங்களையும் முக்காலங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.யுதிஷ்டிரா..அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும்.ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக" என்றார் கண்ணன்.

பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் கண்ணீர் விட்டார்.'வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன்..'என நா தழுதழுக்க வினவினார்.

பின்னர்..கண்ணனும், பாண்டவர்களும்..பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.

1 comment:

Vidhoosh said...

i had always loved this part of Mahabharat. Lovely Sir. thanks to you. :)

Post a Comment